வியாழன், 25 ஆகஸ்ட், 2016

Heart Disease Part 3 - இருதய நோய்கள் பாகம் 3

இருதய நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவக் குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

செம்பருத்திப் பூ பானம்

இருதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்கள் 50 எண்ணம் எடுத்து அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும்.

இருதயத்தை காக்க உதவும் இஞ்சி

இரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில், இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இருதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம்.

இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும், தேனும் சேர்த்து அருந்தலாம்.

இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர், எலுமிச்சைசாறு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி

இஞ்சியை துவையல், ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இருதய நோயை வெல்லலாம்.

இருதய பலவீனம், இருதயத்தில் வலி, இருதயப் படபடப்பு போன்ற கோளாறுகளைப் போக்க, 1௦ கிராம் இஞ்சியைக் கழுவி, அம்மியில் வைத்து நைத்துச் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்தால் அதிலுள்ள சுண்ணாம்பு வண்டல் அடியில் தங்கிவிடும், மேலே தெளிந்த சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்து, அத்துடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் அருந்தி வந்தால் இருதயம் சம்பந்தமான நோய்கள் நீங்கும், மேலும் இருதயம் பலம் பெரும்.

இருதயத்தில் குத்தும் வலி குணமாக

  • கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கசாயம் பத்து நாட்கள் சாப்பிடலாம்.
  • கருஞ்துளசி இலை, மருதம் பட்டை கஷாயம் சாப்பிட்டலாம்.

இருதயம் பலம் பெற 

  • தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்.
  • அத்திப் பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி தினம் சாப்பிட்டு வரலாம்.
  • மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருதயம் பலம் பெரும் மேலும் ஜீரண சத்தியும் அதிகரிக்கும். 
  • செம்பருத்தி பூவை உலர்த்தி பொடி செய்து எடுத்து அத்துடன் மருதம் பட்டை தூள் சம அளவு வெந்நீரில் கலந்து பருகலாம்.
  • சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து தொடர்ந்து 7 நாட்க‌ள் அருந்தி வந்தால் இதயம் பலப்படும். 
  • ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தாலும் இதயம் பலமாகும். 

நெஞ்சு வலிக்கு

  • இலந்தை பழம் சாப்பிடலாம்.
  • இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
  • இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.

இருதய அடைப்பு நீங்க

இரத்த நாளங்களிலே கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது, இதனால் தான் நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. சீரகத்தை சாப்பிடும் போது இரத்தத்தை உறைய செய்யாமல் நீர்மைப்படுத்துகிறது, இரத்தம் இரத்த நாளங்களில் சீராக செல்ல உதவுவதுடன் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை கரைத்து விடுகிறது. கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூன்று விரல்களால் எவ்வளவு சீரகம் வருமோ அந்த அளவு எடுத்து நீரிலிட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர இரத்த அடைப்புகள் போகும்.

பூண்டும் இதய அடைப்பை கரைக்கும் குணமுடையது தினம்தோறும் பாலிலே 5 பல் பூண்டு சேர்த்து காய்ச்சி அருந்த இரத்த அடைப்பு நீக்கப்படுகிறது.

உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.

இருதய நோய் தீர

  • துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாள் சாப்பிட்டு வரவும்.
  • மருதம் பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்/
  • தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இருதய நோ‌ய் குணமாகும். 

இருதய படபடப்பு குறைய

  • மாசிக்காயை பால்விட்டு உரசி காலை மாலை இரு வேலை அரைகிராம் நாவில் சுவைக்கலாம் (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)
  • தினசரி ஒரு பேரிக்கையை சாப்பிட இருதய படபடப்பை குறைக்கலாம்.
  • திருநீற்று பச்சிலை முகர்வதால் இருதய படபடப்பு சாந்தமாகும்.
  • சந்தன தூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
  • தாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இருதய படபடப்பு, மேல் மூச்சு வாங்குவது சரியாகும். 

இருதய நோய் நீக்கும் பார்லி கஞ்சி

சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இருதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.

இது இருதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் வெகுவாக பயனளிக்கிறது.

பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இருதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.



இரு தயத்தை பாதுகாக்க சில யோசனைகள்!

  1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.
  2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
  3.  நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வப்போது சாப்பிடுங்கள்.
  4.  பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் – பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.
  5. உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள்.
  6. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
  7. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.
  8. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான்  90 % நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது. 
  9. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. 
  10. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
  11. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வதை விட சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள். 
  12. கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள். 
  13. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார்!
  14. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். 
  15. உங்கள் படுக்கை அறையில் தொலைக்காட்சி, கணினி, வளர்ப்புப் பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள். 
  16. உடல் எடை கூடுவதற்கு தொலைக் காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்
  17.  உங்கள் அலைப்பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.
  18. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
  19. சிரிப்பு (Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை ஆகியவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  20. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்.
  21. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.
  22. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என (Optimist ) நம்புங்கள்.
  23. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
  24. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்.
  25. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.
  26. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம்.


பெண்களுக்கு தாலி அணியும் காரணம் 

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே உள்ள, நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி, உள்ளே உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.


இருதய சம்பந்தமான ஆப்ரேஷனுக்கு பல லட்சங்கள் செலவு செய்து சரிசெய்கிறோம், ஆனால் ஆப்ரேஷன் முடிந்தவுடன் பழையபடி ஆரோக்கியத்திற்கு நம் உடல் செல்வதில்லை உடல் பலவீனமாக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் இத்தகைய நோய்களை தீர்க்க சமையலைறையிலேயே இயற்கை மருந்துப் பொருட்களை பொக்கிஷமாக வைத்துச் சென்றுள்ளனர், ஆனால் நாம் அதையல்லாம் மறந்து எதையும் உண்ணலாம், எதையும் அருந்தலாம், நோய் வந்தால், மருத்துவத்தை நாடி சுகம் பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். இயற்கை உணவில் வாழ முயன்றால் நமக்கு இதய நோயே வராது, இயற்கை வழியில் சென்று இருதய நோய்க்கு நிரந்தர தீர்வு காண நம் பகுத்தறிவை பயன்படுத்துவோம்.

இருதய நோய் நம்மை மரணத்திற்கே இட்டுச் செல்லக்கூடும், நம்முடைய வாழ்க்கை முறையை ஒழுங்குப்படுத்தி வாழ்வதன் மூலம் இருதய நோய் நம்மை தாக்காமல் காத்துக்கொள்ளலாம்.

மாரடைப்பு, இருதய வால்வில் ஓட்டை, இருதய வால்வில் அடைப்பு, நெஞ்சு வலி, இருதய வால்வு சுருக்கம், பருமன் மற்றும் எதுவாக இருந்தாலும், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மருந்தில்லா இயற்கை மருத்துவம் என நமக்கு நாமே மருத்துவம் செய்து, அதற்கான வழிவகைகளை நன்கு அறிந்து, பின்பற்றி, எளிதில், விரைவில் நிரந்தரத் தீர்வு காணலாம். நன்றி...


வாழ்க வளமுடன்

புதன், 24 ஆகஸ்ட், 2016

Heart Disease Part 2 - இருதய நோய்கள் பாகம் 2

முந்தைய பதிவில் இருதயம் மற்றும் இருதயத்தை தாக்கக்கூடிய நோய்கள் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் இருதய நோய் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுக்கும் இயற்கை உணவு முறைகள் பற்றி பகிர்கிறேன் 

இருதய நோயின் அறிகுறிகள் என்னென்ன?

இருதய நோயின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளும் அறிகுறிகளும், 
  • நடக்கும் பொழுது, படிக்கட்டுகளில் ஏறும்பொழுது, சுறுசுறுப்பாக அல்லது இயல்பாக அல்லது ஓய்வாக படுத்து இருக்கும் பொழுது ஏற்படும் மூச்சுத்திணறல்/மேல்மூச்சு வாங்குதல். 
  • பசியின்மை.
  • இரவில் தூக்கமின்மை. 
  • திடீரென்று ஏற்படும் மூச்சுத் திணறல் அசதி அல்லது நகரக்கூட முடியாத அளவிற்கு சோர்வு, கால்கள் பலமின்மை, பாதம் அல்லது கணுக்கால் ஆகிய பகுதிகளில் வீக்கம்.
  • அடிவயிற்றில் வீக்கம்.
  • ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள்.
  • திடிரென உடல் எடை கூடுதல்.
  • தொடர்ந்த இருமல் அல்லது இளைப்பு. 
  • குமட்டல். 
உடல் வலி, இடது தோள்பட்டை, கை, முதுகு, மார்பு பகுதிகளில் ஏற்படும் வலி எதையும் அலட்சியப்படுத்தகூடாது. 

சாதாரண தசை, நரம்பு, எலும்பில் இருந்து வரும் வலியாக இருந்தால் அதை பொறுத்து மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை நோய் அதிகமாகும்போது, 
  • கால்களில் வலி, மரத்துப் போதல் மற்றும் வீக்கம் ஏற்படும், கைகளிலும் வலி நெஞ்சு வலி, கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு வலி போன்றவை ஏற்படக்கூடும்.

வெறும் கால்வலி, தொடை வலி போன்றவை சிறிது ஓய்வுக்குப் பின் சரியாகி விடும்.
நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
வயதானவர்களுக்கு இருதயம் தடிப்பாகவும் கால்ஷியம் படிவம் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுவது இயல்பு.

மாரடைப்பு அல்லது நெஞ்சு வலி உறுதி செய்வது எப்படி?

இருதய நோயின் தன்மைக்கு ஏற்ப நோயாளியின் உதடு மற்றும் நகங்களில் நீல நிற தோன்றினால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாயிருக்கும், மேலும் உடல் குளிர்ந்தோ, சூடாகவோ இருக்கும், கால் மூட்டுகளில் வீக்கம் இருந்தால் அந்த இடத்தில் சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் கூட இருக்கலாம், நாடித்துடிப்பு மூலமாகவும் அறியலாம்.

ஸ்டெதஸ்கோப்பின் மூலம் இதயத்தின் துடிப்பு மற்றும் ரிதம் வைத்து எந்த வகையான இருதய நோய் கண்டறிய முடியும், இருதய துடிப்பு, வேகமாக உள்ளதா அல்லது மெதுவாக தடைப்பட்டு கேட்கிறதா, இடைவெளி சரியாக இருக்கிறதா என்பதை வைத்து நோய் இருதயத்தின் எந்த பகுதியில் உள்ளது, அதாவது இருதயத் தசைகளிலா அல்லது இரத்த குழாய்களிலா என்பதை கூறமுடியும்.
பொதுவாக இருதயத்திற்கு செல்லும் இரத்தம் சப்தமில்லாமல் இருக்கும், ஆனால் இரைச்சல் சப்தம் கேட்டால் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டு இரத்தம் இருதயத்திற்கு செல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம், இருதய ஒலியும் முறையற்று இருக்கும், அந்த சமயத்தில் வலி இருந்தால் கொழுப்பு  அடைப்பட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய அறிகுறிகளை கேட்டறிந்த மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகள் செய்த பிறகு இருதய நோயை உறுதிப்படுத்துவார்.

இருதய நோய்க்கு அடிப்படைக் காரணங்கள்
  • புகைப்பழக்கம்.
  • உயர் ரத்த அழுத்தம்.
  • சர்க்கரை நோய்.
  • இரத்தத்தில் கொழுப்பு மிகுதல்.
  • உடற்பருமன்.
  • மதுப்பழக்கம்
  • உடற்பயிற்சியின்மை.
  • சோம்பல் தனமான வாழ்க்கை முறை.
  • பரம்பரை.
  • பிறவிக் குறைபாடு (Congenital Heart Disease). 
  • இரத்த நாள உட் சுவர்களில் கொழுப்புத் திவலைகள் பெருமளவில் படிதல்.
  • முதுமை.
  • நோய்க் கிருமித் தாக்குதல்.
  • மன அழுத்தம், மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கை ஆகியவை மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்.
இருதயத்தை பாதுக்காக என்ன செய்ய வேண்டும் 

இருதயத்தை காக்க நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டால் போதும் மாரடைப்பு வாய்ப்பை 95 சதவீதம் குறைத்து விடலாம்.

இரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்

மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம் இரத்த அழுத்தம் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறையாவது இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம்.

கொழுப்பு கவனம்

வருடத்துக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருந்தால் இருதய குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பை ஏற்படுத்தும்.

உடல் எடையைக் கண்காணியுங்கள்

உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இருதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் அதனால் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது உடல் எடை சரியாக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் தருவது பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (Body Mass Index. சுருக்கமாக BMI.) இதன்படி அவரவர் வயதுக்கு தகுந்த உடல் எடை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலமே உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இன்மை ஆகியவை இருதய நோய் ஏற்பட காரணமாக அமையும் அதனால் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டியது நமது கடமை நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற விருப்பத்திற்கு தகுந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவை எதுவும் முடியாதவர்கள், வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்பதைக் கடைப்பிடியுங்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுவதுடன் பலம் பெறுகிறது. உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

புகை பிடிக்காதீர்கள்

புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துவது நல்லது, புகையிலையில் உள்ள நிகோடின் இரத்தக்குழாய்களைச் சுருக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.  புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இந்தக் கெடுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே இருதய நோய் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்திலிருந்து ஒருவர் மீண்டுவர ஆரம்பித்துவிடுவார் எவ்வளவு வருடங்கள் புகை படித்தார் என்பது முக்கியமில்லை பழக்கத்தை விட ஆரம்பித்த உடன் இருதய ஆரோக்கியம் ஆரம்பித்துவிடும்.

மது அருந்தாதீர்கள் 

மதுப் பழக்கம் அறவே கூடாது. மது அருந்தும் போது போது குடும்பத்தை நினைத்துப் பார்க்கவும்.

உறக்கம் முக்கியம்

போதுமான உறக்கமின்மையால் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து இருதயம் பாதிப்படைகிறது, அதனால் தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியாக உறங்குங்கள்.

மன அமைதி தேவை

மன அழுத்தம் மாரடைப்புக்கு முக்கியக் காரணமாகிறது, மன அழுத்தம் குறைய, மருந்து மாத்திரைகளை விட தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகப் பயிற்சிகளை முறையாகப் பயின்று பின்பற்றுவது மிகவும் நல்லது.

உணவுப் பழக்கத்தில் மாற்றம்

இருதய நோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மூல காரணம் தவறான உணவுப் பழக்கமே, உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தல் இருதய நோய் வராமல் தடுக்கலாம்.

உணவுப் பழக்கத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
  • அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 
  • அனைத்து எண்ணெயில் தயாரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
  • துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • பேக்கரி பண்டங்கள் உண்பது தவறு.
  • பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்பட்ட உணவு வகைகள் உண்ணக்கூடாது.
  • பனை எண்ணெய்ப் பொருட்களில் செய்யப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும். 
  • அதிக இனிப்பு, புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.
  • முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
  • சமையலில் தேங்காய் மற்றும் முந்திரிப் பருப்பை ஓரங்கட்டுங்கள்.
உணவுப் பழக்கத்தில் சேர்க்க வேண்டிய உணவுகள்

இருதய நலனைச் சிறப்பாகப் பாதுகாக்க கொழுப்புச்சத்து மற்றும் உப்பு குறைந்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் குறையும் இருதயத்திற்கும் பாதுகாப்பான உணவாக அமையும்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்புச் சத்து குறைந்த பால் பொருட்கள், அவரை வகை காய்கள், குறைந்த கொழுப்பும் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் ஆகியவற்றை உணவாகக் உட்கொள்ளலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியது மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு உள்ளது அதனால் மீன் வகைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தையும் சமன்படுத்துகிறது. சைவ உணவு வகைகளில் வால்நட், சோயாபீன்ஸ், கனோலா எண்ணெய் வகைகளிலும் இவ்வமிலச்சத்து உள்ளது.

ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, சமைத்த காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகள் உப்பு மிக மிகக் குறைத்து எண்ணெய் அறவே இல்லாது சமைத்தது அரை வயிறுக்கு உண்ணலாம்.

காபி, டீ மற்றும் செயற்கை குளிர் பானங்களைத் தவிர்த்து, இளநீர், தேங்காய் தண்ணீர், வெந்நீர், தேன் கலந்த தண்ணீர், நெல்லி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகள் ஆன இயற்கை பானங்களை அருந்த வேண்டும்.

காபி மற்றும் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம்,  கிரீன் டீயில் கலோரி கம்மியாக இருப்பதால் இருதயத்திற்கு இதம் தரும்.

அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி இறைச்சியை அளவோடு வேக வைத்து குழம்பாக்கிச் சாப்பிடலாம், எண்ணெயில் பொரித்ததை சாப்பிடக்கூடாது.

இருதயம் பலம் பெற நெல்லிக்காய் ஒன்றை தினம் சாப்பிட்டுவிட்டு ஒரு தேக்கரண்டி அளவு தேனையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெரும், நல்ல புதிய இரத்தம் உண்டாகும்.

இருதயத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் முக்கியமானது பீன்ஸ்

பீன்ஸை குழம்பில் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம், பீன்ஸ் இரும்பு, கால்சியம், மக்னீசீயம், மாங்கனீசு, மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.
இருதய படபடப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய படபடப்பை நீக்கி உடலை பாதுகாத்துக் கொள்ளும், இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள் பீன்ஸை பொரியலை செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் பீன்ஸில் உள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும். மேலும் ரத்தகுழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி இருதய அடைப்பு மற்றும் இருதய சம்பந்தமான நோயிலிருந்து உடலை பாதுகாக்கும்.

மேலும் பீன்சை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நீரழிவால் அவதிப்படுவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இதனால் இருதய நோயிலிருந்து தப்பிக்கலாம்.

செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன்

செம்பருத்திப் பூ 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருதிப்பூவின் சிறப்பு அம்சம் இருதய நோய்க்கு அருமையான மருந்து, காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால் இருதயம் பலப்படுவதோடு நோயின் தாக்கம் இருந்தால் குணமடையும். இருதய நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, மற்றும் அடைப்பு போன்ற அனைத்து பிரச்னைகளையும் செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது.

ஆறு செம்பருத்திப்பூ பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும், இந்த சாற்றில் 6 டீஸ்பூன் அளவு தினம் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இருதய நோய்க்கு கை மேல் பலன் கிடைக்கும்.

செம்பருத்திப்பூ சர்பத்

செம்பருத்திப்பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். செம்பருத்திப்பூ 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும், பாதியாக வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக மசித்து வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும், இத்துடன் 300 கிராம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கி பாகு பதம் வரும் வரை காய்ச்சி இறக்கவும், சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும், தேவைப்படும் போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கலாம்.

செம்பருத்திப்பூ சர்பத், இருதய நோய்க்கான மருந்து மட்டுமல்ல இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணையச்சூடு, உடல் உள்சூடு தணியும், கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், அதிக தாகம் தணியும், களைப்பு நீங்கும், உடல் சூடு சமநிலைக்கு வரும்.

வெங்காயம்

நெஞ்சு வலியா? வெங்காயம் போதும், இருதயப் பையின் சுவர் தசைகளுக்கு இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும் இந்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்பட்டால் நெஞ்சு வலிக்கும், உடனே வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் நெஞ்சுவலி குணமாகும்.  

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல் குறையவும் இதயம் சீராக  துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடவும்.

வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் சக்தி இருப்பதோடு கொழுப்பை கரைக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் வெங்காயத்திற்கு இருக்கிறது. பச்சை வெங்காயத்தை தினம் மதிய உணவில் சேர்த்துக் கொள்வதால் இருதயத்தில் உள்ள அடைப்புகள் கரையும். 

இருதயத்தை பாதுகாக்க உதவும் சில இயற்கை மருத்துவக் குறிப்புகளை அடுத்த பதிவில் [இருதயம் பாகம் 3]  பதிவிடுகிறேன். 

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

Heart Disease Part 1 - இருதய நோய்கள் பாகம் 1

இருதயம்

நமது மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இருதயம்  அமைந்துள்ளது. 300 கிராம் எடையுள்ள இருதயம் நிமிடத்திற்கு 60 லிருந்து 90 முறை வரை துடிக்கும், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்தும் செயல்பாடாகும். இருதயம் வருடத்தில் சராசரியாக 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் இரத்தத்தை நாம் உடலுக்குள் பம்ப் செய்கிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இருதயம் மட்டுமே.

இருதயம் வலப்புறம் மற்றும் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது, இந்த இரு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அறைகள் என நான்கு அறைகள் உள்ளன.  இருதயத்தின் வலப்பகுதி உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை நுரையீரலுக்கு செலுத்துகிறது, இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு பின்பு இருதயத்தின் இடபுறத்திற்கு வருகிறது இங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது.
இருதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் மற்றும் வலப்பகுதியில் இரு வால்வுகள் என இந்த நான்கு வால்வுகளும் ஒரு வழி கதவுப் போல் செயல்பட்டு இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்துகின்றன.

மாரடைப்பு 

நம் உடல் உறுப்புகள் இயங்க சத்துப் பொருள்களும் ஆக்ஸிஜனும் தேவை. ஆக்ஸிஜனையும் சத்துப் பொருள்களையும் உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் பணியை இரத்தம் செய்கிறது, இந்த இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்பும் பணியை இருதயம் செய்கிறது, உடல் உறுப்புகளுக்கெல்லாம் இரத்தத்தை அனுப்பும் இருதயத்துக்கும் இரத்தம் தேவை. இருதயத்துக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் வேலையை கரோனரி இரத்தக் குழாய்(Coronary artery) செய்கிறது, இந்த குழாயில் கொழுப்புப் படிந்து இரத்த ஓட்டம் தடைபடும் போது இருதயம் செயலிழக்கிறது, இதனை மாரடைப்பு என்பார்கள்.
இது ஒரு பொதுவான காரணம் என்றாலும் கடுமையான இரத்த சோகை, இரத்தம் உறைவதற்கான பிளேட்டலட்டுகள் அதிகரித்தல், நோய்க் கிருமித் தாக்குதலால் கரோனரி இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைதல். இருதய வால்வு பாதிப்புகள், வால்வு பாதிப்பினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய இருதயப் பெருக்கம், நிலையற்ற இருதயத் துடிப்பு ஆகியவையும் காரணம்.

மாரடைப்பு எந்த வயதில் வரும்

மாரடைப்பு எந்த வயதிலும் வரலாம். சிறுவயதில் கூட வர வாய்ப்புள்ளது. இருப்பினும் பெரும்பாலும் நடுத்தர வயது மற்றும் முதுமையில்தான் மாரடைப்பு வருகிறது. உணவு கலாச்சார மாற்றத்தால் இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
மாரடைப்புதான் (Massive Heart Attack). முன்பெல்லாம் 50 - 60 வயதில்தான் மாரடைப்பு வரும். ஆனால் இப்போது காலம் மாறிப்போச்சு. 30 வயதிலேயே மாரடைப்பு வருது. என்ன, ஏதுன்னு கேட்பதற்குள்ளேயே உயிர் பிரிந்துவிடுகிறது.
சரி, இப்படி அறிகுறியே இல்லாமல் ஆளைச் சாய்த்துவிடும் மர்மம் என்ன? இதைத் தடுக்க வழியே இல்லையா. எல்லாருமே இப்படி மாரடைப்பால் இறப்பது இல்லையே. அப்படியானால் யாருக்கு வரும். யாருக்கு வராது. இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் எழும்.

எல்லோருக்கும் மாரடைப்பு வருவதில்லை. ஆனால் வயதாக, வயதாக மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் அதிகமாகின்றன. வாழ்க்கை முறை மாற்றம் (Life Style Change) , கட்டுப்பாடில்லாத, ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை காரணமாக அமைகிறது.


மாரடைப்பு ஆண் பெண் வேறுபாடு உண்டா

மாதவிடாய்க் காலம் வரை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆனால் அதற்கான அறிகுறிகள் சிறிது வேறுபாடு இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம் என்பது முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் மாரடைப்பு, மூளைவாதம்  அல்லது பக்கவாதம் தாக்கக்கூடிய வாய்ப்புகள் சாதாரண பெண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன. இந்த பாதிப்பானது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆண்களுக்கு மார்புக்கு நடுவில் பாரம் மற்றும் அழுத்தத்தை உணர முடியும். அதே போல் பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் திணறல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம், தலைவலி ஆகியவற்றை உணருவார்கள்.

நெஞ்சு வலி மாரடைப்பு இரண்டும் ஒன்றா

நெஞ்சு வலி என்பது வேறு, மாரடைப்பு என்பது வேறு. மாரடைப்பு இருதயத்துடன் தொடர்பாக இருக்கும். நெஞ்சுவலி வருவதற்க்கு இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம். அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம். நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம். பரிசோதனைகள் நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை   மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது, கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும்.
நெஞ்சில் வலி வந்தால், அது வாய்வு வலியாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
இருதயத் தமனிக் குழாய் உள் அளவில் சுருங்கும் போது, இருதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய இரத்தத்தின் அளவு குறைகிறது நாம் ஓய்வாக இருக்கும் பொது இருதய திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்து விடும், ஆனால் உழைப்பு அதிகப்படும் போது இருதயத் திசுகளின் தேவையும் அதிகரிக்கிறது குறுகிவிட்ட இருதய தமனியல் இந்த தேவையை ஈடு செய்ய இயலாது அந்த நேரத்தில் இருதய திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருதய தசைகள் எழுப்புகின்ற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.
சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பாக இருக்கும் என்று எண்ணி தேவையில்லாமல் பயப்பட வேண்டியது இல்லை. 
பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இருதய நோய்கள் காரணமாக இருக்காது, வேறு காரணங்கள் தான் இருக்கும். 
நெஞ்சு வலியில் முக்கியமான இரண்டு, ஒன்று ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இருதய வலி, மற்றொன்று மாரடைப்பு, இரண்டாவதை அலட்சியப்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

நெஞ்சு வலி அறிகுறிகள் 

மாடிப் படிகளில் ஏறும் போதும், வேகமாக நடக்கும் போதும், கடினமான வேலையில் எடுபடும் போது நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும், ஓய்வு எடுத்துக்கொண்டால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு அறிகுறிகள்

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும், இந்த வலி, தாடை, கழுத்து, அக்குளில் வலி, இடது புஜம், இடதுபக்க மணிக்கட்டில் வலி இந்த வலியானது கை விரல்களுக்கு பரவும், உடல் முழுவதும் வலிக்கும், உடல் அதிகமாக வியர்க்கும், ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது கூடிக்கொண்டே போகும், நெஞ்சில் வலியுடன் மூச்சுத் திணறல் ஏற்படும், குமட்டல் மற்றும் மயக்கம் வருவது போல் உணர்வர் இதுதான் மாரடைப்பு. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் வலி இருந்தால் தீவிர நிலையாகும்,  இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.

நெஞ்சு வலி காரணங்கள்

நுரையீரல் நோய்கள்

நிமோனியா காய்ச்சலால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு, மார்பில் அடிப்பட்டதால் ஏற்படும் நுரையீரல் சரிவு, கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும், அதிக இருமல் காரணமாக நெஞ்சு வலி வரும், நுரையீரல் பாதிப்பு காரணமாக காய்ச்சல், சளி ஏற்படும் மூச்சு விட்டால் கூட வலி ஏற்படும். பசி குறையும், இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுத்தர வயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம், சளியில் இரத்தம் கலந்து வரும், பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும்.  நுரையீரல் இரத்த உறைவுக் கட்டி  காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் இரத்த குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

விலா பகுதியில் ஏற்படும் பாதிப்பு 

மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வலி வரலாம், வலியுள்ள பகுதியை தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும், உடல் அசைவின் போதும், மூச்சுவிடும் போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது தசைப் பிசகு, மார்பு விலா எலும்பு முறிவு போன்றவை இந்த நெஞ்சு வலியை ஏற்படுத்தும்.

உணவுப்பாதை புண்கள்

தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும் போது நெஞ்சில் வலிக்கும்.

பிற நோய்கள்

இரத்த குழாய் வீக்கம், இருதய வெளியுறை அழற்சி நோய், அக்கி, அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். நெஞ்சு வலிக்கு காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.

பிறவி இருதய குறைபாடு

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சில குழந்தைகளுக்கு இருதய வால்வில் ஓட்டை அல்லது கசிவு ஏற்பட்டு பின்னர் இருதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிறவி இருதயக் குறைபாடுகளில் சில எந்தவித அடையாளங்களும் இன்றி காணப்படும். வளர்ந்த வயதான குழந்தைகள் சீக்கிரம் சோர்வடைந்து விடுவர் அல்லது மற்ற வேலைகளை செய்யும் போது சுவாசக் குறைவு ஏற்படும்.
உடற்பயிற்சியின் போது ஏற்ப்படும் சோர்வு, சுவாசக்குறைவு, நுரையீரலில் நீர் மற்றும் இரத்தம் சேர்தல்பாதம்கணுக்கால்கால்களில் நீர் சேர்தல் ஆகியவை இருதய இயக்கக் குறைவின் அடையாளங்களாகும். சில குறைபாடுகள் பெரியவர்களாகும் வரை கண்டறிய முடிவதில்லை.

இருதயம் செயலிழத்தல் (Heart Failure) ஹார்ட் ஃபெலியர் மற்றும் மாரடைப்பு

ஹார்ட் அட்டாக் (Heart Attack) - ஹார்ட் ஃபெய்லியர் என பிரித்துச் சொல்கிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டும் ஒன்றல்ல.

இருதயம் செயலிழத்தல் 

இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலையையே இருதயம் செயலிழத்தல் (Heart failure) என்கிறோம். இருதயத்தின் செயல்திறன் குறைவதால் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது. பொதுவாக முதுமையில்தான் ஹார்ட் ஃபெய்லியர் வர வாய்ப்புள்ளது. அது தவிர ருமாட்டிக் காய்ச்சலால் இருதய வால்வு பாதிக்கப்படுவது. உயர் ரத்த அழுத்தம், கரோனரி இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது உள்பட வேறு சில காரணங்களாலும் இருதயத்தின் பம்பிங் திறன் குறைந்துவிடுகிறது.
இருதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும் என்றுதானே பார்த்தோம். அடைப்பு இருந்தால் சிலருக்கு இருதயம் செயலிழக்கும். இரத்தம் இருதய தசைகளுக்கு வராமல் போவதால், தசை நார்கள் செயலிழந்து ஹார்ட் ஃபெய்லியர் ஏற்படுகிறது. கார்டியோ மையோபதி என்று கூறப்படும் இருதயத் தசைகளில் ஏற்படும் தொய்வு நோய் காரணமாகவும் ஹார்ட் ஃபெய்லியர் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இருதயத்தின் மிகச் சிறு இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு இருதய அறைகள் விரிவடைந்து கார்டியோ மையோபதி ஏற்படுகிறது.

அறிகுறிகள்: ஹார்ட் ஃபெய்லியர் ஏற்பட்டால் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அதிகமாக மூச்சு வாங்கும். மாடிப்படிகளில் ஏறும்போது அதிகமாக மூச்சு வாங்கினால் உஷாராகிவிட வேண்டியதுதான். நுரையீரலில் ரத்தம் தேங்கும் போது தான் மூச்சுத் திணறல் வருகிறது. நுரையீரலில் ரத்தம் தேங்கும்போது அங்கே இரத்த அழுத்தம் அதிகமாகிறது.
இரத்த அழுத்தத்தின் காரணமாக சிறு இரத்தக் குழாய்கள் வெடிக்கின்றன. இதனால் இருமும்போது சளியுடன் ரத்தமும் வருகிறது. மேலும் நுரையீரலில் இரத்த அழுத்தம் அதிகமாகும்போது அங்கு ஆக்ஸிஜன் - கார்பன் டை ஆக்சைடு மாற்றம் தடைபடுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இருதய வால்வுக் கோளாறு அறிகுறிகள் என்ன?

இருதய வால்வுக் கோளாறு இருந்தால் மூச்சு இரைப்பு அதிகமாக இருக்கும். கை, கால்களில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சோர்வு அதிகமாக இருக்கும். ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்து விடும்: இருதய வால்வு ஓட்டை இருந்தால் அல்லது கசிவு இருந்தால் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். பெரிய கருவிகள், சோதனைகள் தேவையில்லை.

இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கேட்டாலே கோளாறைக் கண்டுபிடித்துவிட முடியும். இருதயத்தில் வித்தியாசமான ஓசை கேட்டால் கோளாறு இருப்பதாக அர்த்தம். உடனடியாக இருதய சிறப்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

இருதயம் பற்றி நான் படித்த மற்றும் அறிந்த பல்வேறு விஷயங்களை இந்த பதிவில் பதிவு செய்திருக்கிறேன், தவறு இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.  எனது அடுத்த பதிவில் [இருதயம் பாகம் 2]ல் இருதய நோய்க்கான அறிகுறி, காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை பதிவு செய்கிறேன்.