வெள்ளி, 8 ஜனவரி, 2016

Gooseberry Health Benefits - நெல்லிக்காயின் மருத்துவம்

நெல்லிக்காயா நெல்லிக்கனியா?

இயற்கையின் அற்புதங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அதன் மூலம் ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் அனுபவத்தில் பெற்றவர்கள். நோய் வருமுன் தடுக்கவும், வந்தபின் நோயை போக்கவும் பயன்படும் மருந்துகள் இயற்கையிலேயே நம்மைச் சுற்றி நிறைய உள்ளன. அப்படி இயற்கை நமக்கு கொடுத்த அன்பளிப்பு நெல்லி என்று அழைக்கப்படும் நெல்லிக்காய்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் மற்றொன்று காட்டு நெல்லிக்காய், மலை நெல்லிக்காய் என்ற பெயர்களில் அழைக்கப்படும் பெரிய நெல்லிக்காய். பெரிய நெல்லிக்காயில் பழங்களுக்கு இணையான சத்து நிறைந்துள்ளதால் இதனை நெல்லிக்கனி என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள்.  





பெரிய நெல்லிக்காயின் சிறப்பு அம்சம்

நெல்லிக்காய் துவர்ப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன்  இளம் மஞ்சள் நிறத்தில் உருண்டையான வடிவமும் சதைபற்றும் விதையும் கொண்ட காய் (கனி) வகையாகும். நெல்லிக்காயை அமிர்தத்திற்கு இணையாக சொல்லலாம் மற்றும் நெல்லிக்காயை உண்ட பின் தண்ணீரைக் குடித்தால் தண்ணீர் இனிக்கும்.

நெல்லிக்காயில் வைட்டமின் C அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் C அழிவதில்லை. நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் (நெல்லி வற்றல்) எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லி இலை, மரப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

10 கிராம் நெல்லிக்காயின் 600 - 900 மி.கி. விட்டமின் சி

நெல்லிக்காயின் அபரிமிதமாக இருக்கும் வைட்டமின் சி மற்ற செயற்கை விட்டமின் சி யை விட சுலபமாக உடலில் சேர்ந்துவிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இனி நெல்லிக்காயின் பல்வேறு மருத்துவக் குணங்களை பார்ப்போம்.

கண்களை பாதுகாக்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும், மேலும் கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், கண்கள் சிவந்து போதல் ஆகியவை குணமாகும் மற்றும் வராமல் தடுக்கும்.

இரவில் சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் வெட்டிப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை திறந்த படி வைத்து கழுவ கண் சிவப்பு கண்களில் புண் போன்றவை குணமாகும்.

பற்களை பலப்படுத்தும்

தினம் ஒரு நெல்லிக்காயை அப்படியே மென்று தின்ன பற்கள் மற்றும் ஈறுகள் பலப்படும், வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய்ப்புண் குணமாக

ஒரு பிடி நெல்லிக்காய் இலைகளை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.

நெல்லிமரப் பட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணமாகும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

இன்றைய உணவுப் முறைகள், சுகாதாரமின்மை, உடற்பயிற்சி இல்லாமை என பல காரணங்களால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் இரத்த சோகை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு. இரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து, இரத்தச் சிவப்பு அணு குறைவு ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். இக்குறைபாட்டை சரி செய்யும் நல்ல மருந்து நெல்லிக்காய் ஆகும்.

நெல்லிக்காய் உடலின் இரத்த ஓட்டத்தை சுத்தபடுத்தும் மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாகி உடலை மேம்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம்

நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும் நெல்லிக்காய் மனத்தை அமைதிப் படுத்தும்,

நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சமநிலைப்படும்.

இருதயத்தை பாதுகாப்பதில் நெல்லிக்காயின் பங்கு

இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைக்கும் கொழுப்பை நீக்கி, இருதயத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும் தன்மை நெல்லிக்காயில் உள்ளது.

நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால் தினமும் ஒன்று சாப்பிட உடலில் புதிய இரத்த செல்கள் உருவாகும் மேலும் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இருதயத்திற்கு வலிமையை தரும்.

ஜலதோஷத்திற்கு நிவாரணம் தரும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும் என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கும் என்பது தவறு, உண்மையில் ஜலதோஷம் வராமல் தடுக்கும் தன்மையுள்ளது.

காசநோயை இது விரைவாக குணப்படுத்தும்.

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸ் மூலம் பரவும் எல்லா வகையான நோய்களையும் கட்டுப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள்

நெல்லிக்காய் அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லையைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு.

நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து ஆரோக்கியமாக இருக்க பேருதவி புரிகிறது.

நெல்லிக்காய், புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

குடலியக்கம் சீராகும்

தினசரி நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். குடல் வாயுவை அகற்றும்.

கல்லீரலுக்கு நல்லது

நெல்லிக்காய் உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றி, கல்லீரல் பாதிப்படையாமல் இயங்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி 

நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

நெல்லி விதைகளை பொடி செய்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நீரிழிவு கட்டுப்படும்.

நெல்லிக்காயை தினம் சாப்பிட்டு வந்தால் இயற்கையில் இன்சுலின் சுரப்பு ஏற்பட்டு நீரிழிவு கட்டுப்படும்.

நெல்லிக்காய் பொடி, நாவல் பழ விதை பொடி, பாகற்காய் பொடி  இந்த மூன்றையும் சம அளவில் கலந்து சாப்பிட உடலில் சர்க்கரை அளவு சமநிலைப்படும் ,

உடலில் உள்ள கொழுப்பை அகற்ற

நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புச்சத்து வெளியேற்றப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவும்.

உடலில் அதிக படியான கொழுப்புச் சத்து நீக்கப்படும் போது இருதய சம்பந்தமான நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

மூட்டு வலி

உலர்ந்த நெல்லிக்காயையும் (நெல்லிவற்றல்) சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

புற்றுநோய்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் நோய்க்கு பின் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும். நாளடைவில் குணம் பெறலாம்..

மஞ்சள் காமாலைக்கு அஞ்சத்தேவையில்லை

நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையுடன் நெல்லிக்காயை சேர்த்து அரைத்து சாப்பிட்டுவந்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.

ஆயுளை வளர்க்கச் செய்வது

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவுவதோடு ஆயுளையும் நீடிக்க உதவுகிறது மேலும் தொற்று நோய்கள் எதுவும் அண்டாது.

முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத் தோற்றத்தைத் தருகிறது மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நெல்லிச்சாறு 

நெல்லிக்காயின் உண்மையான பலனை உணர சாறு  எடுத்து அருந்துவதாகும், நெல்லிக்காய் சாறானது சற்று துவர்ப்புடன் இருக்கும் மேலும் உடலுக்கு பல நன்மைககளை வழங்கும். 

சுவையான நெல்லிக்காய் சாறு தயாரிப்பது எப்படி?

முறை 1 : இஞ்சி - நெல்லிக்காய் சாறு


இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

இரண்டு நெல்லிக்காய்களை விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்,  சிறிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டாக வெட்டிக் கொண்டு,  நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், பிறகு, இரண்டு டீஸ்பூன் வெல்லம், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும். 

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த இஞ்சி - நெல்லிக்காய் சாறு குடிப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். நெல்லிக்காய் சாறு பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் சாறு பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்

முறை 2 நெல்லிக்காய் இளநீர் கலந்த சாறு

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும் அவ்வெப்பத்தை தணிப்பதற்கு இந்த சாறு சிறந்ததாக இருக்கும்.

செய்முறை: நெல்லிக்காய் 1௦ எண்ணம் எடுத்து விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து தேன் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

சரும பிரச்சனைகளை குணப்படுத்தும் மற்றும் முகப்பரு உள்ளவர்கள் நிவாரணம் பெறலாம்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை இந்த சாறு குடிக்க குணமாகும் மேலும் சிறுநீரை பெருக்கும்.

முறை 3 நெல்லிக்காய் மற்றும் தேன் கலந்த சாறு

செய்முறை: நெல்லிக்காய் 1௦ எண்ணம் எடுத்து விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து தேன் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

மூளை, இருதயம், கல்லீரல், குடல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.......!

இரத்தம் சுத்தமாகும், உடல் பலமடைவதோடு சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண் பார்வை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது, அல்சரைக் குணப்படுத்தலாம்

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும், அச்சமயங்களில், தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும் (மேற்கூறிய ஏதாவது ஒரு முறையில் செய்த சாறு), கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம். உடல் அசதி தீரும்.

வகை 4 நெல்லிக்காய்ச் சாறு மட்டும்

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. 

கண்ச்சூட்டிற்கு நெல்லிக்காய் சாறு இரு வேலை ஒரு ஸ்பூன் விதம் சாப்பிட்டு வர குணமாகும்.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி., எலுமிச்சம்பழ சாறு 15 மி.லி. ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர நீரழிவு குணமாகும்.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி. உடன் மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி சேர்த்து உட்கொள்வது சர்க்கரை வியாதிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்

நீரிழிவு நோயாளிகள் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், 1 கப் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை நோயாளிக்கு நல்ல நிவாரணம் தரும். நீரழிவால் ஏற்படும் கண் கோளாறுகள் தடுக்கப்படும்.

கணையச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நல்ல பலனளிக்கும்.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி அதனை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் நன்கு மசாஜ் செய்து ஊறவைத்து குளித்து வந்தால் இள நரை மறைவதை நன்கு காணலாம்.

நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தால் தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

தினம் ஒரு நெல்லிக்காயை / நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்....

என்றும் 16 வயது வாழ ஓர் நெல்லிக்கனி தினம் உண்ண வேண்டும்.

தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும்

தொற்று நோய்கள் எதுவும் தீண்டாது.

பல், எலும்பு, இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

ஆண்குறிக் கொப்புளங்கள் குணமாக்கும்.

வாந்தி, அலர்ஜி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்

சளி, இருமல் போன்றவை குறையும்.

உடலைப் பலப்படுத்தும். உடல் சதை பலப்படும்.

நெல்லிக்காயை உபயோகிக்கும் முறை

நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காயை ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். 

நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் முறை 

தேவையானவை

முழு நெல்லிக்காய் - விதை நீக்கி வெட்டியது - 1  கப்
உப்பு - தேவையான அளவு  
வெந்தயத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு 
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 1  கப் 
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1  ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் நெல்லிக்காய் போட்டு வதக்கவும், நெல்லிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


குறிப்பு 
  • நெல்லிக்காயை எண்ணையில் வதக்க விரும்பாதவர்கள் அவித்து எண்ணையை குறைவாக சேர்த்து வதக்கலாம்.  
  • 5 நாட்கள் கழித்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

நெல்லிக்காய் ஜாம் செய்து சாப்பிடலாம்

நெல்லிக்காய் ஜாம் செய்யும் முறை 

நெல்லிக்காய் ஜாம் செய்ய தேவையான பொருட்கள் ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், 25 கிராம் சுக்கு, 10 கிராம் ஏலக்காய்.

செய்முறை 


நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும்.வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகுடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி.

இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்


தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயை சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயை பச்சையாகச் சாப்பிடும் போது அதன் முழுமையான சத்து உடலுக்கு கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்கள்   சாப்பிடலாம்.

நெல்லிக்காயை விதை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு சர்க்கரைத் சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம்.

நெல்லி வற்றலை இடித்து தூளாக்கி சம அளவு சர்க்கரைத் சேர்த்து காலை வெறும் வயற்றில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம். இதனால் கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக மன உளைச்சலால் ஏற்படும் கை உதறல் குணமாகும். பெரும்பாலும் கைகள் நடுங்குவதை நரம்புத் தளர்ச்சி என்றோ, நடுக்கல்வாதம் என்றோ எண்ணி பல மருந்துகளை அளித்தும் பலன் கிட்டாத நிலையில் நெல்லி வற்றல் சிறப்பான குணத்தை அளிக்கும்.

நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் துவையல் செய்யும் முறை

நெல்லிக்காய் 3 எண்ணம், சீரகம் ஒரு தேக்கரண்டி, பூண்டு 2 பல், சின்ன வெங்காயம் 2, தேங்காய் அரை முறி, உப்பு தேவைகேற்ப போன்றவற்றைச் சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் இரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.


நெல்லியின் பிற பயன்கள்

நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.

நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும், பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.

நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பித்தத் தொடர்பான வியாதிகள் குணமாகும்.


நெல்லி மரங்கள், வீட்டு மர வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் (ஷாம்பூ) தயாரிப்பதில் பயன்படுகின்றன.

தரமான தலைச்சாயங்களில் நெல்லி விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். நெல்லி மரத்தின் தண்டு, இலை, காய் உட்பட எல்லாமே கறுப்புத் தன்மை கொடுப்பதால் மை, தலைசாயம், தோல்களை வண்ணப்படுத்த உதவுகிறது.

இயற்கை அளித்துள்ள உணவு வகைகளில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனி வகைகள்.  நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வாழ வைக்கின்றன.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.



வாழ்க வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக