காய்கறிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காய்கறிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 பிப்ரவரி, 2016

Health Benefits of Carrot - கேரட்டின் மருத்துவ குணங்கள்

தாவர தங்கம் கேரட்

மக்கள் இயற்கை உணவுகளை தவிர்த்து, எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர், போதாக்குறைக்கு வைட்டமின் டானிக் மற்றும் மாத்திரை என உட்கொள்கின்றனர். இதனால் பல வகையான வியாதிகள் உடலில் ஏற்படுகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை அடையலாம் என்பதில் ஐயமில்லை.

உணவே மருந்து என்ற அடிப்படையில் பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் வேர்க்காய் வகையை சார்ந்த கேரட் ஒரு சத்தான கிழங்காகும். கேரட் செடியானது தனது வேரில் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் 5 முதல் 10 செ.மீ. நீளம் உள்ள பல சில்லடை வேர்களைக் கொண்ட கூம்பு வடிவில் பருத்த கிழங்காக கேரட்டை நமக்கு தருகிறது. பல்வேறு சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன கேரட் உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், இரத்த அழுத்தம் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன. 



கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் 


இயற்கையில் இனிப்பு சுவையுடைய கேரட் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காயாகும். கேரட்டில் அடங்கியுள்ள சத்து விவரங்களை பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:


சக்தி 41 கலோரிகள்
கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம் 
நார்சத்து 3 கிராம்    
கொழுப்புச் சத்து 0.2 கிராம்    
புரோட்டின் 1 கிராம் 
வைட்டமின் A - 93% (835 m.g.)
பீட்டா கரோட்டின் - 77% (8285 m.g.)   
வைட்டமின் B1 - 3% (0.04 m.g.)
வைட்டமின் B2 - 3% (0.05 m.g.)
வைட்டமின் B3 - 8% (1.2 m.g.)
வைட்டமின் B6 - 8% (0.1 m.g.)
வைட்டமின் B9 - 5% (9 m.g.)
வைட்டமின் C - 12% (7 m.g.)
கால்சியம் - 3% (33 m.g.)
இரும்புச் சத்து - 5% (0.66 m.g.)
மங்கனீஷ் - 5% (18 m.g.)
பாஸ்பரஸ் - 5% (35 m.g.)
பொட்டாசியம் - 5% (240 m.g.)
சோடியம் 2.4 m.g.)

கண்களுக்கு ஆரோக்கியம் தரும் 

கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை பார்த்தல் நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். இதில் வைட்டமின் A சத்து உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும்.

கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.

கேரட்டில் உள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் கண் புரை நோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டாகேரட்டின் தடுக்கிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகளை விட கூடுதல் பலனை தருகிறது கேரட்.

கேரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மை நீங்கி கண் பார்வை கூர்மையாகும், 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்தை தீர்க்கும்.

கேரட் சாப்பிடுவதன் மூலம் இரவு நேரத்திலும் கண்பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.

மூளை சுறுசுறுப்படையும்

கேரட் சாறுடன் பாதாம் பருப்பை தூள் செய்து கலந்து அருந்தி வந்தால், மூளை சுறுசுறுப்படையும், ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும், மூளை பலமடையும். பைத்தியம் குறைக்கும் நிவாரணியாகவும் இருக்கும்.

கேரட் மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.

பல் பராமரிப்பு

கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடைவதோடு பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கேரட்டை அடிக்கடி பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். ஈறுகளும் பலப்படும்.

நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்களை நீக்கி பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.

இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள்

கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்

கேரட் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி, விருத்தி அடையச் செய்கின்றது.

கேரட் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை நீக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.

இரத்தப் புற்றுநோய்
க்கு தினமும் கேரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, இரத்த கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்

இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்

கேரட் சாப்பிட்டால், இருதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் பாதுகாத்து மாரடைப்பு மற்றும் இருதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

கேரட் இதயத் துடிப்பைச் சீராக்கும். இருதயநோய் அணுகாமல் காக்கிறது.

வயிற்றுக் கோளாறுகள் 

கேரட்டை வாரத்தில் இரண்டு நாட்கள் சமையலில் பயன்படுத்தினால் இதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியை தரும்.

செரிமான பிரச்சனை இருந்தால் தினம் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து உணவை எளிதில் ஜீரணக்கச் செய்யும்.

நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் போன்ற வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

கேரட் ஜுஸ் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வாயுத் தொல்லை, மூல நோய் விரைவில் குணமடையும்.

கேரட் தயிர் பச்சடியாக மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். கேரட் தயிர் பச்சடி குறிப்பு கடைசியில் பார்க்கவும்.

தினமும் காலை வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடல் புழுக்கள் மற்றும் வயிற்று பூச்சிகள் வெளியேறும்.

அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறு எடுத்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் குணமாகும்.

வாயில் துர்நாற்றம் இருந்தால் அதற்கு காரணம் வயிற்றிலிருக்கும் கோளாறுதான் எனவே வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்தினால் வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கி வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

சாப்பிட பின்னும் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும் நபர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வர தீரும். பசி எடுக்கும் சமயத்தில் ஒரு காரட் சாப்பிட்டால் பசி அடங்கும்.

வயிற்றோட்டத்திற்கு, கேரட் 1/4 கிலோ எடுத்து சுத்தம் செய்து குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து, அந்த வேகவைத்த நீருடன் சிறுது உப்புச் சேர்த்து, 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு ஸ்பூன் வீதம் குடித்தால் சரியாகும். வயிற்றோட்டத்தின் மூலம் இழந்த சத்துக்களையும் இந்த சூப் ஈடு செய்யும்.

உணவு உண்டப்பின் ஒரு கேரட்டை சாப்பிட உடலில் இருக்கும் தேவையற்ற கிருமிகள் வெளியேறும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர, இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும் மூலநோயின் தாக்கத்தையும் குறைக்கும்.

கேரட் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு, புதினாசாறு கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

நீரிழிவு நோய் 

நீரிழிவு நோயாளிகள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.

கேரட் இன்சுலினை இயற்கையாக சுரக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் தாராளமாக கேரட்டை சாப்பிடலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு மற்றும் தரம் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பது நல்லது.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

உடல் எடை குறையும்

கேரட்டை உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கும் அதனால் சாப்பிடும் அளவு குறைந்து உடலில் உள்ள அதிகபடியான சதை குறையும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கேரட் வெளியேற்றும் மேலும் சேரவிடாமல் பாதுகாக்கும்.

அழகுக்கலை 

கேரட்டை தாவரத் தங்கம் என்று சொல்லலாம், ஏன்னெனில் கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி தங்கம் போல் பளபளப்பாகும்.

சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

கேரட்டை அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகப்பரு, முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளப்பாகும் சிவப்பழகு கூடும்.

கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறும்.

கேரட் சாப்பிட்டு வந்தால் மேனியில் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் மாறும்.

இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுத்து அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் பொன்னிறமாகும்

தினமும் கேரட் ஜூஸ் குடித்து வர, இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றம் மாறும்.

கேரட்டில் சர்க்கரை சேர்த்து, மையாக அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

வலியுடைய மூட்டு வீக்கம்

மூட்டு வீக்கம் மற்றும் வலிக்கு, தினமும் கேரட்டை சாப்பிட்டு வர இதில் உள்ள வைட்டமின் சி, மூட்டு வீக்கத்தை குறைத்து வலியை நீக்கும், மேலும் எலும்புகளை வலுவாக்கும்.

இரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கேரட் சாறு கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் நீங்கி குணம் பெறலாம். .

புற்றுநோயை தடுக்கும்

கேரட் புற்றுநோய் வராமல் காக்கும், ஆரம்ப நிலை நோயாக இருப்பின் முற்றாமல் காத்து, புற்றுநோய் செல்களை அழித்து நோயிலிருந்து விடுபடலாம்.

கேரட் புற்றுநோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்கும் , நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது. கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.

கேரட் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல், பெருங்குடலில், மார்பகப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.

நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். எனவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.

பெண்களுக்கு

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும்.

மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் பேருதவி புரியும். 

பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கேரட்டிற்கு உள்ளது.

கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. இரத்த சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது

உடல் சூடு

கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிட்டால்

கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து கேரட்டை மசித்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்.

உடல் வலிமை அடையும்

நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும். இந்த  பச்சைக்  கேரட் ஜூஸ் நம்முடைய உடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்ததை உற்பத்தி செய்யும்.

கேரட்டை சிறு துண்டாக வெட்டிப் பசும் பாலில் போட்டு காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து அருந்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீர்ப் பிரச்சனைகள்

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும். சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.

கேரட் ஜூஸ்

உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. ஜூஸ் போட்டு அருந்த விரும்பினால் உடனுக்குடன் ஜூஸ் போட்டு அருந்துவது சிறந்த பலனை கொடுக்கும். ஒரு வாரத்திற்கு 5 கிளாஸ் என்ற கணக்கில் அருந்தினால் போதுமானது அதிகம் அருந்தினால் மூலதொந்திரவு ஏற்படும்.  சருமம் மஞ்சள் நிறமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
.
கேரட் ஜுஸ் தயாரிக்கும் முறை

கேரட்டில் வைட்டமின் A சத்து தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், கேரட்டை துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது தேங்காய்ப் பால் எடுப்பது போல் ஜூசை எடுக்க வேண்டும்) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு கலந்து, இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம். குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.

  • காரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும். 
  • தலைமுடி உதிர்வதை தடுக்கும் முடியும் நீளமாக வளரும்.
  • உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. 
  • நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. 
  • வாயுப் பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும். ஹெர்ண்யா வராது. 
  • கல்லீரல் மற்றும் வயிற்றில் புண்கள், சிறுநீரக கற்க்கள் நீங்க கேரட் ஜூஸ் நல்ல மருந்து.
  • வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் வராமல் பாதுகாக்கும். 
  • நரம்புகள் பலப்படவும், தலைச்சுற்றல், மயக்கம் வராமல் தடுக்கும். 
  • நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும். 
  • சூதகக் கட்டு (மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலி) ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படும்.  
  • ஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும். 
  • அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளதால் எலும்புகள் உறுதியாகும் பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம். 
  • முதுமையில் ஏற்படும் கால்சிய இழப்பை சரிகட்டி உடல் பலவீனத்தை போக்கும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது. 
  • கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். 
  • தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க செய்யும். 

கேரட் வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்

பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

காரட் மில்க் ஷேக் 1:

ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் கேரட் துருவல் கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதோடு தேவையான அளவு தண்ணீர், கற்கண்டு கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன்படுத்தலாம்.

காரட் மில்க் ஷேக் 2:

இரண்டு கேரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும், 4 பாதாம் பருப்பை தண்ணிரில் ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து, அவித்த கேரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.

கேரட் சட்னி

தேவையானப்பொருட்கள்:

கேரட் – 2 

காய்ந்த  மிளகாய் – காரம் தேவைக்கு ஏற்ப
புளி – தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கேரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.


கேரட் தயிர் பச்சடி 

நம் தேவைக்கு ஏற்ப கேரட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்து துருவி எடுத்து,  அதனுடன் 4 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப எடுத்து இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து, கொத்தமல்லி இலை இரண்டு இணுக்கு, இஞ்சி ஒரு சிறு துண்டு மசித்து வைத்து, தேவையான அளவு உப்பு  அனைத்தையும் மோரில் கலந்து ஊறவைத்தால் கேரட் தயிர் பச்சடி ரெடி. 1 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட வேண்டும். 

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் புற்றுநோயும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம். இதை மிக அதிகமாகத் சாப்பிட்டால் பித்தமாகும்..

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இயற்கை உணவுக்கு மாறுவோம் நோயை வெல்வோம் !  



வாழ்க வளமுடன் 

சனி, 30 ஜனவரி, 2016

Health Benefits of Onion - வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

சமையலுக்கு சுவை சேர்க்கும் வெங்காயம்

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ அவர்கள் அடிக்கடி உண்ணும் பழைய சாதமும், வெங்காயமும் ஓர் காரணம். இதற்கு இணையான சுவையும் சத்தும் உள்ள உணவு இல்லை என்றே சொல்லலாம், ஆனால் இன்று, உணவை சுவையாக மட்டும் சாப்பிடும் நாம் அது சத்தான உணவா என்பதை பற்றி யோசிப்பதில்லை. அதனால், நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலையில் இருக்கிறோம். சத்தான காய்கறிகள் தான் நம் உடலை பாதுகாக்கும் மருத்துவர்கள். அந்த வகையில், சமையலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும் காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.

வெங்காயம் சாதாரண வெங்காயம் இல்லை 


வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது அதனால் நம் மக்கள் வெங்காயம் என்ற சொல்லை பயனில்லாத மற்றும் அறிவுபூர்வமாக சிந்திக்காத ஒருவரை கிண்டல் செய்ய பயன்படுத்துவார்கள். ஆனால், நம் உடலுக்கு வெங்காயத்தால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியல் இட்டால் அது ஒன்றுக்கும் உதவாத வெங்காயம் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

வெங்காயம் என்பதை வெங்கு + காயம் என்று பிரித்தால். வெங்கு என்பது சீர்படுத்துதல், வீரியப்படுத்துதல் என்ற அர்த்தமும், காயம் என்றால் உடல் என்ற அர்த்தத்தையும் குறிக்கும். அதாவது உடலை சீர்படுத்தும் குணம் கொண்டது என்பதே இதன் பொருள்.

தன்னை வெட்டிக் கொல்பவரை, வருந்தி அழ வைக்கும் தன்மை கொண்ட வெங்காயம், சிறிய செடி வகையைச் சார்ந்தது, இதன் இலைகளை வெங்காயத்தாள் என்பார்கள், பூமிக்கு அடியில் புதைந்து காணப்படும் குமிழ் போன்ற தண்டு பகுதியே நாம் உண்ணும் வெங்காயமாகும். இதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், (பெல்லாரி வெங்காயம்) வெள்ளை வெங்காயம் என மூன்று வகைகள் உண்டு. மூன்றும் ஒரே பலனை தரக்கூடியது என்றாலும், பலன்கள் அடிப்படையில் முதலாவது சின்ன வெங்காயம், இரண்டாவது வெள்ளை வெங்காயம் மூன்றாவதாக பெரிய வெங்காயம் என்று சொல்லலாம். 
வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்று பெயர். 

மருத்துவ குணங்கள் 


மருத்துவ குணமுடைய பகுதிகள் வெங்காயத்தாள், குமிழ் தண்டு. வெங்காயத்தில் பல தாது உப்புகளும், புரதங்களும், விட்டமின்களும் நிரம்பியுள்ளன, வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

தலைவலி

வெங்காயத்தை வெட்டி முகர்ந்தால் சாதாரண தலைவலி குணம் அடையும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி மற்றும் பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட நீண்ட நேர தலைவலி குறையும்.

மூளைக்கு பலம்

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, மூளை பலம் பெற்று நினைவு ஆற்றல் பெருகும்.

முடி பராமரிப்பு

தலையில் அங்கங்கே முடி உதிர்ந்து இருந்தாலோ அல்லது வழுக்கை விழுந்திருந்தாலோ சின்ன வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தலையில் தேய்த்து வர முடி முளைக்கும். சில ஆண்களுக்கு மீசை முடி உதிர்ந்து இருக்கும் அவர்களும் இந்த முறையை செய்யலாம்.

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைக்கு சின்ன வெங்காயத்தை மை போல அரைத்து ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக அடித்து கலக்க பொங்கி வரும், (மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி) அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். முட்டை வாடை நீங்க, சிகைக்காய் பவுடரை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாதத்துக்கு இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கண் நோய்கள் 


மாலைக்கண் நோய்க்கு, வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து தினம்  சாப்பிட சரியாகும்.

கண்வலிக்கு வெங்காயச்சாறையும், தேனையும் சம அளவு கலந்து ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

பல் நோய்கள்

பல்வலி, ஈறுவலி மற்றும் ஈறுவீக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு வெங்காயச் சாற்றையும், மிதமான வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ தீரும்.

பல் வலிக்கு ஒரு துண்டு வெங்காயத்தை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்த பல்வலி குறையும்.

வாய்புண் நீங்க

கிருமிகளால் ஏற்படும் வாய்ப்புண்ணுக்கு வெங்காயத்தை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வர புண்களில் உள்ள கிருமிகள் அழிந்து விரைவில் குணமாகும், உதடு மற்றும் நாக்கில் புண்கள் இருந்தாலும் குணமாகும்.

காது நோய்கள்

வெங்காயச்சாறு, வளர்ப்பட்டை இலைச் சாறு சமஅளவு கலந்து காதில் விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட காது இரைச்சல் மறையும்.

வெங்காயச்சாறு பிழிந்து சில துளிகளை காதில் விட லேசான காது வலி மற்றும் காதிரைச்சல் நீங்கும்.

தோல் நோய்கள்

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், நெய் சேர்த்து பிசைந்து, மீண்டும் லேசாக சூடுபண்ணி உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.

வெங்காயச் சாற்றை படை மற்றும் தோல் அரிப்பு உள்ள இடத்தில் பூசி வர குணமாகும், தோல் பழைய நிறத்தை அடையும்,

அடிப்பட்ட புண்களுக்கு வெங்காயச் சாற்றை பற்று போட்டு கட்டலாம்.

தேமல் இருக்கும் இடத்தில் வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு பல் சேர்த்து அரைத்து பூசி வர தேமல் மறையும். தோல் பழைய நிறத்தை அடையும்.

நகச்சுற்றுக்கு மருந்து

ஒரு பிடி சாதத்துடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட தீரும்.

பருக்கள் மறைய

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

முகத்தில் நிறைய பருக்கள் இருந்தால் வெங்காயத்தை வதக்கி இளம் சூட்டுடன் ஒரு துணியில் வைத்து கட்டி பருக்கள் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வர பருக்கள் மறைந்து முகம் வசீகரமாகும்.

சளி, இருமல் நோய்களுக்கு  

வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். முதுமையில் ஏற்படும் கடுமையான இருமலுக்கும் கொடுக்கலாம்.

ஜலதோஷ தொல்லைக்கு வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.


தொண்டை வலிக்கு வெங்காயத்தை அரைத்து பற்றுப் போட வலி குறையும். 

வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

ஜலதோஷம், தும்மலுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும்.

வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் தட்பவெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் சளி, இருமல், தும்மல், மூக்கு எரிச்சல் போன்றவை குணமாகும்.

குளர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச் சளி, சளிக் காய்ச்சல் ஆகியவற்றிற்கு வெங்காயத்தை அரைத்து அதனுடன் சம அளவு தேன் சேர்த்து காலை மாலை இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர உபாதைகள்  நீங்கும். மேலும் மூச்சுக் குழல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

காய்ச்சல் 

குளிர் காய்ச்சலுக்கு வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால் காய்ச்சல் தணியும்.

நுரையீரல் தொற்று நீங்க

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர காச நோய் குறையும்.

புகைப்பிடிப்பவர்கள், தொழிற்சாலைகளில் மாசு காற்றை சுவாசிப்பவர்கள் வெங்காயச் சாற்றை தினமும் அரை அவுன்ஸ் (15 மி.லி) வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். மேலும் நுரையீரலில் உள்ள நோய் தொற்று நீங்கி, சுவாசம் தடையின்றி நடைபெறும்.

இருதய நோய்கள்

இதய நோயாளிகளுக்கு நெஞ்சு படபடப்பு வரும்போது முதலுதவி சிகிச்சையாக சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம். உடல் சமநிலைக்கு வந்துடும் இதயம் பலமாகும்.

இருதய இரத்தநாளங்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படும்போது இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். வெங்காயத்திற்கு கொழுப்பை அகற்றும் தன்மை இருப்பதால் வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு நீக்கப்பட்டு இருதயத்திற்கு தடையின்றி இரத்தம் செல்லும். வலி ஏற்பட்ட பின் காப்பதை விட வரும்முன் காப்பது சிறந்தது.

வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ, சூப் அல்லது சாலட் செய்தோ சாப்பிடலாம். வெங்காயத்தை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.

வயிற்று நோய்கள் 

வெங்காயச் சாறு வயிற்று பொருமல் மற்றும் வலி போன்ற வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

சீதபேதி நிற்க சின்ன வெங்காயச்சாற்றை தேன் அல்லது கற்கண்டு கலந்து, 
 அல்லது 

வெங்காயச்சாற்றையும், குல்கந்தையும் கலந்து  
அல்லது 

சின்ன வெங்காயத்தினை நெய்யில் வதக்கி, வெல்லம் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. சிறு குடல் அழற்சியையும் போக்கும்.

முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகு சேர்த்து அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம், வாந்தி பேதியின் போது ஏற்படும் தாகம் உடல் அசதியும் குணமாகும்.

பித்த நோய்கள் 

நாலைந்து வெங்காயத்தை தோல் உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தக் கோளாறுகள், பித்தவாந்தி, ஏப்பம், பித்தத் தலைவலி போன்றவை தீரும்.

மூல நோய்கள் 

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, ஒரு கப் பாலில் போட்டு, சிறிது இலவம்மர பிசின் தூள், சிறிது கற்கண்டு தூளையும் கலந்து அருந்த எல்லா வித மூலக்கோளாறும் நீங்கும்.

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயச் சாறோடு வெல்லம் சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.

மலச்சிக்கல் 

வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கலுக்கு உடனடியாகப் பலன் உண்டாகும்

சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீர் பிரச்சனைகள் 

வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும்.

வெங்காயத்தைத் தண்ணீரில் வேகவைத்து வெங்காயத்தோடு அந்தத் தண்ணீரைப் பருகினால் சிறுநீர்க்கடுப்பு மற்றும் எரிச்சல் மறையும். 

வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கழிவுப் பொருள்கள் சிறுநீர் வழியாகக் கரைத்து வெளியேறும் சிறுநீர்ப்பை அழற்சி குணமாகும் (பாக்டிரியாவால் சீறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்), 

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் அதனால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

மூட்டு வலிகள் 

முதுமையில் வரும் மூட்டு வலி, கீல்வாயு காரணமாக (எலும்பு இணைப்புகளில்) ஏற்படும் மூட்டு வலிக்கு வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவிவர குணமாகும்.

வெங்காயச் சாற்றோடு வெல்லம் சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

நீரழிவு நோய்க்கு 

சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது, அதனால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் இன்சுலின் இயற்கையாக சுரந்து சர்க்கரை அளவு சமனிலைப்படும்.

இரத்த அழுத்தம் 


வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

இரத்த விருத்தி இரத்த சுத்தம் 

வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இதிலிருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகை நோயை நீக்கி, உடலில் இரத்தத்தை பெறுக செய்யும் மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய உதவுகிறது

பெண்களுக்கு  

தினமும் மூன்று சின்ன வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் தீரும்.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் வரும் கோளாறுகள், வலி அதாவது இடுப்பு, அடிவயிற்று வலி, இரண்டு தொடையிலும் ஏற்படும் வலி மற்றும் தலைவலி போன்ற கோளாறுகள் நீங்க :

நான்கு வெங்காயத்துடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, வெற்றிலை இரண்டு, இஞ்சி ஒரு துண்டு இவைகளை சேர்த்து அரைத்து 40 மி.லி. முதல் 50 மி.லி வரை தண்ணீரில் கலந்து வடிகட்டி மாதவிடாய் காலங்களில் மட்டும் குடிக்க வேண்டும். இவ்வாறு நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்னையும் நீங்கும் மற்றும் கருப்பை பலம் பெரும் நோயின்றி இருக்கும். 

  • இது ஒரு பழங்கால வைத்திய முறையாகும் 


பெண்கள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கி வைக்கும் நிலை அடிக்கடி ஏற்படும் அதனால் சிறுநீர்ப்பை தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது வெங்காயத்தை உணவில் அதிகமாக சேர்க்கும் போது இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

குழந்தைகள் நலம்

வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

கொழுப்பை விரட்டும்

சிறிய வெங்காயம் உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும். கொழுப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள், மாரடைப்புக்கு ஆளானவர்கள் அடிக்கடி வெங்காயத்தைச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

நெய், வெண்ணெய் அதிகம் கலந்திருக்கும் உணவை சாப்பிட்டவுடன் வெங்காயத்தை பச்சையாக அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவில் உள்ள கொழுப்புச் சத்து உடலில் சேராது.

சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் இரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

உடல் நலன்

நம் உணவை எளிதில் ஜீரணம் அடையச் செய்து உணவில் உள்ள சத்துக்களை உடலின் தேவைக்கு ஏற்ப பிரித்து கொடுக்கிறது.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். உடலை தேற்றும் மருந்தாக இருக்கும்.

நரம்பு தளர்ச்சி

வெங்காயத்தை நல்லெண்ணெய்  அல்லது நெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு அருந்த நோய் குறையும்.

தாது பலம்  

வெங்காயத்தை நல்லெண்ணெயில் வதக்கி தேன் கலந்து இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் அருந்த ஆண்மை பெருகும்.

வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடிய வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

மயக்கம் தெளிய

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும், பின் சிறுது வெங்காயச் சாறு குடிக்க கொடுக்க மயக்கம் தெளியும்.

விஷக்கடிக்கு

வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும்.

தேள், குளவி கொட்டிய இடத்தில் வெங்காயத்தை பாதியாக வெட்டி கடித்த இடத்தில் அழுத்தி தேய்க்க வலி குறையும் விஷமும் இறங்கும்.

பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும். 


குறிப்பு : 

  • முதலுதவி சிக்கிச்சை மட்டும்தான்,  பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உடல் உஷ்ணம்

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் சமநிலைப்படும். 

உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைக்க வெங்காயத்தை, கீரைகளுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.

வெங்காயம் தீராத தாகத்தை தணிக்கும், உஷ்ணத்தால் உண்டாகும் கழிச்சல் நோயை குணமாக்கும்.

உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு வெங்காயத்தை மோரில் கலந்து குடிக்க இருமல் தீரும்.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பப் பதிப்பிலிருந்து தப்பிக்க வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிக்கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

மஞ்சள் மற்றும் வெங்காயத்தை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும்..

வெங்காயத்தை வதக்கி அல்லது வெங்காயச்சாற்றை மோரில் கலந்து சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகம், 
தேவையான அளவு கற்க்கண்டு  சேர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

தூக்கம்

வெங்காய சாற்றுடன் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தரும்.

இரவில் வெங்காயம் கலந்த உணவுகள் அல்லது பச்சை வெங்காயத்தைச் சாப்பிடுவது தூக்கத்தினை வரவழைக்கும்.

மனகவலைக்கு விடுதலை

செலனியச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிட்டால் மன அமைதி உண்டாகும்.

உடல் எடை சமன்

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.  இதில் கொழுப்பை கரைக்கும் தன்மை உள்ளத்தால் உடல் எடையை குறைக்க உதவும்.

உடலை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம் உடல் கட்டு சீராகும்.

நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க

வைரஸ் தொற்று நோய் பரவும் காலங்களில் பச்சை வெங்காயத்தை மென்று உண்ண நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் சிறந்த மருந்துப்பொருள் வெங்காயம்.

புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் இறந்த மற்றும் சிதைந்த செல்களை கழிவாக வெளியேற்றும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது.

மேக நோய்

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் (பாலியல் நோய்) நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

பச்சை வெங்காயத்தின் பலன் 


வெங்காயத்தை பச்சையாக உட்கொண்டால் :

  • நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். 
  • பச்சை வெங்காயத்தில் தான் வைட்டமின் C சத்து கிடைக்கும். 
  • வெங்காயத்திலுள்ள  சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். 
  • பச்சை வெங்காயம் சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
  • பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து காக்கிறது. 
  • பல், ஈறு சம்பந்தமான நோய்கள் வராது. 
  • நம் உடலை நோய் கிருமி தொற்றுகள் (பாக்டீரியாக்கள்) தாக்காமல் இருக்கும். 
  • நோய் ஏதாவது உடலில் தாக்கி இருந்தாலும் குணப்படுத்தும். 
  • முகச்சுருக்கம், சருமம் தொங்குதலிலிருந்து   வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் காக்கின்றன. 

வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்

வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் ஊளைச் சதை குறையும்.

விந்தணு குறைபாடு மற்றும் உறவில் ஆர்வமில்லாதவர்கள், வெள்ளை வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு வெண்ணெயில் வதக்கி அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் இறுக மூடி வைத்து கொண்டு தினமும் காலை மற்றும் இரவு வேளையில் உணவிற்கு முன் (வெறும் வயிற்றில்) ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர பிரச்சனை தீரும்.

வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியாக நறுக்கி, கடாயில் போட்டு நெய் விட்டு அரைப்பதம் வதக்கி பின் ஒரு ஸ்பூன் பனங்கற்க்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து விழுதாகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும், சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (மாலை செய்து பாதியை சாப்பிட்டு, மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செய்து வச்சா கெட்டுப்போயிரும். இந்த கலவை மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

நறுக்கிய வெள்ளை வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.

ஒரு இரும்பு கடாயில், சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைச் சதை துண்டுகள் 1௦௦ கிராம், பனங்கற்கண்டு கால் கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோவை இடித்து எடுத்த சாறுமட்டும் ஆமணக்கு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஆகியவற்றை கலந்து அடுப்பிலிட்டுச் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து. பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்து வயிற்றில் புண், மந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ணம் தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண தாதுவிருத்தி உண்டாகும்.

வெங்காய சூப்

வெங்காயத்தை நன்கு வேகவைத்து மசித்து தண்ணீர், தேன், கற்கண்டு சேர்த்து சூப் போல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இரவு உறங்க போவதற்கு முன் ஒரு கோப்பை அருந்தினால் நல்ல உறக்கம் வரும்.

தயிர் வெங்காயம்

இது அனைவர்க்கும் தெரிந்த சாப்பிட உணவு நீங்களும் செய்து பாருங்க. பிரியாணிக்கு சிறந்த சைடு டிஷ்.

தயிர் - 400 மில்லி,
வெங்காயம் -1 கேரட் – 1 வெள்ளரிக்காய் – 1  பச்சை மிளகாய் – 1  மல்லி இலை – சிறிதளவு  உப்பு –  தேவைக்கு

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து, கேரட் மற்றும் வெள்ளரிக்காயை தோல் சீவி துருவிக் கொண்டு, நான்கையும் தயிரில் கலந்து மல்லி இலை உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

பலன்கள் 
  • உணவு ஜீரணத்திற்கு உடல் உஷ்ணத்திற்கு நல்லது. 

வீட்டிற்கு புதிதாக வண்ணம் பூசினால் அதன் நெடியைத் தாங்க முடியாது அதற்கு இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நாள்ப்பட்ட நோயாளிகள் யாராவது இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது. 

சமையல் செய்ய வெங்காயம் தேவையானால்  நறுக்கியவுடன் பயன்படுத்தி விடுவது நலம்.

இத்தனை பலன்களைத் தரும் வெங்காயத்தை ஒரு நாளும் ஒதுக்காமல், குழம்பிலிட்டோ அல்லது மற்ற காய்கறி, கீரைகளுடன் தாராளமாக சேர்த்து சாப்பிடலாம். 



வாழ்க வளமுடன்