சனி, 24 ஏப்ரல், 2021

ஆவாரை

 ஆவாரை 




அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். இதன் இலை, பூக்கள், பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்துமே மருந்தாவது மட்டுமின்றி  பயிர்களுக்கும் சிறந்த உரமாக விளங்குகிறது.   

ஆவாரையின்  அனைத்துப் பகுதிகளும் மிக்க துவர்ப்புடையது, காய்ச்சலைப் போக்கும் குணம் உடையது, கல்லீரல் மற்றும்  மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்  தன்மையுடையது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்  கொள்ள உதவுவது. 

உடலின் பல பகுதிகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டு பல  கேடுகளை உண்டாக்கிப் பின் புற்றுநோய்க்குக் காரணமாக விளங்கும் நச்சுக்களை(Free Radicals) விரைந்து வெளியேற்றும் குணம் கொண்டது. மனிதருக்கு நோய் செய்யும் நுண்கிருமிகள் எதுவாயினும் அழித்து அகற்றும் வல்லமை உடையது. 

ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் பலம் பெறும், பற்கள் கெட்டிப்படும். 

இது உடலை வற்றச் செய்யும் மருத்துவ குணம் உடையது. மேலும், உடலுக்கு டானிக்காக உரம்  தரக்கூடியது. ஆவாரையின் விதைகள் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை உடையது,  குருதியை நீர்மைப்படுத்தக்கூடியது உடல் தேற்றியாக விளங்கக் கூடியது. 

ஆவாரை நெஞ்செரிச்சல், அமில மேல்வரத்து(Reflex), ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், மலச்சிக்கல், ரத்த மற்றும் சீதபேதி, நீர்க்கசிந்து அரிப்பைத் தரக்கூடிய ‘எக்ஸீமா’ எனும் தோல் நோய், கண்களின் எரிச்சல், புகைச்சல் மற்றும் புளிப்பு உண்டாகுதல், உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்), மூட்டுக்களில் ஏற்படும் வலி, சிறுநீருடன் விந்து கலந்து வெளியேறுதல், வயிற்று வலி, உடலில் ஏற்படும் பலவித வீக்கங்கள், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் தொற்றுக்கள் போன்ற மிக நீண்ட பட்டியலான நோய்களைத் தீர்த்து வைக்கும் திறன் படைத்தது. 

ஆவாரம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், சருமம் பொன்னிறமாகி அழகு கூடும், எந்த வீக்கமும் விரைவில் கரைந்து போகும், உடலின் வறண்ட தன்மை மாறும், நாவறட்சி நீங்கும், உடலில் உப்பு போன்ற வெண்மை படிதல் தடுக்கப்பட்டு துர்நாற்றம் தரக்கூடிய கற்றாழை வாடை அகலும்.  

பல வகைப்பட்ட சிறுநீர் கோளாறுகளை அகற்றும் திறன் கொண்டது, சிறுநீரோடு சர்க்கரை கலந்து வெளியேறுதலும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலும், சிறுநீர் தொற்றும் ஆவாரையால் ஒழிந்து போகும் என்று பாடியிருக்கிறார் அகத்தியர்.

இவற்றை மனதில் கொண்டுதான் ஆவாரையின் ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழி தமிழில் நிலைபெற்றது எனலாம்.

ஆவாரையின் மருத்துவப் பயன்கள் : 

* ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்; பற்கள் பலம் பெறும். இதையே உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும். 

* ஆவாரை விதையைக் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும். 

* ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும். 

* ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும். 

* ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும். 

* ஆவாரைச் செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும். 

* ஆவாரைப் பஞ்சாங்கத்தை குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின் அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர் சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த உடல் பலம் பெறும். அதிக சிறுநீர் போவது மட்டுப்படும். 

* ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும் போகும். 

* ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். 

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும். 

* ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும். 

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும். 

* ஆவாைரயின் வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை நோயும் கட்டுக்கடங்கும். 

* ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும். 

* ஆவாரையைத் தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும். 

ஆவாரை சாலை ஓரங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. அதன் மிகப் பெரிய மருத்துவ குணம் தெரிந்து இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம். 

சிவகரந்தை

சிவகரந்தை 




மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும். இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது. 

சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும். நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும். 

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள், ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. 

  • சிவகரந்தையின் வேரை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். சூரணம் செய்தும் சாப்பிடலாம். 
  • சிவக்கரந்தை சூரணம் மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது, சிறுநீரக நோய்களை போக்க வல்லது, உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும், நல்ல பசியை  தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. 
  • கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், பேதி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர தலை, மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும். 
  • சிவ கரந்தையின் வேருடன் சீரகம் போட்டு கசாயம் செய்து காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும். 
  • கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும். 
  • இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும்,  ஆண்மை பெருகும்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பழச்சாறுகள் - Juices

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 

நாம் சோர்வுற்ற தருணங்களில், நமக்குப் புத்துணர்ச்சி தரும் என நம்ப வைக்க ஏதோ ஒரு பானம் நமக்குத் தேவையாக இருக்கிறது. இன்றைய டைட் ஷெட்யூல் வாழ்க்கைமுறைக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்களே தேவை. அப்படி அபார சத்துக்களை அள்ளி அள்ளித் தருபவை, பழங்களில் இருந்து எடுக்கப்படும் ஜூஸ்கள். எந்த ஜூஸால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நாம் பல பழச்சாறுகளை அருந்திக்கொண்டுதான் இருக்கிறோம். 

என்னென்ன ஜூஸ் குடித்தால் என்ன பலன்

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரத் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும். அதோடு முடி உதிர்தல், பொடுகுத் தொந்தரவு போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடுவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது. கொழுப்புச் சத்தையும் குறைக்கும். ஆப்பிள், உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

புற்றுநோயாளிகள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், எடை குறைக்க நினைப்போர் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அளவுடன் சாப்பிடலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். எனவே, நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அல்சரை குணப்படுத்தும். இந்த பானத்தில் வைட்டமின் பி, சி, மற்றும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி, சீராகச் செயல்படவைக்கிறது.

எலும்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் பிரச்னை இருப்பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்றது.

அன்னாசி ஜூஸ்

அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இயங்கும். ரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும் சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசி ஜூஸை தவிர்க்கலாம். கெட்டக் கொழுப்பை குறைக்கும்.

தொண்டையில் தொற்று, இருமல், தொப்பை இருப்பவர்கள் சாப்பிட பலன்கள் கிடைக்கும்.

பப்பாளிப்பழ ஜூஸ்

பப்பாளிப்பழம் உடல் நலனுக்கு உகந்தது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பழங்களில் மிக மிகக் குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளி ஜூஸ் அருந்திவந்தால், உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

கண் பிரச்னையிருப்போர், பார்வைக் குறைபாடு, வறண்ட சருமத்தினர், உடல்பருமானவர், ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது.

திராட்சைப்பழ ஜூஸ்

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதால், பெண்கள் இதனை அருந்தலாம். திராட்சைப்பழ ஜூஸைத் தொடர்ந்து காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர, ஒற்றைத் தலைவலி குணமாகும். ஆஸ்துமாவையும் குணப்படுத்தக் கூடியது. நுரையீரலுக்கு நல்லது.

மார்பகப் புற்றுநோயாளி, புற்றுநோயாளிகள் என அனைவருமே அருந்தலாம்.

இதய நோயாளி அளவுடன் குடிக்க வேண்டும்..

மாதுளம்பழ ஜூஸ்

தினமும் ஒரு கப் மாதுளம்பழச் சாறு குடித்துவர, 15 நாட்களில் டெஸ்டோஸ்டீரான் சுரப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் எலும்பு, தசை தொடர்பான நோய்கள் குணமாகும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கர்ப்பப்பை, சினைப்பைப் பிரச்னைகள் குணமாகும். சருமத்துக்கு நல்லது.

பெண்கள், கர்ப்பப்பை பிரச்னை, ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் அருந்தலாம்.

பேரீச்சைப்பழ ஜூஸ்

பேரீச்சை ஜூஸைத் தொடர்ந்து குடித்தால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்தது.

ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அருந்தலாம்.

கேரட் ஜூஸ்

வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும். சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இது, உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகலாம். சளி தொந்தரவு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட்ட பின்னரே கேரட் ஜூஸைப் பருக வேண்டும்.

பார்வை குறைபாடுள்ளவர்கள், சீரான சருமம் கிடைக்க, முடி வளர்ச்சிக்கு, அல்சர் பிரச்னை இருப்பவர்கள், நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் குடித்து வரலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எப்போதும் எலுமிச்சை ஜூஸைத் தான் பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும். செரிமானத்தையும் அதிகரிக்கும். இந்த ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது.

அசைவ உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். தொண்டை வலி, புண் இருப்பவர்கள், மயக்கம் வரும் பிரச்னை இருப்பவர்கள், புத்துணர்ச்சி பெற என அனைவருமே குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

ரத்தசோகை உள்ளவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் குடித்து வருவது நல்லது.

அனைத்து ஜூஸ்களுமே ஏதோ ஒரு வகையில் பல நன்மைகளைத் தருபவைதான். நம் உடலுக்குப் பொருத்தமான ஜூஸைப் பருகுவோம்... ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமிடுவோம்.

வல்லாரைக் கீரை 




• வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். 

• வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம். 

• வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும். 

• குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும். 

• வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 

• வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும். 

• இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். 

• வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். 

• நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. 

• யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரைவீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும். 

• வல்லாரை இலையை முறைப்படி எண்ணெயாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

குன்றிமணி - Crab's eye

குன்றிமணி 




படத்தில் இருப்பது வெள்ளை குன்றிமணி, பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் எடை அளவு அறிய குன்றிமணி பயன்பட்டன. 2 குன்றிமணி எடை என்பது இப்போது சுமார் 1 கிராம் எடையைக் குறிக்கும். 

சித்த மருத்துவத்தில் தலைக்கு எண்ணெய் காய்ச்சுவதிலும் அழகு சாதனப் பொருட்களில் சேர்மானப் பொருளாகவும், குன்றிமணியின் பங்கு உண்டு. இலை மற்றும் வேர் மருத்துவ பயன் கொண்டது. 

குன்றிமணி இலைகளின் கசாயமானது இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும். மேலும் இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து உடலில் வீக்கங்கள் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வடியும். அதுமட்டுமின்றி வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை குன்றிமணி இலைகள் சிறந்த தீர்வு அளிக்கும். 

குன்றி மணியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. 

மருத்துவ பயன்கள் இருந்தாலும்  குன்றிமணி விஷத்தன்மை கொண்டது. உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்கு என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீக ரீதியாக சொல்வதென்றால், தொடர்ந்து தோல்வியை சந்திப்பவர்கள் இந்த வெள்ளை குன்றின் மணியை தன்னிடம் வைத்துக் கொண்டால் வெற்றியை அடையலாம். தொழிலில் தோல்வி இருந்தாலும், படிப்பில் தோல்வி இருந்தாலும், எப்படிப்பட்ட தோல்வியாக இருந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் சக்தி இந்த வெள்ளை குன்றின் மணிக்கு உள்ளது.

பல் பராமரிப்பு - Dental Care

2 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் எவ்வளவு கறை படிந்தாலும் பிரகாசிக்கும் .. பற்கள் வெண்மையாக்கும் தீர்வு

எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒற்றை புன்சிரிப்பு போதும் எல்லாம் துளாகும். அப்படி புன்னகையை உதிர்க்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால்..எவ்வளவு சங்கடமாக இருக்கும். இதற்குதான் இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் ஊற்றி தேய்த்து பாருங்கள் அல்லது தனியாகவும் எலுமிச்சை சாறை பற்களில் தேய்க்கலாம்.

பேக்கிங் சோடா : நச்சு நீக்கியாக செயல்படும் பேக்கிங் சோடா பற்களின் கறைகளையும் நீக்க உதவும். எனவே பேக்கிங் சோடாவை பற்களில் தேய்த்துப் பாருங்கள். பேக்கிங் சோடா அலர்ஜியை உண்டாக்கினால் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் : தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாயில் ஊற்றி நன்குக் கொப்பளியுங்கள் (Gargle). நுரை வரும் அளவிற்குக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவது மட்டுமன்றி; வாய் துர்நாற்றம், சொத்தை, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்னைகளும் நீங்கும்.

ஆப்பில் சிடர் வினிகர் : ஆப்பில் சிடர் வினிகரை பயன்படுத்தியும் வாயைக் கொப்பளித்து வந்தால் மஞ்சள் கறை நீங்கும். பற்களின் துர்நாற்றம் போகும்.

அலுமினியத் தாள் கலவை : பேஸ்ட், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, ஆப்பில் சிடர் வினிகர், தேங்காய் எண்ணெய் என மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு அலுமினியத் தாளில் பரப்புங்கள். அதை அப்படியே எடுத்து பற்களைச் சுற்றிலும் ஒட்டுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து தாளை எடுத்துவிட்டு வாயை தண்ணீரால் கொப்பளியுங்கள். பின் மீதமிருக்கும் கலவையையும் பற்களில் கைகளை வைத்து தேயுங்கள். மீண்டும் கொப்பளியுங்கள். இதனால் உடனே நல்ல பலன் கிடைக்கும். இந்தக் கலவையை அப்போதே செய்து தீர்க்க வேண்டும். மறுநாள் பயன்படுத்தக் கூடாது.

மேலே குறிப்பிட்ட எதுவும் உங்களிடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பேக்கிங் சோடா கலந்து அந்த கலவையை அலுமினிய காகிதத்தில் வைத்து பற்களில் ஒட்டிக் கொள்ளலாம்.