திங்கள், 24 மே, 2021

வெப்ப நோய்களை விரட்டும் வெட்டி வேர்!   


கோடைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பே அனல் அடிக்கும் வெயிலும், வியர்வை வழியும் கொடுமையும் தொடங்கிவிடும். பருவ நிலை மாறும்போதே, ஒருசில நோய்களும் தலைகாட்டத் தொடங்கிவிடும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டி வேர் மூலிகைக்கு நிகர் இல்லை. பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட புல் வகையைச் சார்ந்த இந்த  மூலிகைத் தாவரம் சுமார் ஐந்து அடி வரை வளரும். வேர்கள் சுமார் நான்கு அடிகள் வரை நீண்டிருக்கும். இதன் வேர்ப்பகுதி தான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவப் பயன்கள்  மகத்தானவை. 

வெட்டி வேர் அனைத்து வகை நிலங்களிலும் வளரும் இயல்புடையதாக இருந்தாலும், மணற்பாங்கான ஆற்றங்கரையோரங்களில் செழித்து வளரக்கூடியது. இவ்வேரை, மணமூட்டியாக தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும்,  பயன்படுத்துவர். 

மருத்துவ பயன்கள் 

• கோடைக் காலத்தில் ஏற்படும் நீர்க் கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள், சுலபமாக நம்மைத் தொட்டுப் படரும். அந்த நோய்களை மிக எளிதில் விரட்டி அடிக்கும் இந்த வெட்டி வேர், ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகையும் அளிக்கக் கூடியது. 

• வெட்டிவேர் குளிர்ச்சி உண்டாக்கி; பித்தம் அடக்கி. பித்தத்தால் உண்டாகிற குருதி அழல் (BP), சர்க்கரை நோயால் ஏற்படுகிற நீர் வேட்கை, மயக்கம் மற்றும் நரம்பில் ஏற்படுகிற வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

• வெட்டி வேரால் தட்டி செய்து வீட்டின் ஜன்னல் திரைகளாகப் பயன்படுத்தலாம். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல நறுமணம் வீசும்.

• வெட்டிவேரினால் செய்யப்படும் நாற்காலிகள், மூலநோயின்  தீவிரத்தைக் குறைத்து அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது. 

• வெட்டிவேரைக் கொண்டு செய்யப்படும் விசிறிகள் உடல் எரிச்சல், தேக சூட்டினை நீக்கி, மனம் புத்துணர்வு அடைய செய்கின்றன. சில்லென்ற இதமான காற்றுக்கும் வெட்டி வேர் விசிறியைப் பயன்படுத்தலாம். 

• ஆதி காலங்களில் பெண்கள் இந்த வேரை விரும்பி தலையில் அணிவார்கள். இதனால் கூந்தல் மணம் பெறும். 

உபயோகிக்கும் முறை 

• வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடியும். இதற்கு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் தூளைப் பசையாக்கி, தலையில் பரவலாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடல் சூடு தணிந்து, முகத்தில் எண்ணெய் வடிவது நின்று பளிச்செனக் காட்டும். 

• தலைமுடி தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாத்திடும் தன்மை கொண்ட இவ்வேரை தண்ணீரில் ஊறவைத்து, 30 மி.லி - 60 மி.லி வரை  உணவுக்குப்பின் அருந்தி வர காய்ச்சல், செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் சிறுநீரக எரிச்சலும்  குணமாகும். குழந்தைகளுக்கு 10 மி.லி. முதல் 20 மி.லி. தரலாம். 

• வெயில் காலத்தில் நம்மைப் பயமுறுத்துகிற வியர்குரு, முகப்பரு ஆகியவை குணமாக, வெட்டி வேர், விலாமிச்சை, பாசிப்பயிறு, சந்தனம் ஆகியவற்றை தூளாக அரைத்து, அதனுடன் பன்னீர் கலந்து தடவி வர, எதிர்பார்த்த பலன்  கிடைக்கும். 

• காலநிலை மாறுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் இளமையில் முகப் பருக்கள் வருவது சகஜம். அதிக உஷ்ணத்தால், சிலருக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். பொடித்த வெட்டி வேர்த் தூளை தண்ணீர் விட்டுப் பசையாக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி, மென்மையான பருத்தித் துண்டால் துடைத்துக்கொள்ள வேண்டும். உடல்வாகுக்கு ஏற்றவாறு தினசரி அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்’ போட்டு வந்தால், பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும். 

• சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊற வைத்து தலைமுடிக்கு தினமும் தேய்த்துவர, தலைமுடியின் வேர்க்கால்கள் பலப்படும். முடி உதிர்வது நிற்கும். பளபளப்பாகவும் கருமையாகவும் வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். இந்த எண்ணெய்யை பிரசவ தழும்புகளுக்கு தேய்க்க குறையும்,  தசைவலி மற்றும் மூட்டுவலி நீங்கும். 

• நன்றாகச் சுத்தப்படுத்தி உலர்த்திப் பொடித்த வெட்டி வேர்த் தூளையும், பெருஞ்சீரகம் என்னும் சோம்புத் தூளையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்க வேண்டும். இதை, தினமும் காலையில் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற கோடைக்காலக் கடுப்பு நோய்கள் காணாமல் போகும். 

• வெட்டி வேர் குடிநீர் குளிர்ச்சியைத் தந்து நா வறட்சியைப் போக்கும். புதிய மண்பானை வாங்கியதும், இரண்டு மூன்று நாட்கள் தண்ணீரை மாற்றி மாற்றி நிரப்பிவைத்து அலசி சுத்தப்படுத்திப் பழக்க வேண்டும். இந்த மண்பானையில் ஒரு கைப்பிடி சுத்தமான வெட்டி வேரையும், சிறிது திருநீற்றுப் பச்சிலையையும் போட்டு, அதில் நல்ல நீரை ஊற்றிவைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். நா வறட்சி, தாகம் தீரும். மன அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சி கூடும். 

குளிர்பானம் 

மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாக மட்டும் இல்லாமல், இந்த வேர், தாகம் தணிக்கும் சர்பத் தயாரிக்கவும் உதவுகின்றது. வெட்டிவேரினை  மண்பானை நீரில் ஊறவைத்து, பனைவெல்லத்தினைக் கலந்து சர்பத் செய்து அருந்தி மகிழலாம். இதனால், உடல் சோர்வு நீங்கி, தெம்பு உண்டாகும்.

இனி, வெயிலுக்கு 'வெட்டிவேர்’தான் துணை!

புதன், 19 மே, 2021

உத்தாமணி என்ற வேலிப்பருத்தி 




தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகை தான் வேலிப்பருத்தி. இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது, காயத்தை விரைவாக  ஆற்றுகிறது. கல்லீரலை பாதுகாக்கும், இரத்த சர்க்கரை அளவையும், வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.   

மூச்சிரைப்பைப் போக்கும்! 

• வேலிப்பருத்தி  இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு தீரும். 

• ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால் அதன் பெயர் 'கற்பக மிளகு’. இதை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றிலும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம். 

• இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். 

• உத்தாமணி இலைச் சாற்றோடு, சிறிது உப்புக் கூட்டி கொடுக்க வாந்தியுண்டாக்கி கபத்தை வெளியேற்றும். 

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்! 

வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து,   கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து இரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. 

மாதவிடாய் வலிக்கு 

வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டையும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள். 

வாத நோய்க்கு 

• வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால் வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். 

• வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும். 

• மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கு இதன் இலைச் சாற்றோடு சுண்ணாம்பு கலந்து போடும் வழக்கம் உண்டு. 

• உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து, பசை போலச் செய்து வீக்கங்களில் பற்றிட, உடனடியாக வீக்கம் வடியும். 

• இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல் நீங்கும். 

• கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கும் ஒத்தடம்  கொடுக்கலாம். 

குழந்தைகளுக்கு மருந்தாக

• வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும் போது, வேலிப்பருத்தி இலைகளைக் குடிநீரிட்டு ஒரு ஸ்பூன் கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும். 

• வேலிப்பருத்தி இலைச்  சாறுடன் ஊறவைத்த மிளகைப் பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு வாயுக் கோளாறு இம்சைப்படுத்தாது. சுரத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்த ‘வேலிப்பருத்தி மிளகு’ பயன்படும். 

• உத்தாமணி, நொச்சி, பொடுதலை போன்ற மூலிகைகளை வதக்கிச் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வாரமொருமுறை குழந்தைகளுக்குக் கொடுப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். 

• சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு   வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து கஷாயம் செய்து  பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். 

இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

சங்குப் பூ 




சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த கொடி வகை செடி. இவற்றின் பூ, இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்கள் நிறைந்தது.  

  • வெள்ளை நிற பூக்கள் கொண்ட சங்குப்பூ செடிகள் வேரை கொண்டு கஷாயமாக உட்கொள்ள வெட்டை, தலை நோய், சுரம், பேதி, புண்கள் ஆகியவற்றை போக்கலாம். 
  • ஊதாநிற பூக்கள் உள்ள சங்குப்பூ வேர்களைக் கொண்டு கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய், மூட்டு வலி முடக்குவாதம், தலை பாரம், மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கலாம். 
  • மருத்துவ குணங்கள் கொண்ட இவற்றின் விதைகள் நல்ல மணமுடையதாகவும், புளிப்பு சுவையையும் கொண்டவை. விதைகளுக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உண்டு. மேலும் குடலில் உள்ள பூச்சிகளையும் போக்கும். இலைகள் துவர்ப்பு சுவையை அளிக்கிறது. 
  • இந்த மலர்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுகள், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. பால்வினை, வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. 
  • படபடப்பு, ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும் இந்த சங்குப் பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாகிறது. 
  • உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடிய இவை இதயத்திற்கு பலத்தை அளிப்பதோடு, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சமீபத்திய ஆய்வுகள் மாவுச்சத்து உணவுகளை ஜீரணிக்க இந்த சங்குப் பூக்கள் உதவுகிறது என வெளியிட்டுள்ளது.  
  • பொலிவான முகமும், கருகருவென்று கூந்தலும் பெற உதவுகிறது சங்குப் பூக்கள். அதுமட்டுமல்ல என்றுமே இளமையாக உற்சாகமாகவும் இருக்க சங்குப்பூக்களை  உணவாக உண்ணலாம். 
  • உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அபார சத்துக்கள் இந்த சங்குப்பூக்களில் உள்ளது. இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்க உதவுகிறது. 
  • மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போக்கும் மாமருந்தாக பூக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மன ரீதியான பதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது. 
  • உடலில் ஏற்படும் நெறி கட்டிகள், மூட்டுவலிக்கு, வாத நோய் வீக்கங்களை சங்கு பூ இலை போக்கும் தன்மை கொண்டது.  
  • மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூக்களை பயன்படுத்த சிறந்த நிவாரணம் பெறலாம். 
  • குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் சங்குப்பூக்களை அவ்வப்பொழுது சேர்ப்பதால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். அதிலும் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வினையும் போக்கும் சிறந்த Memory Plus மருந்து. அதே சமயம், குழந்தைகளுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்த சங்குப்பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அளிப்பது போதுமானது. 
  • விளக் கெண்ணெய்யுடன் சங்குப் பூ இலைகளை அரைத்து விழுதை காய்ச்சி தைலமாக தயாரித்துக் கொண்டு மூலத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.  
  • சுவாச சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல நிவாரணத்தை சங்குப்பூக்களின் தேநீர் அளிக்கும். இதனை வீட்டில் வளர்க்க சுவாச ரீதியான தொந்தரவுகள், மன ரீதியான தொந்தரவுகள் அகலும். இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வீக்கம் கட்டுப்படும். 
  • குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு சங்குப்பூ, இலை கஷாயம் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
  • அதிகமாக சங்கு பூக்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப நீரிழிவு, இருதய தொந்தரவுகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • யானைக்கால் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது இந்த சங்குப் பூ செடிகள். சங்குப்பூ செடியின் பூ, இலை, வேர், கொடி, விதை ஆகியவற்றை அரைத்து பூசிவர யானைக்கால் வீக்கம் குறையும், அதனுடன் இதன் தேநீரை அருந்த விரைவில் நல்ல பலனை அடையலாம். சங்குப் பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும். 
  • தேநீர் தயாரிக்க : சங்குப் பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். 
  • சங்குப்பூக்களின் வேர்கள் குடல், வயிறு ஆகியவற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவல்லது.
  • வேர்களை கஷாயமாக வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்த பூச்சிகள் வெளியேறும். 
  • நெய்யில் வறுத்த விதைகளை தேநீராக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இரைப்பை நோய் குணமாகும். 
  • வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் இலைகளை நீரில் காய்ச்சி அதனைக் கொண்டு உள்ளுறுப்புகளை நாளொன்றிற்கு இரண்டு முறை கழுவ விரைவில் சரியாகும்.  
  • நீண்ட நாட்களாக இருக்கும் கபநோய்கள், சிறுநீர் பாதையில் வரும் நோய்களுக்கு இந்த சங்குப் பூ செடியின் பட்டையை நன்கு இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து அருந்த விரைவில் நிவாரணம் பெறலாம்.  
  • கருவுற்றிருக்கும் பெண்களை தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சங்குப் பூ தேநீரை அவ்வப்பொழுது பருகலாம்.  

சனி, 15 மே, 2021

வெப்பாலை

வெப்பாலை 




பெயர்க் காரணம்: பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக்கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. சாலை ஓரங்களில் வெண்ணிற மரப்பட்டைகளுடன் நிறைய வெட்பாலை மரங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். 

அடையாளம்: இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும் இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது. மர வகையைச் சார்ந்த இதன் காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர்.    

மருந்தாக :

  • இது சுரத்தைக் குறைக்கும். சுரத்தால் உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும், சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும்.
  • வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்துக் குடிநீரிட்டு கொடுக்கலாம். 
  • வெட்பாலைக் காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைகொண்ட ‘வெட்பாலை அரிசிக்கு’ செரிமானத் தொந்தரவுகளைப் போக்கும் திறன் உண்டு. 
  • துவர்ப்புச் சுவை மிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு. 
  • செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை.
  • வெட்பாலை அரிசி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. ‘கால்சியம் சேனல் ப்ளாக்கராக’ செயல்பட்டு, இரத்தக் குழாயை விரிவடையச் செய்து அதிகுருதி அழுத்தத்தைக் குறைக்கிறது. 
  • இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘இன்டிரூபின்’ (Indirubin) எனும் வேதிப்பொருளுக்குப் பூஞ்சைத் தொற்றுகளை அழிக்கும் செயல்பாடு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இலைகளிலிருக்கும் ‘ரைடியாடையோன்’ (Wrightiadione) எனும் பொருள், புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. 

வீட்டு மருந்தாக: 

  • இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம். 
  • இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும் பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமன்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகத் தடவும் வழக்கம் தொடர்கிறது. 
  • ஆரம்ப நிலை பல் வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும். 
  • இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல் நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துகள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாகப் பயன்படுத்தலாம். 

வெட்பாலை எண்ணெய்: வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவு நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு, ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். சாதா தோங்காய்  எண்ணெய், எந்த வேதியல் கலவையின் உதவியுமின்றி கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தைப் பார்க்கலாம். 

இந்த எண்ணெயை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும். 

வெட்பாலை நம் வாழ்வை ஆக்கும் பூஞ்சோலை!