புதன், 23 டிசம்பர், 2020

ஒற்றைத்தலைவலி - Migraine

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!

தாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி... தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்... அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. சிலருக்கு மாலை வேளையானால் தலைவலி தொடங்கிவிடும். அதிகச் சத்தம் கேட்டால், மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நடந்தால்... என தலைவலிக்கான காரணப் பட்டியலின் நீளம் அதிகம். தலைவலிக்கும் நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால்கூட எரிச்சலாக வரும்; கோபம் தலைக்கு ஏறும். `இதற்குத் தீர்வே இல்லையா?’ எனப் புலம்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  

ஏன் வருகிறது ஒற்றைத்தலைவலி? 

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும்.

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும். உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வோருக்கும் இந்தப் பிரச்னை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் வீங்குதலாலும் வலி உண்டாகும். அந்த நேரத்தில், நைட்ரிக் ஆக்ஸ்சைடு அமிலம் அதிகமாகச் சுரக்கும். அது, ரத்தக் குழாய்களைத் தூண்டும். 

5-ஹைட்ராக்சிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். வலி உணர்ச்சியைத் தரக்கூடிய ட்ரைஜெமினல் (Trigeminal) என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இவ்வாறு உண்டாகும் வலி, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரலாம்.

பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்புகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன? 

வலி வருவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரென சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும். 

சிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாக கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகி சரியாகும். வாந்தி அல்லது  குமட்டல் உணர்வு இருக்கும். இந்த நேரத்தில், அமைதியாக அறைக்குள், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருளை ஏற்படுத்திக்கொண்டு உறங்குவது சற்று ஆறுதல் தரும்.

உங்க டூத் பேஸ்ட்ல இருக்கு சிக்கல் சமீப காலங்களில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்களாலும், ஒற்றைத்தலைவலி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியதும், கடமைக்கு என வாய் கொப்பளிப்போருக்குத்தான் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். நாக்கிலேயே ஒட்டியிருக்கும் டூத் பேஸ்ட்டின் வேதிக்கலவை, சாப்பிடும்போது அப்படியே உடலுக்குள் சென்றுவிடும். நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும். பல நாட்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு நடக்கும்போது, தலைவலியை உண்டாக்கிவிடும். 

தவிர, உடுத்தும் உடைகளில் ஒட்டியிருக்கும் டிடர்ஜென்ட் பௌடர், வாசனைத் திரவியங்கள் வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு சாக்லேட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதாலும் வலி வரும்.

பாதிப்பது அதிகம் பெண்களே! 

ஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன. தவிர, பூப்பெய்தும் காலம்,  மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் உடலில் உண்டாகும் பித்தத்தால், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும்.  இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.

எப்படிக் குணப்படுத்துவது? 

பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine) முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine) என வலிகளில் பலவகை உள்ளன. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், தேவையற்ற சிந்தனையைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் என வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டாலே வலி வராமல் தடுத்துக்கொள்ள முடியும். 

அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம். தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். வலி, தாங்கவே முடியாதபட்சத்தில் மட்டும் மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத நோய் என்றுதான் பலரும் பயப்படுகின்றனர். அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடுவது நிச்சயம்.

தலைவலி நீங்க! 

  • இரவு நேரங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாகச் சாப்பிடுவதும் கூடாது.
  • வாரம் ஒரு முறையாவது உணவு உண்ணாமல் நோன்பு இருக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது, வயிற்றைச் சுத்தம்செய்ய வேண்டும்.
  • குளிர் மற்றும் பனிக் காலங்களில் செரிமானம் குறைவாக இருக்கும். வெந்நீர் அல்லது வெந்நீரில் சீரகம் சேர்த்துப் பருகுவதால், செரிமானம் எளிதாகும். கோடை காலத்தில் சாதாரண நீரைப் பருகலாம்.
  • காலை உணவை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. டீ, காபியை முடிந்த அளவுக்குத் தவிர்க்கலாம்.

ஒற்றைத்தலைவலி வராமல் தடுக்க... 

  • சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப் பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்து வரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.
  • இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.
  • 20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும்; பித்தம் குறையும்; கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

ஒற்றைத் தலைவலி... சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.

மைக்ரேனைத் தூண்டும் காரணிகளில், மிகமுக்கியப் பங்கு உணவுகளுக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கோடையில் வெப்பம் அதிகரிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையத் தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படும் பாதிப்புகளில், முதன்மையானது தலைவலி. ஏற்கெனவே மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு, தலைவலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். பொதுவாக மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு, வேறு சில உடல் உபாதைகளும் இருக்கக்கூடும்.

* மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குப் பசியின்மை இருக்கும். அவர்களில் பலர் பெரும்பாலான நாள்கள், ஒன்று அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவர்.

* மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குச் சரியான நேரத்துக்குச் சாப்பிடும் பழக்கம் இருக்காது. பசி எடுக்கும் போதெல்லாம் டீ, காபியை மட்டுமே குடிப்பார்கள்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

* தூக்க நெறிமுறை இருக்காது.

* அதிக மனஅழுத்தத்துடன் காணப்படுவார்கள்.

* ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும்.

* வெளியிடங்களில் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

உணவு முறையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் மேலே சொல்லப்பட்டவற்றில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்வதும், தவறான பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதும் மைக்ரேனைத் தவிர்க்க உதவும்.

மைக்ரேன் பிரச்னையை சில உணவுகள் அதிகரிக்கும். அந்த உணவுகளில் பொதுவான சிலவற்றைப் பார்ப்போம்.

சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, `டைராமைன்' (Tyramine) சத்து அதிகம் உள்ள உணவுப்பொருளான சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ வகைகள், `எம்.எஸ்.ஜி' எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்' (Mono Sodium Glutamate) என்ற சுவையூட்டப்பட்டி சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.

`மைக்ரேன்' தலைவலியை அதிகரிக்கும் உணவுகள் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து, ஒருவருக்கொருவர் மாறுபடும். எந்த உணவு மைக்ரேன் தலைவலியை அதிகரிக்கிறது என்பதை, நோயாளிகள் சுயபரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு, உணவுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொருமுறை `மைக்ரேன்' தலைவலி ஏற்படும்போதும், என்ன உணவு உட்கொண்டோம் என்பதைப் பரிசோதித்து, அடுத்தடுத்த நாள்களில் அவற்றைத் தவிர்க்கவேண்டும்.

மைக்ரேன் தலைவலி உள்ளவர்கள், அவசியம் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

* புதிதாக டயட் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, அது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி `மைக்ரேன்' பிரச்னையை ஏற்படுத்தலாம். முறையாக ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று டயட்டைப் பின்பற்றவும்.

* மைக்ரேன் உள்ளவர்களில் பெரும்பாலோனோருக்கு, டீ, காபி அளவுக்கதிகமாக குடிக்கும் பழக்கம் இருக்கும். கோடைக்காலத்தில் அப்பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். அதற்குப் பதிலாக இளநீர், நுங்கு, நீர்மோர், பானகம் போன்றவற்றை சாப்பிடலாம்.

* ஒருநாளில் மூன்று வேளை உணவு என்பதை, ஆறு வேளை என மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சாப்பாட்டுக்கான நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு, தினமும் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

* தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். அதேபோல், மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தினமும் யோகா மற்றும் தியானம் செய்யவேண்டும். மேற்சொன்னவாறு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, மைக்ரேன் வலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்து வந்தால் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக