புதன், 19 மே, 2021

உத்தாமணி என்ற வேலிப்பருத்தி 




தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகை தான் வேலிப்பருத்தி. இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது, காயத்தை விரைவாக  ஆற்றுகிறது. கல்லீரலை பாதுகாக்கும், இரத்த சர்க்கரை அளவையும், வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.   

மூச்சிரைப்பைப் போக்கும்! 

• வேலிப்பருத்தி  இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு தீரும். 

• ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால் அதன் பெயர் 'கற்பக மிளகு’. இதை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றிலும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம். 

• இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். 

• உத்தாமணி இலைச் சாற்றோடு, சிறிது உப்புக் கூட்டி கொடுக்க வாந்தியுண்டாக்கி கபத்தை வெளியேற்றும். 

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்! 

வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து,   கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து இரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. 

மாதவிடாய் வலிக்கு 

வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டையும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள். 

வாத நோய்க்கு 

• வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால் வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். 

• வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும். 

• மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கு இதன் இலைச் சாற்றோடு சுண்ணாம்பு கலந்து போடும் வழக்கம் உண்டு. 

• உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து, பசை போலச் செய்து வீக்கங்களில் பற்றிட, உடனடியாக வீக்கம் வடியும். 

• இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல் நீங்கும். 

• கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கும் ஒத்தடம்  கொடுக்கலாம். 

குழந்தைகளுக்கு மருந்தாக

• வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும் போது, வேலிப்பருத்தி இலைகளைக் குடிநீரிட்டு ஒரு ஸ்பூன் கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும். 

• வேலிப்பருத்தி இலைச்  சாறுடன் ஊறவைத்த மிளகைப் பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு வாயுக் கோளாறு இம்சைப்படுத்தாது. சுரத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்த ‘வேலிப்பருத்தி மிளகு’ பயன்படும். 

• உத்தாமணி, நொச்சி, பொடுதலை போன்ற மூலிகைகளை வதக்கிச் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வாரமொருமுறை குழந்தைகளுக்குக் கொடுப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். 

• சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு   வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து கஷாயம் செய்து  பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். 

இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக