சனி, 30 ஜனவரி, 2016

Health Benefits of Onion - வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

சமையலுக்கு சுவை சேர்க்கும் வெங்காயம்

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ அவர்கள் அடிக்கடி உண்ணும் பழைய சாதமும், வெங்காயமும் ஓர் காரணம். இதற்கு இணையான சுவையும் சத்தும் உள்ள உணவு இல்லை என்றே சொல்லலாம், ஆனால் இன்று, உணவை சுவையாக மட்டும் சாப்பிடும் நாம் அது சத்தான உணவா என்பதை பற்றி யோசிப்பதில்லை. அதனால், நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலையில் இருக்கிறோம். சத்தான காய்கறிகள் தான் நம் உடலை பாதுகாக்கும் மருத்துவர்கள். அந்த வகையில், சமையலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும் காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.

வெங்காயம் சாதாரண வெங்காயம் இல்லை 


வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது அதனால் நம் மக்கள் வெங்காயம் என்ற சொல்லை பயனில்லாத மற்றும் அறிவுபூர்வமாக சிந்திக்காத ஒருவரை கிண்டல் செய்ய பயன்படுத்துவார்கள். ஆனால், நம் உடலுக்கு வெங்காயத்தால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியல் இட்டால் அது ஒன்றுக்கும் உதவாத வெங்காயம் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

வெங்காயம் என்பதை வெங்கு + காயம் என்று பிரித்தால். வெங்கு என்பது சீர்படுத்துதல், வீரியப்படுத்துதல் என்ற அர்த்தமும், காயம் என்றால் உடல் என்ற அர்த்தத்தையும் குறிக்கும். அதாவது உடலை சீர்படுத்தும் குணம் கொண்டது என்பதே இதன் பொருள்.

தன்னை வெட்டிக் கொல்பவரை, வருந்தி அழ வைக்கும் தன்மை கொண்ட வெங்காயம், சிறிய செடி வகையைச் சார்ந்தது, இதன் இலைகளை வெங்காயத்தாள் என்பார்கள், பூமிக்கு அடியில் புதைந்து காணப்படும் குமிழ் போன்ற தண்டு பகுதியே நாம் உண்ணும் வெங்காயமாகும். இதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், (பெல்லாரி வெங்காயம்) வெள்ளை வெங்காயம் என மூன்று வகைகள் உண்டு. மூன்றும் ஒரே பலனை தரக்கூடியது என்றாலும், பலன்கள் அடிப்படையில் முதலாவது சின்ன வெங்காயம், இரண்டாவது வெள்ளை வெங்காயம் மூன்றாவதாக பெரிய வெங்காயம் என்று சொல்லலாம். 
வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்று பெயர். 

மருத்துவ குணங்கள் 


மருத்துவ குணமுடைய பகுதிகள் வெங்காயத்தாள், குமிழ் தண்டு. வெங்காயத்தில் பல தாது உப்புகளும், புரதங்களும், விட்டமின்களும் நிரம்பியுள்ளன, வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

தலைவலி

வெங்காயத்தை வெட்டி முகர்ந்தால் சாதாரண தலைவலி குணம் அடையும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி மற்றும் பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட நீண்ட நேர தலைவலி குறையும்.

மூளைக்கு பலம்

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, மூளை பலம் பெற்று நினைவு ஆற்றல் பெருகும்.

முடி பராமரிப்பு

தலையில் அங்கங்கே முடி உதிர்ந்து இருந்தாலோ அல்லது வழுக்கை விழுந்திருந்தாலோ சின்ன வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தலையில் தேய்த்து வர முடி முளைக்கும். சில ஆண்களுக்கு மீசை முடி உதிர்ந்து இருக்கும் அவர்களும் இந்த முறையை செய்யலாம்.

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைக்கு சின்ன வெங்காயத்தை மை போல அரைத்து ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக அடித்து கலக்க பொங்கி வரும், (மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி) அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். முட்டை வாடை நீங்க, சிகைக்காய் பவுடரை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாதத்துக்கு இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கண் நோய்கள் 


மாலைக்கண் நோய்க்கு, வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து தினம்  சாப்பிட சரியாகும்.

கண்வலிக்கு வெங்காயச்சாறையும், தேனையும் சம அளவு கலந்து ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

பல் நோய்கள்

பல்வலி, ஈறுவலி மற்றும் ஈறுவீக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு வெங்காயச் சாற்றையும், மிதமான வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ தீரும்.

பல் வலிக்கு ஒரு துண்டு வெங்காயத்தை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்த பல்வலி குறையும்.

வாய்புண் நீங்க

கிருமிகளால் ஏற்படும் வாய்ப்புண்ணுக்கு வெங்காயத்தை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வர புண்களில் உள்ள கிருமிகள் அழிந்து விரைவில் குணமாகும், உதடு மற்றும் நாக்கில் புண்கள் இருந்தாலும் குணமாகும்.

காது நோய்கள்

வெங்காயச்சாறு, வளர்ப்பட்டை இலைச் சாறு சமஅளவு கலந்து காதில் விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட காது இரைச்சல் மறையும்.

வெங்காயச்சாறு பிழிந்து சில துளிகளை காதில் விட லேசான காது வலி மற்றும் காதிரைச்சல் நீங்கும்.

தோல் நோய்கள்

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், நெய் சேர்த்து பிசைந்து, மீண்டும் லேசாக சூடுபண்ணி உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.

வெங்காயச் சாற்றை படை மற்றும் தோல் அரிப்பு உள்ள இடத்தில் பூசி வர குணமாகும், தோல் பழைய நிறத்தை அடையும்,

அடிப்பட்ட புண்களுக்கு வெங்காயச் சாற்றை பற்று போட்டு கட்டலாம்.

தேமல் இருக்கும் இடத்தில் வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு பல் சேர்த்து அரைத்து பூசி வர தேமல் மறையும். தோல் பழைய நிறத்தை அடையும்.

நகச்சுற்றுக்கு மருந்து

ஒரு பிடி சாதத்துடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட தீரும்.

பருக்கள் மறைய

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

முகத்தில் நிறைய பருக்கள் இருந்தால் வெங்காயத்தை வதக்கி இளம் சூட்டுடன் ஒரு துணியில் வைத்து கட்டி பருக்கள் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வர பருக்கள் மறைந்து முகம் வசீகரமாகும்.

சளி, இருமல் நோய்களுக்கு  

வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். முதுமையில் ஏற்படும் கடுமையான இருமலுக்கும் கொடுக்கலாம்.

ஜலதோஷ தொல்லைக்கு வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.


தொண்டை வலிக்கு வெங்காயத்தை அரைத்து பற்றுப் போட வலி குறையும். 

வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

ஜலதோஷம், தும்மலுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும்.

வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் தட்பவெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் சளி, இருமல், தும்மல், மூக்கு எரிச்சல் போன்றவை குணமாகும்.

குளர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச் சளி, சளிக் காய்ச்சல் ஆகியவற்றிற்கு வெங்காயத்தை அரைத்து அதனுடன் சம அளவு தேன் சேர்த்து காலை மாலை இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர உபாதைகள்  நீங்கும். மேலும் மூச்சுக் குழல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

காய்ச்சல் 

குளிர் காய்ச்சலுக்கு வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால் காய்ச்சல் தணியும்.

நுரையீரல் தொற்று நீங்க

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர காச நோய் குறையும்.

புகைப்பிடிப்பவர்கள், தொழிற்சாலைகளில் மாசு காற்றை சுவாசிப்பவர்கள் வெங்காயச் சாற்றை தினமும் அரை அவுன்ஸ் (15 மி.லி) வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். மேலும் நுரையீரலில் உள்ள நோய் தொற்று நீங்கி, சுவாசம் தடையின்றி நடைபெறும்.

இருதய நோய்கள்

இதய நோயாளிகளுக்கு நெஞ்சு படபடப்பு வரும்போது முதலுதவி சிகிச்சையாக சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம். உடல் சமநிலைக்கு வந்துடும் இதயம் பலமாகும்.

இருதய இரத்தநாளங்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படும்போது இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். வெங்காயத்திற்கு கொழுப்பை அகற்றும் தன்மை இருப்பதால் வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு நீக்கப்பட்டு இருதயத்திற்கு தடையின்றி இரத்தம் செல்லும். வலி ஏற்பட்ட பின் காப்பதை விட வரும்முன் காப்பது சிறந்தது.

வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ, சூப் அல்லது சாலட் செய்தோ சாப்பிடலாம். வெங்காயத்தை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.

வயிற்று நோய்கள் 

வெங்காயச் சாறு வயிற்று பொருமல் மற்றும் வலி போன்ற வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

சீதபேதி நிற்க சின்ன வெங்காயச்சாற்றை தேன் அல்லது கற்கண்டு கலந்து, 
 அல்லது 

வெங்காயச்சாற்றையும், குல்கந்தையும் கலந்து  
அல்லது 

சின்ன வெங்காயத்தினை நெய்யில் வதக்கி, வெல்லம் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. சிறு குடல் அழற்சியையும் போக்கும்.

முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகு சேர்த்து அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம், வாந்தி பேதியின் போது ஏற்படும் தாகம் உடல் அசதியும் குணமாகும்.

பித்த நோய்கள் 

நாலைந்து வெங்காயத்தை தோல் உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தக் கோளாறுகள், பித்தவாந்தி, ஏப்பம், பித்தத் தலைவலி போன்றவை தீரும்.

மூல நோய்கள் 

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, ஒரு கப் பாலில் போட்டு, சிறிது இலவம்மர பிசின் தூள், சிறிது கற்கண்டு தூளையும் கலந்து அருந்த எல்லா வித மூலக்கோளாறும் நீங்கும்.

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயச் சாறோடு வெல்லம் சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.

மலச்சிக்கல் 

வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கலுக்கு உடனடியாகப் பலன் உண்டாகும்

சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீர் பிரச்சனைகள் 

வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும்.

வெங்காயத்தைத் தண்ணீரில் வேகவைத்து வெங்காயத்தோடு அந்தத் தண்ணீரைப் பருகினால் சிறுநீர்க்கடுப்பு மற்றும் எரிச்சல் மறையும். 

வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கழிவுப் பொருள்கள் சிறுநீர் வழியாகக் கரைத்து வெளியேறும் சிறுநீர்ப்பை அழற்சி குணமாகும் (பாக்டிரியாவால் சீறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்), 

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் அதனால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

மூட்டு வலிகள் 

முதுமையில் வரும் மூட்டு வலி, கீல்வாயு காரணமாக (எலும்பு இணைப்புகளில்) ஏற்படும் மூட்டு வலிக்கு வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவிவர குணமாகும்.

வெங்காயச் சாற்றோடு வெல்லம் சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

நீரழிவு நோய்க்கு 

சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது, அதனால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் இன்சுலின் இயற்கையாக சுரந்து சர்க்கரை அளவு சமனிலைப்படும்.

இரத்த அழுத்தம் 


வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

இரத்த விருத்தி இரத்த சுத்தம் 

வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இதிலிருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகை நோயை நீக்கி, உடலில் இரத்தத்தை பெறுக செய்யும் மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய உதவுகிறது

பெண்களுக்கு  

தினமும் மூன்று சின்ன வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் தீரும்.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் வரும் கோளாறுகள், வலி அதாவது இடுப்பு, அடிவயிற்று வலி, இரண்டு தொடையிலும் ஏற்படும் வலி மற்றும் தலைவலி போன்ற கோளாறுகள் நீங்க :

நான்கு வெங்காயத்துடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, வெற்றிலை இரண்டு, இஞ்சி ஒரு துண்டு இவைகளை சேர்த்து அரைத்து 40 மி.லி. முதல் 50 மி.லி வரை தண்ணீரில் கலந்து வடிகட்டி மாதவிடாய் காலங்களில் மட்டும் குடிக்க வேண்டும். இவ்வாறு நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்னையும் நீங்கும் மற்றும் கருப்பை பலம் பெரும் நோயின்றி இருக்கும். 

  • இது ஒரு பழங்கால வைத்திய முறையாகும் 


பெண்கள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கி வைக்கும் நிலை அடிக்கடி ஏற்படும் அதனால் சிறுநீர்ப்பை தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது வெங்காயத்தை உணவில் அதிகமாக சேர்க்கும் போது இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

குழந்தைகள் நலம்

வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

கொழுப்பை விரட்டும்

சிறிய வெங்காயம் உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும். கொழுப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள், மாரடைப்புக்கு ஆளானவர்கள் அடிக்கடி வெங்காயத்தைச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

நெய், வெண்ணெய் அதிகம் கலந்திருக்கும் உணவை சாப்பிட்டவுடன் வெங்காயத்தை பச்சையாக அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவில் உள்ள கொழுப்புச் சத்து உடலில் சேராது.

சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் இரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

உடல் நலன்

நம் உணவை எளிதில் ஜீரணம் அடையச் செய்து உணவில் உள்ள சத்துக்களை உடலின் தேவைக்கு ஏற்ப பிரித்து கொடுக்கிறது.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். உடலை தேற்றும் மருந்தாக இருக்கும்.

நரம்பு தளர்ச்சி

வெங்காயத்தை நல்லெண்ணெய்  அல்லது நெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு அருந்த நோய் குறையும்.

தாது பலம்  

வெங்காயத்தை நல்லெண்ணெயில் வதக்கி தேன் கலந்து இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் அருந்த ஆண்மை பெருகும்.

வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடிய வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

மயக்கம் தெளிய

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும், பின் சிறுது வெங்காயச் சாறு குடிக்க கொடுக்க மயக்கம் தெளியும்.

விஷக்கடிக்கு

வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும்.

தேள், குளவி கொட்டிய இடத்தில் வெங்காயத்தை பாதியாக வெட்டி கடித்த இடத்தில் அழுத்தி தேய்க்க வலி குறையும் விஷமும் இறங்கும்.

பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும். 


குறிப்பு : 

  • முதலுதவி சிக்கிச்சை மட்டும்தான்,  பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உடல் உஷ்ணம்

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் சமநிலைப்படும். 

உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைக்க வெங்காயத்தை, கீரைகளுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.

வெங்காயம் தீராத தாகத்தை தணிக்கும், உஷ்ணத்தால் உண்டாகும் கழிச்சல் நோயை குணமாக்கும்.

உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு வெங்காயத்தை மோரில் கலந்து குடிக்க இருமல் தீரும்.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பப் பதிப்பிலிருந்து தப்பிக்க வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிக்கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

மஞ்சள் மற்றும் வெங்காயத்தை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும்..

வெங்காயத்தை வதக்கி அல்லது வெங்காயச்சாற்றை மோரில் கலந்து சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகம், 
தேவையான அளவு கற்க்கண்டு  சேர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

தூக்கம்

வெங்காய சாற்றுடன் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தரும்.

இரவில் வெங்காயம் கலந்த உணவுகள் அல்லது பச்சை வெங்காயத்தைச் சாப்பிடுவது தூக்கத்தினை வரவழைக்கும்.

மனகவலைக்கு விடுதலை

செலனியச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிட்டால் மன அமைதி உண்டாகும்.

உடல் எடை சமன்

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.  இதில் கொழுப்பை கரைக்கும் தன்மை உள்ளத்தால் உடல் எடையை குறைக்க உதவும்.

உடலை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம் உடல் கட்டு சீராகும்.

நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க

வைரஸ் தொற்று நோய் பரவும் காலங்களில் பச்சை வெங்காயத்தை மென்று உண்ண நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் சிறந்த மருந்துப்பொருள் வெங்காயம்.

புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் இறந்த மற்றும் சிதைந்த செல்களை கழிவாக வெளியேற்றும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது.

மேக நோய்

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் (பாலியல் நோய்) நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

பச்சை வெங்காயத்தின் பலன் 


வெங்காயத்தை பச்சையாக உட்கொண்டால் :

  • நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். 
  • பச்சை வெங்காயத்தில் தான் வைட்டமின் C சத்து கிடைக்கும். 
  • வெங்காயத்திலுள்ள  சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். 
  • பச்சை வெங்காயம் சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
  • பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து காக்கிறது. 
  • பல், ஈறு சம்பந்தமான நோய்கள் வராது. 
  • நம் உடலை நோய் கிருமி தொற்றுகள் (பாக்டீரியாக்கள்) தாக்காமல் இருக்கும். 
  • நோய் ஏதாவது உடலில் தாக்கி இருந்தாலும் குணப்படுத்தும். 
  • முகச்சுருக்கம், சருமம் தொங்குதலிலிருந்து   வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் காக்கின்றன. 

வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்

வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் ஊளைச் சதை குறையும்.

விந்தணு குறைபாடு மற்றும் உறவில் ஆர்வமில்லாதவர்கள், வெள்ளை வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு வெண்ணெயில் வதக்கி அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் இறுக மூடி வைத்து கொண்டு தினமும் காலை மற்றும் இரவு வேளையில் உணவிற்கு முன் (வெறும் வயிற்றில்) ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர பிரச்சனை தீரும்.

வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியாக நறுக்கி, கடாயில் போட்டு நெய் விட்டு அரைப்பதம் வதக்கி பின் ஒரு ஸ்பூன் பனங்கற்க்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து விழுதாகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும், சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (மாலை செய்து பாதியை சாப்பிட்டு, மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செய்து வச்சா கெட்டுப்போயிரும். இந்த கலவை மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

நறுக்கிய வெள்ளை வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.

ஒரு இரும்பு கடாயில், சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைச் சதை துண்டுகள் 1௦௦ கிராம், பனங்கற்கண்டு கால் கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோவை இடித்து எடுத்த சாறுமட்டும் ஆமணக்கு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஆகியவற்றை கலந்து அடுப்பிலிட்டுச் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து. பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்து வயிற்றில் புண், மந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ணம் தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண தாதுவிருத்தி உண்டாகும்.

வெங்காய சூப்

வெங்காயத்தை நன்கு வேகவைத்து மசித்து தண்ணீர், தேன், கற்கண்டு சேர்த்து சூப் போல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இரவு உறங்க போவதற்கு முன் ஒரு கோப்பை அருந்தினால் நல்ல உறக்கம் வரும்.

தயிர் வெங்காயம்

இது அனைவர்க்கும் தெரிந்த சாப்பிட உணவு நீங்களும் செய்து பாருங்க. பிரியாணிக்கு சிறந்த சைடு டிஷ்.

தயிர் - 400 மில்லி,
வெங்காயம் -1 கேரட் – 1 வெள்ளரிக்காய் – 1  பச்சை மிளகாய் – 1  மல்லி இலை – சிறிதளவு  உப்பு –  தேவைக்கு

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து, கேரட் மற்றும் வெள்ளரிக்காயை தோல் சீவி துருவிக் கொண்டு, நான்கையும் தயிரில் கலந்து மல்லி இலை உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

பலன்கள் 
  • உணவு ஜீரணத்திற்கு உடல் உஷ்ணத்திற்கு நல்லது. 

வீட்டிற்கு புதிதாக வண்ணம் பூசினால் அதன் நெடியைத் தாங்க முடியாது அதற்கு இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நாள்ப்பட்ட நோயாளிகள் யாராவது இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது. 

சமையல் செய்ய வெங்காயம் தேவையானால்  நறுக்கியவுடன் பயன்படுத்தி விடுவது நலம்.

இத்தனை பலன்களைத் தரும் வெங்காயத்தை ஒரு நாளும் ஒதுக்காமல், குழம்பிலிட்டோ அல்லது மற்ற காய்கறி, கீரைகளுடன் தாராளமாக சேர்த்து சாப்பிடலாம். 



வாழ்க வளமுடன் 

திங்கள், 25 ஜனவரி, 2016

Health Benefits of Dates - பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்

பாலைவனப் பழம் 

இயற்கையின் கொடையான பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, பொதுவாகப் பழங்களை எல்லோரும் விரும்பி உண்ண  காரணம் அதன் கவர்ந்திழுக்கும் நிறமும் மணமும் தான். நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஏதாவது ஒரு பழத்தை தினம்   உட்கொள்வது நல்லது.

பழங்களில் சிலவற்றை பறித்தவுடன் நேரடியாக அப்படியே சாப்பிடலாம். சில பழங்களை சந்தைக்கு வந்தவுடன் வாங்கி சாப்பிடலாம், அதிலும் பறித்து பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு வரும் பழம் ஒன்று இருக்கிறது அது தான் பல்வேறு ஊட்டச்சத்தும் மருத்துவக் குணமும் நிறைந்த பேரீச்சம்பழம் ஆகும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும் பேரீச்சம் பழத்தை பதப்படுத்தினாலும், தனது பலனை இழக்காமல் இருக்கும். 


பேரீச்சம்பழம்

பேரீச்சம் மரம் வளர ஏற்ற சீதோஷணம் பாலைவனப் பகுதியாகும், நம் நாட்டில் பேரீச்சம்பழத்தை அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறோம். பேரீச்சம்பழம் பழுக்கத் துவங்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும். நன்கு பழுத்த பின்னர் அவற்றைப் பறித்து பதப்படுத்தி விற்பனைக்கு வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்றஅத்தியாவசிய தாதுக்கள், இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் A, B, B2, B5 மற்றும் வைட்டமின் E சத்துக்கள் உள்ளன.

பேரீச்சம் பழத்தின் மலைக்க வைக்கும் மருத்துவக் குணங்கள்  


கண் நோய்கள்

தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர  



கண் சம்பந்தமான கோளாறுகள் வராது, இருந்தாலும் குணமாகும்.

மாலைக்கண் நோய் தீரும்.

வைட்டமின் A குறைவினால் கண்பார்வை மங்கலாகும் இதற்கு பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.

பல்லுக்கு பாதுகாப்பு

பேரீச்சம்பழத்தில் ஃப்ளோரின் என்னும் சத்து உள்ளது இது பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனால் பல் சம்மந்தமான வியாதிகள் குணமடையும் மேலும் பற்களை எந்த நோயும் தாக்காமல் தடுக்கும்.

பல் சொத்தையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டால் நீங்கும்.

உடல் சக்தி

பேரீச்சம்பழம் தினம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை :
  • நம் உடலுக்கு தேவையான வலிமையும், சக்தியும் உடனுக்குடன் கிடைக்கச் செய்கிறது.
  • உடல் வலிமையை பெருகக் செய்கிறது.
  • உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
  • உடல் ஒரு புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம். 
  • தசை வளர்ச்சி அதிகரிக்கிறது. 


மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் உடல் பலம் இல்லாமல் மெலிந்து சோர்வுடன் இருப்பார்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் பெருக்காது, பள்ளியில் இருந்து வந்தவுடன் கால் மூட்டிகளில் வலி என்பார்கள் என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது, இதற்கு காரணம் கால்சியம் சத்து குறைவால் ஏற்படும் ஈரல் பாதிப்பு ஆகும். அதனை குணப்படுத்த பேரீச்சம்பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி பலமும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டு சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

உடல் எடை அதிகரிக்கும்

பேரீச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் மற்றும் புரதம் உடல் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது, மெலிந்த உடல் உடையவர்கள் உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.

அதிக உடல் எடையை குறைக்க மாற்று உணவாக பேரீச்சம்பழம் 


ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பேரீச்சம் பழத்தில் கலோரிகள் 23 தான் உள்ளது அதனால் உடல் எடையை குறைக்க இருப்பவர்கள் உணவில் பேரீச்சம்பழத்தை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும் சோர்வு ஏற்படாது உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.

இதயம் சம்பந்தமான நோய்க்கு

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

பேரீச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.

பேரீச்சம்பழத்தை பாலில் வேக வைத்து சாப்பிட்டு பாலை பருகி வந்தால் இதய நோய்கள் வரவே வராது.

எலும்புகளின் வலிமைக்கு

பேரீச்சம் பழத்தில் இருக்கும் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.

எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு இணைப்பு ஜவ்வு குறைபாடு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினசரி பேரீச்சம்பழம் சாப்பிட குணம் பெறலாம்.

ஒரு டம்ளர் பாலில் பேரீச்சம்பழத்தை கொதிக்க வைத்து மசித்து உண்ண எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

நீரழிவு நோயாளிகளின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும் இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு எலும்பும் பலப்படும்.

நீரழிவு நோயாளிகள் சாப்பிடலாமா ?

ஆம், இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் நீரழிவு நோயாளிகள் தாராளமாக பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.

பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தினமும் 1 அல்லது 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

உணவு செரிமானம் சீராகும்

பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து 
குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக இருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். 

தினசரி பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. 

மலச்சிக்கல் தீரும் 

மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.

பேரீட்சைபழத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்து அதனை சாப்பிட்ட வேண்டும் ஊற வைத்து சாப்பிடும் போது பேரீச்சம் பழத்தின் முழு பலனையும் பெறமுடியும் என்பதோடு மலச்சிக்கலையும் போக்கிடும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

தினமும் இரவில் பேரீச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

குழந்தைகள் பல் முளைக்கும் சமயத்தில் வயிற்றுக் கடுப்பு மற்றும் பேதியால் அவதியுறும் அதற்கு, பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து 1 தேக்கரண்டி வீதம் 3 வேளை கொடுக்க தீரும்.

குடல் நோய்கள்

தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல் நோய்கள் வராது, குடல் பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

வயிறு மற்றும் குடலில் உள்ள அனைத்து நுண் கிருமிகளும் வெளியேறும்.

சருத்திற்கு நல்லது

பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் சருமத்த்தை மிருதுவாக்குகிறது, சரும சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பேரீச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன.

இரத்த சோகைக்கு தீர்வு

தினம் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சீராகும் அதனால் இரத்தச்சோகை பிரச்சனை தீரும்.

தினமும் காலையில் கறிவேப்பிலை இலை 1௦ உடன் ஒரு பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍வர்களின் இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும், இரத்தச் சோகையும் முற்றிலும் குணமடையும்.

இரத்தம் விருத்தி அடையும்

பேரீச்சம்பழம் இரத்த விருத்திக்கான இயற்கை மருந்து உடலுக்கு இரும்புச்சத்தை தந்து இரத்த விருத்தி அடைய செய்கிறது.

தினமும் 2 பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் அருந்தி வந்தால் இரத்தம் விருத்தியடையும்.

விபத்துகளில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

சிறியவர் முதல் பெரியவர் வரை உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரீச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

சளி மற்றும் இருமல்

பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல், கபம் குணமாகும், குழந்தைகளும் அருந்தலாம்.

பெண்களுக்கு பயன்கள் 

பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் மற்றும் பிரசவத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை ஈடு செய்து புதிய இரத்தத்தை உற்பத்தி செய்திட பேரீச்சம்பழம் பெரிதும் உதவும்.

உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து பேரீச்சம்பழத்தோடு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும், வெள்ளை போக்கிற்கு தீர்வளிக்க கூடியது.

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரீச்சம் பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்.

பேரீச்சம்பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பேரீச்சம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் இரத்தத்தின் அளவு குறையாமல் பாதுகாக்கும்

இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்ய பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

கருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

மெனோபாஸ்

பெண்கள் 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

மூட்டு வலிக்கு தீர்வு

மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட்டவர்களுக்கு பேரீச்சம்பழம் நல்ல ஒரு தீர்வாகும் (ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புக் கோளாறு நோய் எலும்பு முறிவு மற்றும் மூட்டு 
எலும்புக்களில் வலி ஆகியற்றை  ஏற்படுத்தும்) இது ஒரு கால்சியம் குறைபாடாகும். ஆகவே தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று இந்த பிரச்சனைகள் சரியாகும். 

நரம்பு தளர்ச்சி நீங்க

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம்பழத்துடன் பாதாம்பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சியும் குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.


தாது விருத்தியாகும் 


தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரீச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும்.

பேரீச்சம்பழத்தை எப்படி எல்லாம் சாப்பிடலாம்

பேரீச்சம்பழத்தை உணவாகவோ அல்லது மருந்தாகவோ உண்ணலாம் அன்றாடம் சாப்பிடும் பண்டங்களில், பேரீச்சம்பழத்தை கலந்தும் உண்ணலாம்.

பேரீச்சம்பழத்தை கழுவி அதாவது சாப்பிடுவதற்கு சற்று முன் தண்ணீரில் இரு முறை அலசி சாப்பிட்டால் நல்லது பதப்படுத்தி சந்தைக்கு வரும் பழம் என்பதால் இதில் கண்ணுக்கு தெரியாத தூசு, அழுக்கு போன்றவைகள் ஒட்டியிருக்கலாம் அதனால் சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. (இந்த பழமாக இருந்தாலும் நீரில் சுத்தம் செய்வது நல்லது)

பேரீச்சம்பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப் போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். உடம்புக்கு நல்லது.

இனிப்பு சுவைக்காக பேரீச்சம்பழங்களை அரைத்து பிற உணவுகளோடு கலந்து உபயோகிக்கலாம்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், மூட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் பழத்தில் செய்த கேக் கூட கடைகளில் இருக்கிறது. 

ஒரு டம்ளர் பசும் பாலில் இரண்டு பேரீச்சம் பழம் போட்டு சாப்பிடலாம். உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது.

பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து டேட்ஸ் சிரப் தயாரித்து சத்துப் பானமாக அருந்தலாம். .

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 


  • பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 
  • தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. 
  • இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
  • முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
  • உடலில் ஏற்பட்டுள்ள ஆறாத புண்கள் ஆறும். 
  • புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது.
  • தீராத நோய்கள் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும். 

பேரீச்சம்பழம் தேன் சேர்த்து சாப்பிட்டால்

பேரீச்சம்பழங்களை விதை நீக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு பழங்கள் மூழ்கும் அளவு சுத்தமான தேனை ஊற்றி, மூன்று நாட்கள் ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்கள், இரவில் மூன்று பழங்கள் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வர, இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கிவிடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.

உடலில் இரும்புச்சத்தை உருவாக்கி, இரத்த விருத்திக்கும் வழிவகுக்கும். உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சங்காய் மற்றும் விதையின் பயன்கள்

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது. இது தொண்டை தொற்று நோய்களையும், அதனால் வரும் காய்ச்சலையும் குணப்படுத்த வல்லது.

பேரீச்சமரங்களைக் கீறி அதிலிருந்து வெளியாகும் பிசினை, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

வேர்கள் பல்வலிக்கு அருமருந்தாகும்.

இரவில் பேரீச்சங்காய் மூன்றை நீரில் ஊறப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காயை சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை வெளியில் எடுத்து விடும்.

பேரீச்சம்பழத்தை எப்படி பார்த்து வாங்குவது ?

பேரீச்சம்பழம் அதிக நாள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது அதனால் அதனை பாதுகாக்கவென்று எந்த ரசாயனமும் தேவையில்லை. ஆனால் பதப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட பழம் என்பதால் சிலர் இந்த பழத்தை சாப்பிடுவதில்லை, ஏனெனில் சுத்தமாக இருக்காது என்றும் உள்ளே வண்டுகள் இருக்கும் என்று நினைகிறார்கள் இது முற்றிலும் தவறாகும்.

பேரீச்சம்பழத்தின் நிறம் செழுமையாக இருக்கவேண்டும் ரொம்ப காய்ந்த மற்றும் உப்புப் பொரிந்தார் போலுள்ள பழங்களையும் தவிர்க்க வேண்டும்.

பேரீச்சம்பழத்தை பளபளப்பாகக் காட்ட அதன்மீது பெட்ரோலியக் கழிவாகக் கிடைக்கும் தாது எண்ணெயை தடவுவார்கள்
இதனை வாங்கி சாப்பிட்டால் வயிற்றுப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். 

பூச்சி அரித்த பழங்களும், அழகாக பேக்கிங் செய்து வரும் கவனத்துடன் பார்த்து வாங்கவேண்டும். முக்கியமாக பேக்கிங் செய்யப்பட்ட தேதியை பார்த்து வாங்குங்கள் .

தோல் தடித்து காணப்படும் பேரீச்சம்பழம் நல்ல இனிப்பாக இருக்கும்,

சாப்பாட்டுக்கு பின்பு எல்லோரும் பேரீச்சை பழம் சாப்பிடுங்கள், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எல்லோருக்கும் உகந்தது. பேரீச்சம் பழத்தை வாங்கி ஒரு தடவை சாப்பிட்டு பாருங்கள்


பேரீச்சம்பழத்தை நாம் அன்றாடம் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைகிறது மேலும் ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. பேரீச்சம்பழம். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த உடல் நலத்தை பாதுகாக்கும் பழமாகும்.

பாலைவனப் பகுதி மக்களின் முக்கிய உணவான பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு அதன் நற்பலனை நாமும் அனுபவிப்போம்.

கிழமைக்கு ஒரு தடவையாவது சாப்பிட்டு பாருங்கள்.

வாழ்க வளமுடன்

திங்கள், 18 ஜனவரி, 2016

Basil and its Health Benefits - துளசிச் செடியின் மருத்துவ பயன்கள்

துளசி பற்றி ஒரு அறிமுகம்

அன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் வீட்டை சுற்றி இருக்கும் இயற்கை வளங்களை கொண்டு எந்த நோய் வந்தாலும் தீர்க்கும் முறையை தங்கள் முன்னோர்கள் மூலம் அறிந்து பயன்படுத்தி நோய்களை வென்றார்கள். இன்றைய காலகட்டத்தில் பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் அநேக வீடுகளில் வயதானவர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது, பெரியோர்களின் முக்கியத்துவமும் அவர்களின் மருத்துவ அறிவும் இன்றைய தலைமுறைக்கு தெரியாமலே போய்விட்டது.

இன்று சளி, இருமல். தும்மல், தலைவலி வந்தால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் வீட்டைச்சுற்றி வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் அரைத்து கசாயம் போட்டு தலைவலி முதல் பிரசவம் வரை மருத்துவம் பார்த்திருக்கின்றனர். ஆனால் இன்று நம்மைச் சுற்றி வளரும் மூலிகைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறோம், அதனால் நம்மைச் சுற்றி இருக்கும் மூலிகைகள் பற்றியும் அதன் மகத்துவதை பற்றியும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன், மூலிகைகளில் சித்தர்களும், முனிவர்களும் மூலிகைகளின் அரசி என போற்றிய மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்த துளசி பற்றி பார்போம். துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் பின் புறத்தில், துளசிமாடம் அமைந்திருப்பதை இன்றும் காணலாம்.

சுற்றுச்சுழலை தூய்மைப்படுத்தும்

துளசிச் செடி காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு மற்ற தாவரங்களை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் தான் நம் முன்னோர்கள் வீடுகளில் துளசியை வளர்த்து அதிகாலையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையாக‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் அதை சுவாசித்து நாம் ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ எண்ணத்தில் இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மேலும் துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

வேறு பெயர்கள் மற்றும் வகைகள் 


துளசிக்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல்வேறு பெயர்களும். நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகளும் உள்ளன. இதில் வெண்துளசியை இல்லங்களில் வளர்க்கிறார்கள். இதன் இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை பல நோய்களை தீர்க்கும் தன்மை உடையது.

தலைமுடியை பேணும் 

தலையில் இருக்கும் பேன், பொடுகு, அரிப்பு போன்ற நோய்கள் தீர துளசி சாறு, எலுமிச்சம் சாறு, தூய கற்பூரம் (பச்சை கற்பூரம்) ஆகியவற்றை கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின் குளித்தால் குணமாகும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர 

துளசி இலைச்சாற்றுடன் சிறிதளவு தூய கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும். 

துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலியுள்ள இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வர பல் வ‌லி குறையு‌ம்.

சொத்தை பல் மற்றும் ஈறு வீக்கம் இருந்தால் துளசிச் சாற்றோடு கிராம்புத்தூள், கற்பூரம் கலந்து அதன் மேல் 
வை‌த்து அழு‌‌த்‌தி வர குணமாகும்.

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

துளசியின் உலர்ந்து இலை 10 கிராம், சடாமாஞ்சில் 2 கிராம், அக்கராகாரம் 12 கிராம், உப்பு 8 கிராம், களிப்பாக்கு 5 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி காலையும், இரவு சாப்பிட்ட பின்னும் பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

வாய்ப்புண் வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும், வாய் துர்நாற்றமும் ஏற்படும், துளசி இலையை மென்று சாறினை முழுங்க வயிற்றுப்புண் ஆறுவதோடு வாய்ப்புண்ணும் ஆறி வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

நாக்கில் அழுக்கு அதிகமாக சேர்ந்து சுவை அறியாமல் வாயும் ஒருவித குழகுழப்பு தன்மை கொண்டிருக்கும் அதற்கு துளசி இலையை மென்று உண்டால் அந்த தன்மை நீங்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் ஏற்படும்.

தலைவலி தீர


ஒரு கைப்பிடி துளசி இலை, 3 மிளகு, 1 துண்டு இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும்.

கடுமையான தலைவலிக்கு கிராம்பு, சுக்கு ஆகியவற்றை துளசி சாற்றுடன் அரைத்து நெற்றியில் பற்றுப் போட குணமாகும்.

நீர்க்கோர்வை மற்றும்  தலை குடைச்சல் குணமாக துளசியைத் தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும் மற்றும் மூக்கடைப்பும் குணமாகும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் கண் சூடு குறைந்து கண் நரம்புகள் பலப்படும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. மாலைக்கண் நோய் குணமாக வாய்ப்புள்ளது.

துளசி இலையை சாறு பிழிந்து கொதிக்க வைத்து, சம அளவு தேன் கலந்து கண்களில் மை போல இட்டால் கண் பொங்குதல் குணமாகும்.

கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற துளசி இலை ஊறிய நீர் கொண்டு கண்ணை கழுவ வேண்டும்.

காது நோய்க்கு தீர்வு

துளசி இலையை கதிர்களுடன் (பூவோடு) பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 அல்லது 15 நாட்களில் காது மந்தம் தீரும்.

துளசி இலைச்சாறு 2 சொட்டு, வெள்ளைப்பூண்டுச் சாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டால் சீழ் வடிதல் நிற்கும்.

துளசிச்சாறு 2 சொட்டு, கரிசலாங்கண்ணிச்சாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டு வர காதுவலி மற்றும் காதில் இரத்தம், சீழ்வடிதல் குணமாகும். 

சரும நோய்கள் நீங்கும் 

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகள் குணமடைய துளசி இலையை எலுமிச்சைச் சாறு சேர்த்து மையாக அரைத்து அந்த கலவையை படை மற்றும் சொறி இருந்த இடத்தில் தடவி வர நோய் இருந்த இடம் தெரியாமல் மறையும். 

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் நோய் நீங்கும். 

உடலில் ஏற்படும் தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி, படர்தாமரை சிரங்கு போன்றவற்றில் துளசி இலைச் சாற்றை பற்று போட்டு, இலையை   கஷாயமாக்கி குடித்தால் அந்த நோய்கள் நீங்கிவிடும். 

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை எளிதில் தழும்பு இல்லாமல் குணமாகும். 

துளசி வேர், சுக்கு வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்து நாள்தோறும் காலையில் வெந்நீரில் சுண்டக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்டம் குணமாகும். 

உடலில் காயம் பட்டு இரத்தம் ஒழுகினால் துளசி இலை பொடி அல்லது துளசி இலைச்சாற்றை போட இரத்தம் நின்று காயம் விரைவில் ஆறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பரு மறையும்.

ஜீரண சக்தியை பெருக்க 

துளசி இலைகளை புட்டு அவிப்பது போல் அவித்து சாறு பிழிந்து 5 மி.லி. விதம் காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும்.

துளசி இலையை மென்று உண்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் நல்ல பசி எடுக்கும்.

உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் இருந்தால் துளசி இலை 10 கிராம் சிறிதளவு கருப்பு உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட குணமாகும், குடல் பூச்சிகளையும் அழிக்கும்.

வயிற்றில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை போக்கும்

விரதம் இருப்பவர்கள் விரத நாட்களில் வெறும் துளசி நீரை மட்டும் அருந்தி வந்தால் அவர்கள் உணவால் கிடைக்கக்கூடிய சத்தை இதில் பெற்றுக் கொள்ளலாம்.

துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் தொடர் பேதி குணமாகும்.

துளசி இலை, மிளகு, ஓமம், பூண்டு, இந்துப்பு, தூய கற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.

துளசி இலையை 200 மில்லி சாறு பிழிந்து கொதிக்க வைத்து சிறிது வெல்லம் கலந்து அருந்தினால் பித்தம் தணியும்.

துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ள போது குடித்தால் வயிற்று வலி நீங்கும். 


வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க துளசியை கசாயம் செய்து அருந்தலாம். 

வாயுவினால் ஏற்படும் குடைச்சல், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உப்பிசம், பேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் இருந்து விடுபட துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம் அல்லது ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்தும் சாப்பிடலாம்.

துளசி இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்


  • கல்லீரலை பலப்படுத்தி எந்த நோயும் தாக்காமல் காக்கும். 
  • வாந்தியை நிறுத்தும். 
  • வாய் துர்நாற்றத்தைப் போக்கும். 
  • உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகள் மற்றும் கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்றும். 
  • சகல விதமான வாயுத் தொல்லையை போக்குகிறது. வாயுப் பிடிப்பு குணமாகும். 
  • குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் நம் வாழ்நாள் முழுவதும் வராது. 
  • ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டு உடலுக்கு ஒரு கிருமி நாசினியாக செயல்படும். 

மூல வியாதியை கட்டுப்படுத்துகிறது

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

காட்டுத் துளசி விதைகளை பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகை சாப்பிட்டு வர உள்மூலம் (பௌத்திரம்) குணமாகும்.

விஷக்கடிக்கு

பூச்சிக் கடி மற்றும் காணாக்கடி (நமக்கு இது கடித்தது என்று தெரியாத கடி) போன்ற கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும் அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

விஷத்தை குடித்தவர்கள் உடல் விஷம் முறியவும் பயன்படுத்தலாம்.

எலிக்கடி, தேள் கடி, பாம்பு கடி விஷத்தை கூட முறித்து உயிர்பிழைக்க வைக்கலாம்..

நோய் எதிர்ப்பு சக்தி

தினம் காலையில் சிறிது துளசியை உண்டு வந்தால் நமது உடல் நோயின்றி ஆரோக்கியமாகத் திகழும்.

தொற்றுநோய் பரவும் காலங்களில் சிறிது துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகி நோய் நம்மை தாக்காது.

கொஞ்சம் துளசி இலைகளை சுத்தமான மண்பானைத் தண்ணீரில் ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை குடித்து வந்தால்

  • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 
  • உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. 
  • கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. 

ஜலதோஷம் மற்றும் இருமல் 

சளி, இருமல், காய்ச்சல் என்று வந்துவிட்டாலே கசாயம் போட நமது பெரியோர்கள் முதலில் தேடுவது துளசி இலை தான், துளசி இலை இல்லாமல் இத்தகைய நோய்க்கு தீர்வு கிடையாது என்பது தான் முற்றிலும் உண்மையாகும்.

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்புப் பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் சளி மற்றும் சளியினால் ஏற்படும் கதகதப்பு குணமாகும்.

  • இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக இருக்கும்.
  • இறுகியுள்ள மார்புச்சளியை இளகச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தால் ஏற்படும் துர்நாற்றத்தை நீங்கும். 
மிளகுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும். 

சளித் தொல்லைக்கு ஒரு வெற்றிலையுடன்  3 மிளகு, 5 துளசி இலையை சேர்த்து மென்று விழுங்க குணமாகும்.

துளசி இலைச்சாறில், தேன், இஞ்சிச்சாறு கலந்து ஒரு தேக்கரண்டி அருந்த ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை குணமாக்கும்.

துளசி இலைச் சாறு 50 மில்லி எடுத்து கொதிக்க வைத்து  சம அளவு தேன் கலந்து அருந்தினால், கபத்தினால் தோன்றிய இருமல் குணமாகும்.

மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டும் சளி, தொடர் இருமலால் ஏற்படும் விலாவலி, உடல் வலி குழந்தைகளுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாமல் உடலை முறுக்கி அழுதல் போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உண்டாக்கி ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு கைபிடி அளவு துளசி இலையை சிதைத்து, அரைலிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகும் வரை வற்ற வைத்து, வடிகட்டி 15 கிராம் கற்கண்டு, 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர, மார்புச் சளி, காசநோய், காய்ச்சல் குணமாகும்.

துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு எடுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகைப் பொடியை தேனீல் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.

துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.

துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.

துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.

துளசி ஒரு பிடி, சுக்கு, திப்பிலி, மிளகு என்ற திரிக்கடுகு ஒரு தேக்கரண்டி போட்டு கஷாயமாக்கி அருந்தி வந்தால் சளி, இருமல் அண்டாது,

துளசி நாட்பட்ட இருமலை குணப்படுத்தும் சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவை குணமாக்கும் நுரையீரலை பலப்படுத்தும்.

ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது

மூளைக் காய்ச்சலுக்கு துளசியை கசாயமாக்கி கொடுக்கலாம். 

வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மலேரியா, விஷ ஜுரம், ஜன்னி வாத ஜுரம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்கக் கூடிய வல்லமையும் வந்தால் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. 

துளசி, மிளகு, வெல்லம் ஆகியவற்றை கலந்து செய்த கஷாயம் மலேரியா, யானைக்கால் ஜூரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன

மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.

துளசி இலை 50 கிராம் மிளகு 50 கிராம் அரைத்து கடலை அளவு மாத்திரை ஆக்கி, இரண்டு வேளை வெந்நீரில் கலந்து கொடுக்க அல்லது 
துளசி இலை 10, மிளகு 10 இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியாக் காய்ச்சல், குளிர் ஜுரம், உடல் வலி, தலைப்பாரம், மார்புச்சளி, சாதா ஜுரம், யானைக்கால் ஜுரம், ஜன்னிவாத ஜுரம் என  சகலவிதமான காய்ச்சலும் குணமாகும்.  

துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் தாகம் தணியும்.

துளசி இலைச்சாறு ஒரு பங்கு, இஞ்சி இரண்டு பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

துளசி இலை 10 கிராம், மிளகு தூள் 10 கிராம், பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

துளசி இலை 20, தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மில்லி வீதம் குடித்து வர பித்த சீதளகாய்ச்சல் 3 நாளில் நீங்கும்.

துளசி இலை 10, மிளகு 5 சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் மற்றும் வெல்லம் கலந்து பருகுவதால் ஜுரம் தணியும், ஜுரத்தின் ஆரம்ப நிலையில் அருந்தினால் ஜூரம் மேலும் கூடாமல் நின்று விடும்.

மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர் ஜூரம், காணாக்கடி, சாதா ஜூரம் ஆகியவை தீரும். 

துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர் ஜூரம் குணமாகும்.

காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த துளசியை மென்று சாப்பிட வேண்டும்,

தொண்டை வலி

தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

தொண்டைக்கம்மல், வலி நீங்க தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால் குணமாகும் மேலும் சளி, தொண்டைக்கட்டு,  உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

குழந்தைகளுக்கான சளி நீங்க 

துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து சாறு எடுத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும்.

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, சளியினால் மூச்சு விட முடியாமை (மூச்சித் திணறல்) போன்றவை நீங்கும் மார்புச்சளி வெளியேறும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். மேலும் குழந்தைகள் வாந்தி, வயிற்றுப் போக்கை நிறுத்தவும் கொடுக்கலாம்.

துளசி, ஓமம் ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, தேன், சிறுது வெல்லம் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி குணமடையும். (ஓமத்திற்கு பதில் வெற்றிலையும் உபயோகிக்கலாம்).

துளசி சாற்றை இரண்டு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து தினமும் பருகி வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் தாக்காது.

துளசி இலை 9 எண்ணிக்கை, கடுக்காய் தோல்  5 கிராம், கீழாநெல்லி 10 கிராம், ஓமம் 5 கிராம், மிளகு  3 எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் அவற்றை ஒதுக்கும்.

நீரழிவு நோய்க்கு தீர்வு  

நீரழிவு நோய் வந்தவர்கள் துளசி இலையை மென்று உண்ண உடலில் சர்க்கரையின் அளவு சீராகும்.

துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் நம்மை அண்டாது

சிறுநீர் பிரச்சனைகள் 

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி நீரை பருகுவதன் மூலம் மூத்திரத் துவாரவலி குணமாக.

சிறுநீரகக் கல் நீங்க

சிறுநீரகக் கல் கரைய துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடும். (சிறுநீரகக் கல் உருவான பின் ஏற்படும் வலியை அனுபவிப்பதை விட நாம் கல் உருவாவதை தடுக்கும் வகையில் அவ்வப்போது அருந்தலாம்)

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தம் சுத்தமாக்கும்.

பெண்களுக்கு குறிப்புகள் 

பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (அதிக இரத்தப் போக்கு) துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறவைத்து, தினமும் காலையில் 1 தேக்கரண்டி 48 நாட்கள் அருந்தி வர குணமாகும்.

துளசி இலைச் சாற்றில் பனங்கற்கண்டுத் தூள் கலந்து குடித்தால் பெரும்பாடு நீங்கும்.

துளசி இலைச்சாறு அரை கப் மற்றும் ஒரு கப் அரிசிக் கஞ்சி இரண்டையும் கலந்துச் சாப்பிட்டு  பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும்.

துளசிஇலைச் சாறு, மணத்தக்காளி இலைச் சாறு, அமுக்கிரா கிழங்கு சாறு தலா 1 தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி கலந்து 7 நாட்கள் குடித்தால் தாய்ப்பால் தூய்மை பெறும். சாறு கிடைக்காத பட்சத்தில் மூன்றையும் 1௦ கிராம் விதம் பொடி வடிவில் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்தப்பின் துளசி விதையை நீரில் ஊற வைத்து அரைத்து நெல்லிக்காயளவு 3 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தூய்மை பெற்று கரு தங்கும்.

இருதயம் சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்துகிறது

துளசி இலைச்சாறு 1 மில்லி, தேன் 5 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து ஒரு நாளைக்கு  இரு வேளை விதம் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயநோய் தீரும்.

கருந்துளசி இலை 25, செம்பரத்தம் பூ 2 இரண்டையும் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லி வீதம் 10 நாட்கள் குடித்து வர இருதயத்தை குத்தும் வலி, பிடிப்பு குணமாகும்.

துளசி இலை ஒரு கைப்பிடி மற்றும் 10 மிளகை தட்டி 2 கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி 2 தேக்கரண்டி தேன் கலந்து 50 மில்லி வீதம் 1 நாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.

இருதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை  துளசிக்கு 
உண்டு

உடல் எடை குறைய

துளசியிலை சாறு 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

வெப்ப நோய்கள்

துளசியை கோடை காலத்தில் தினம் 1௦ இலைகள் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் மிகுந்தவர்க்கும் உடல் உஷ்ணம் குறைந்தவர்களுக்கும் உடல் சூட்டை சமச்சீராக வைக்க உதவும்.

அம்மை நோய் ஏற்பட்டிருந்தால் அதிகரிக்காதிருக்க செய்யும். 

துளசி விதை 10 கிராம், அரசவிதை 10 கிராம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி 2 வேளை 1 மாத்திரை வீதம் பாலில் கலந்து சாப்பிட கணச்சூடு நீங்கும்.

துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி நெஞ்சில் உள்ள கோழையை அகற்றி உடல் வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்

நரம்புக்கு ஊக்கம் தரும்

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடைந்து நரம்புத் தளர்ச்சி நோய் நீங்கி உடல் புத்துணர்வடையும்.

கை, கால், மூட்டு வலிகள் மற்றும் தசைகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு துளசி சாற்றை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் துளசி இலை சிறுது தினம் சாப்பிட குணமாகும்.

துளசி இலைச்சாறு, ஆமணக்கு வேர்ச்சாறு சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும்.

துளசி விதையை பொடியாக்கி 20 கிராம் இரண்டு வேளை சாப்பிட்டு வர நரம்புகளில் வலி, சிறுநீர் தடை குணமாகும்.

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறு எடுத்து 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
இரத்தத்தை சுத்தபடுத்தும் குணமும் துளசிக்கு உண்டு.

மன அழுத்தம் நீங்க

துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது.

வலிகளுக்கு நிவாரணம்

விலாவலிக்கு துளசி இலை 1 கைபிடி, இஞ்சி 1 துண்டு, தாமரை வேர் 40 கிராம் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றுப்போட குணமாகும்.

துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கை, கால் வலி குணமாகும்.

துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசு நெய் கலந்து சாப்பிட்டால் வாத வீக்கம் குணமாகும்.

குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக்கட்டுப்பாடு செய்ய தயங்கும் தம்பதிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

தாது விருத்திக்கு 

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.

துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால் கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.

துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவு எடுத்து ஒரு சிட்டிகை பொடியை  வெற்றிலையுடன் மென்று தின்றால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு வெற்றிலையுடன் சாப்பிட்டால், விந்து கட்டுப்படும்.

துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் விந்து பலப்படும் மேலும் நீரிழிவு நோயும் குறையும்(தினம் 2 வேளை 40 நாட்கள் இந்த மருந்தை எடுக்க வேண்டும்).

உடல் நலனில் அக்கறை  

துளசியை தினமும் சாப்பிட்டு வந்தால்

  • நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.
  • நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி செயல்படும் உடலை தூய்மைப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. 
  • வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. 
  • தாய்பால் சுரப்பு அதிகமாகும். 
  • உடல் சோர்வு தீரும் 
  • தலைசுற்று குணமாகும். 
  • பிரசவ வலி குறையும். 
  • எந்த வியாதியும் உண்டாகமலிருக்கும். 
  • கெட்டரத்தம் சுத்தமாக. 
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற துளசி இலை சாற்றை குடிக்க கொடுக்கலாம். 

துளசி நீர்

செய்யும் 
முறை

சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும். அதல்  சுத்தமான நீர் ஊற்றி ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும். இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால். பல நோய்களை குணமாக்குவதோடு நோய்கள் எதுவும் நம்மை தாக்காது, அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை தெளிவாகும் அதாவது இளமையுடன் என்றும் வாழலாம்.

துளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

குறிப்புகள்

துளசி சாறு அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் கால் முதல் அரை அவுன்ஸ் 
குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும் அரை ஸ்பூன் முதல் 2 ஸ்பூன் வரை பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

துளசி இலைக்கு இயற்கையில் குடும்பவிருத்தியை கட்டுப்படுத்தும் குணம் இருப்பதால் திருமணத்திற்கு காத்திருக்கும் இளையோரும் இளம் தம்பதிகளும் அளவோடு சாப்பிடவேண்டும். (தவிர்ப்பது நல்லது)


வீடுகளில் துளசி இலைக் கொத்து கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. சுற்றுப்புற மாசுகளை தூய்மை படுத்தி சிறந்த கிருமி நாசினியாக இருக்கும். துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். துளசியை நம் அன்றாட வாழ்வில் சேர்த்து கொணடால் நோய் இன்றி வாழ்வது நிச்சயம். சும்மாவா அந்த காலத்தில் பெரியோர்கள் துளசியை வீட்டில் வளர்க்க வேண்டுமென்று சொன்னார்கள். இனி வீட்டிற்கு அழகுக்காக வைக்கும் செடிகளோடு துளசியை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.



வாழ்க வளமுடன் 

வெள்ளி, 8 ஜனவரி, 2016

Gooseberry Health Benefits - நெல்லிக்காயின் மருத்துவம்

நெல்லிக்காயா நெல்லிக்கனியா?

இயற்கையின் அற்புதங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அதன் மூலம் ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் அனுபவத்தில் பெற்றவர்கள். நோய் வருமுன் தடுக்கவும், வந்தபின் நோயை போக்கவும் பயன்படும் மருந்துகள் இயற்கையிலேயே நம்மைச் சுற்றி நிறைய உள்ளன. அப்படி இயற்கை நமக்கு கொடுத்த அன்பளிப்பு நெல்லி என்று அழைக்கப்படும் நெல்லிக்காய்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் மற்றொன்று காட்டு நெல்லிக்காய், மலை நெல்லிக்காய் என்ற பெயர்களில் அழைக்கப்படும் பெரிய நெல்லிக்காய். பெரிய நெல்லிக்காயில் பழங்களுக்கு இணையான சத்து நிறைந்துள்ளதால் இதனை நெல்லிக்கனி என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள்.  





பெரிய நெல்லிக்காயின் சிறப்பு அம்சம்

நெல்லிக்காய் துவர்ப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன்  இளம் மஞ்சள் நிறத்தில் உருண்டையான வடிவமும் சதைபற்றும் விதையும் கொண்ட காய் (கனி) வகையாகும். நெல்லிக்காயை அமிர்தத்திற்கு இணையாக சொல்லலாம் மற்றும் நெல்லிக்காயை உண்ட பின் தண்ணீரைக் குடித்தால் தண்ணீர் இனிக்கும்.

நெல்லிக்காயில் வைட்டமின் C அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் C அழிவதில்லை. நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் (நெல்லி வற்றல்) எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லி இலை, மரப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

10 கிராம் நெல்லிக்காயின் 600 - 900 மி.கி. விட்டமின் சி

நெல்லிக்காயின் அபரிமிதமாக இருக்கும் வைட்டமின் சி மற்ற செயற்கை விட்டமின் சி யை விட சுலபமாக உடலில் சேர்ந்துவிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இனி நெல்லிக்காயின் பல்வேறு மருத்துவக் குணங்களை பார்ப்போம்.

கண்களை பாதுகாக்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும், மேலும் கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், கண்கள் சிவந்து போதல் ஆகியவை குணமாகும் மற்றும் வராமல் தடுக்கும்.

இரவில் சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் வெட்டிப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை திறந்த படி வைத்து கழுவ கண் சிவப்பு கண்களில் புண் போன்றவை குணமாகும்.

பற்களை பலப்படுத்தும்

தினம் ஒரு நெல்லிக்காயை அப்படியே மென்று தின்ன பற்கள் மற்றும் ஈறுகள் பலப்படும், வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய்ப்புண் குணமாக

ஒரு பிடி நெல்லிக்காய் இலைகளை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.

நெல்லிமரப் பட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணமாகும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

இன்றைய உணவுப் முறைகள், சுகாதாரமின்மை, உடற்பயிற்சி இல்லாமை என பல காரணங்களால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் இரத்த சோகை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு. இரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து, இரத்தச் சிவப்பு அணு குறைவு ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். இக்குறைபாட்டை சரி செய்யும் நல்ல மருந்து நெல்லிக்காய் ஆகும்.

நெல்லிக்காய் உடலின் இரத்த ஓட்டத்தை சுத்தபடுத்தும் மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாகி உடலை மேம்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம்

நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும் நெல்லிக்காய் மனத்தை அமைதிப் படுத்தும்,

நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சமநிலைப்படும்.

இருதயத்தை பாதுகாப்பதில் நெல்லிக்காயின் பங்கு

இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைக்கும் கொழுப்பை நீக்கி, இருதயத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும் தன்மை நெல்லிக்காயில் உள்ளது.

நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால் தினமும் ஒன்று சாப்பிட உடலில் புதிய இரத்த செல்கள் உருவாகும் மேலும் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இருதயத்திற்கு வலிமையை தரும்.

ஜலதோஷத்திற்கு நிவாரணம் தரும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும் என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கும் என்பது தவறு, உண்மையில் ஜலதோஷம் வராமல் தடுக்கும் தன்மையுள்ளது.

காசநோயை இது விரைவாக குணப்படுத்தும்.

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸ் மூலம் பரவும் எல்லா வகையான நோய்களையும் கட்டுப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள்

நெல்லிக்காய் அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லையைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு.

நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து ஆரோக்கியமாக இருக்க பேருதவி புரிகிறது.

நெல்லிக்காய், புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

குடலியக்கம் சீராகும்

தினசரி நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். குடல் வாயுவை அகற்றும்.

கல்லீரலுக்கு நல்லது

நெல்லிக்காய் உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றி, கல்லீரல் பாதிப்படையாமல் இயங்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி 

நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

நெல்லி விதைகளை பொடி செய்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நீரிழிவு கட்டுப்படும்.

நெல்லிக்காயை தினம் சாப்பிட்டு வந்தால் இயற்கையில் இன்சுலின் சுரப்பு ஏற்பட்டு நீரிழிவு கட்டுப்படும்.

நெல்லிக்காய் பொடி, நாவல் பழ விதை பொடி, பாகற்காய் பொடி  இந்த மூன்றையும் சம அளவில் கலந்து சாப்பிட உடலில் சர்க்கரை அளவு சமநிலைப்படும் ,

உடலில் உள்ள கொழுப்பை அகற்ற

நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புச்சத்து வெளியேற்றப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவும்.

உடலில் அதிக படியான கொழுப்புச் சத்து நீக்கப்படும் போது இருதய சம்பந்தமான நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

மூட்டு வலி

உலர்ந்த நெல்லிக்காயையும் (நெல்லிவற்றல்) சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

புற்றுநோய்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் நோய்க்கு பின் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும். நாளடைவில் குணம் பெறலாம்..

மஞ்சள் காமாலைக்கு அஞ்சத்தேவையில்லை

நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையுடன் நெல்லிக்காயை சேர்த்து அரைத்து சாப்பிட்டுவந்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.

ஆயுளை வளர்க்கச் செய்வது

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவுவதோடு ஆயுளையும் நீடிக்க உதவுகிறது மேலும் தொற்று நோய்கள் எதுவும் அண்டாது.

முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத் தோற்றத்தைத் தருகிறது மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நெல்லிச்சாறு 

நெல்லிக்காயின் உண்மையான பலனை உணர சாறு  எடுத்து அருந்துவதாகும், நெல்லிக்காய் சாறானது சற்று துவர்ப்புடன் இருக்கும் மேலும் உடலுக்கு பல நன்மைககளை வழங்கும். 

சுவையான நெல்லிக்காய் சாறு தயாரிப்பது எப்படி?

முறை 1 : இஞ்சி - நெல்லிக்காய் சாறு


இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

இரண்டு நெல்லிக்காய்களை விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்,  சிறிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டாக வெட்டிக் கொண்டு,  நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், பிறகு, இரண்டு டீஸ்பூன் வெல்லம், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும். 

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த இஞ்சி - நெல்லிக்காய் சாறு குடிப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். நெல்லிக்காய் சாறு பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் சாறு பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்

முறை 2 நெல்லிக்காய் இளநீர் கலந்த சாறு

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும் அவ்வெப்பத்தை தணிப்பதற்கு இந்த சாறு சிறந்ததாக இருக்கும்.

செய்முறை: நெல்லிக்காய் 1௦ எண்ணம் எடுத்து விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து தேன் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

சரும பிரச்சனைகளை குணப்படுத்தும் மற்றும் முகப்பரு உள்ளவர்கள் நிவாரணம் பெறலாம்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை இந்த சாறு குடிக்க குணமாகும் மேலும் சிறுநீரை பெருக்கும்.

முறை 3 நெல்லிக்காய் மற்றும் தேன் கலந்த சாறு

செய்முறை: நெல்லிக்காய் 1௦ எண்ணம் எடுத்து விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து தேன் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

மூளை, இருதயம், கல்லீரல், குடல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.......!

இரத்தம் சுத்தமாகும், உடல் பலமடைவதோடு சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண் பார்வை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது, அல்சரைக் குணப்படுத்தலாம்

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும், அச்சமயங்களில், தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும் (மேற்கூறிய ஏதாவது ஒரு முறையில் செய்த சாறு), கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம். உடல் அசதி தீரும்.

வகை 4 நெல்லிக்காய்ச் சாறு மட்டும்

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. 

கண்ச்சூட்டிற்கு நெல்லிக்காய் சாறு இரு வேலை ஒரு ஸ்பூன் விதம் சாப்பிட்டு வர குணமாகும்.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி., எலுமிச்சம்பழ சாறு 15 மி.லி. ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர நீரழிவு குணமாகும்.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி. உடன் மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி சேர்த்து உட்கொள்வது சர்க்கரை வியாதிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்

நீரிழிவு நோயாளிகள் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், 1 கப் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை நோயாளிக்கு நல்ல நிவாரணம் தரும். நீரழிவால் ஏற்படும் கண் கோளாறுகள் தடுக்கப்படும்.

கணையச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நல்ல பலனளிக்கும்.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி அதனை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் நன்கு மசாஜ் செய்து ஊறவைத்து குளித்து வந்தால் இள நரை மறைவதை நன்கு காணலாம்.

நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தால் தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

தினம் ஒரு நெல்லிக்காயை / நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்....

என்றும் 16 வயது வாழ ஓர் நெல்லிக்கனி தினம் உண்ண வேண்டும்.

தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும்

தொற்று நோய்கள் எதுவும் தீண்டாது.

பல், எலும்பு, இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

ஆண்குறிக் கொப்புளங்கள் குணமாக்கும்.

வாந்தி, அலர்ஜி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்

சளி, இருமல் போன்றவை குறையும்.

உடலைப் பலப்படுத்தும். உடல் சதை பலப்படும்.

நெல்லிக்காயை உபயோகிக்கும் முறை

நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காயை ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். 

நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் முறை 

தேவையானவை

முழு நெல்லிக்காய் - விதை நீக்கி வெட்டியது - 1  கப்
உப்பு - தேவையான அளவு  
வெந்தயத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு 
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 1  கப் 
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1  ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் நெல்லிக்காய் போட்டு வதக்கவும், நெல்லிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


குறிப்பு 
  • நெல்லிக்காயை எண்ணையில் வதக்க விரும்பாதவர்கள் அவித்து எண்ணையை குறைவாக சேர்த்து வதக்கலாம்.  
  • 5 நாட்கள் கழித்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

நெல்லிக்காய் ஜாம் செய்து சாப்பிடலாம்

நெல்லிக்காய் ஜாம் செய்யும் முறை 

நெல்லிக்காய் ஜாம் செய்ய தேவையான பொருட்கள் ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், 25 கிராம் சுக்கு, 10 கிராம் ஏலக்காய்.

செய்முறை 


நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும்.வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகுடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி.

இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்


தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயை சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயை பச்சையாகச் சாப்பிடும் போது அதன் முழுமையான சத்து உடலுக்கு கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்கள்   சாப்பிடலாம்.

நெல்லிக்காயை விதை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு சர்க்கரைத் சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம்.

நெல்லி வற்றலை இடித்து தூளாக்கி சம அளவு சர்க்கரைத் சேர்த்து காலை வெறும் வயற்றில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம். இதனால் கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக மன உளைச்சலால் ஏற்படும் கை உதறல் குணமாகும். பெரும்பாலும் கைகள் நடுங்குவதை நரம்புத் தளர்ச்சி என்றோ, நடுக்கல்வாதம் என்றோ எண்ணி பல மருந்துகளை அளித்தும் பலன் கிட்டாத நிலையில் நெல்லி வற்றல் சிறப்பான குணத்தை அளிக்கும்.

நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் துவையல் செய்யும் முறை

நெல்லிக்காய் 3 எண்ணம், சீரகம் ஒரு தேக்கரண்டி, பூண்டு 2 பல், சின்ன வெங்காயம் 2, தேங்காய் அரை முறி, உப்பு தேவைகேற்ப போன்றவற்றைச் சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் இரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.


நெல்லியின் பிற பயன்கள்

நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.

நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும், பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.

நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பித்தத் தொடர்பான வியாதிகள் குணமாகும்.


நெல்லி மரங்கள், வீட்டு மர வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் (ஷாம்பூ) தயாரிப்பதில் பயன்படுகின்றன.

தரமான தலைச்சாயங்களில் நெல்லி விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். நெல்லி மரத்தின் தண்டு, இலை, காய் உட்பட எல்லாமே கறுப்புத் தன்மை கொடுப்பதால் மை, தலைசாயம், தோல்களை வண்ணப்படுத்த உதவுகிறது.

இயற்கை அளித்துள்ள உணவு வகைகளில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனி வகைகள்.  நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வாழ வைக்கின்றன.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.



வாழ்க வளமுடன்