செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

Heart Disease Part 1 - இருதய நோய்கள் பாகம் 1

இருதயம்

நமது மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இருதயம்  அமைந்துள்ளது. 300 கிராம் எடையுள்ள இருதயம் நிமிடத்திற்கு 60 லிருந்து 90 முறை வரை துடிக்கும், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்தும் செயல்பாடாகும். இருதயம் வருடத்தில் சராசரியாக 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் இரத்தத்தை நாம் உடலுக்குள் பம்ப் செய்கிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இருதயம் மட்டுமே.

இருதயம் வலப்புறம் மற்றும் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது, இந்த இரு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அறைகள் என நான்கு அறைகள் உள்ளன.  இருதயத்தின் வலப்பகுதி உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை நுரையீரலுக்கு செலுத்துகிறது, இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு பின்பு இருதயத்தின் இடபுறத்திற்கு வருகிறது இங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது.
இருதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் மற்றும் வலப்பகுதியில் இரு வால்வுகள் என இந்த நான்கு வால்வுகளும் ஒரு வழி கதவுப் போல் செயல்பட்டு இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்துகின்றன.

மாரடைப்பு 

நம் உடல் உறுப்புகள் இயங்க சத்துப் பொருள்களும் ஆக்ஸிஜனும் தேவை. ஆக்ஸிஜனையும் சத்துப் பொருள்களையும் உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் பணியை இரத்தம் செய்கிறது, இந்த இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்பும் பணியை இருதயம் செய்கிறது, உடல் உறுப்புகளுக்கெல்லாம் இரத்தத்தை அனுப்பும் இருதயத்துக்கும் இரத்தம் தேவை. இருதயத்துக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் வேலையை கரோனரி இரத்தக் குழாய்(Coronary artery) செய்கிறது, இந்த குழாயில் கொழுப்புப் படிந்து இரத்த ஓட்டம் தடைபடும் போது இருதயம் செயலிழக்கிறது, இதனை மாரடைப்பு என்பார்கள்.
இது ஒரு பொதுவான காரணம் என்றாலும் கடுமையான இரத்த சோகை, இரத்தம் உறைவதற்கான பிளேட்டலட்டுகள் அதிகரித்தல், நோய்க் கிருமித் தாக்குதலால் கரோனரி இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைதல். இருதய வால்வு பாதிப்புகள், வால்வு பாதிப்பினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய இருதயப் பெருக்கம், நிலையற்ற இருதயத் துடிப்பு ஆகியவையும் காரணம்.

மாரடைப்பு எந்த வயதில் வரும்

மாரடைப்பு எந்த வயதிலும் வரலாம். சிறுவயதில் கூட வர வாய்ப்புள்ளது. இருப்பினும் பெரும்பாலும் நடுத்தர வயது மற்றும் முதுமையில்தான் மாரடைப்பு வருகிறது. உணவு கலாச்சார மாற்றத்தால் இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
மாரடைப்புதான் (Massive Heart Attack). முன்பெல்லாம் 50 - 60 வயதில்தான் மாரடைப்பு வரும். ஆனால் இப்போது காலம் மாறிப்போச்சு. 30 வயதிலேயே மாரடைப்பு வருது. என்ன, ஏதுன்னு கேட்பதற்குள்ளேயே உயிர் பிரிந்துவிடுகிறது.
சரி, இப்படி அறிகுறியே இல்லாமல் ஆளைச் சாய்த்துவிடும் மர்மம் என்ன? இதைத் தடுக்க வழியே இல்லையா. எல்லாருமே இப்படி மாரடைப்பால் இறப்பது இல்லையே. அப்படியானால் யாருக்கு வரும். யாருக்கு வராது. இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் எழும்.

எல்லோருக்கும் மாரடைப்பு வருவதில்லை. ஆனால் வயதாக, வயதாக மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் அதிகமாகின்றன. வாழ்க்கை முறை மாற்றம் (Life Style Change) , கட்டுப்பாடில்லாத, ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை காரணமாக அமைகிறது.


மாரடைப்பு ஆண் பெண் வேறுபாடு உண்டா

மாதவிடாய்க் காலம் வரை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆனால் அதற்கான அறிகுறிகள் சிறிது வேறுபாடு இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம் என்பது முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் மாரடைப்பு, மூளைவாதம்  அல்லது பக்கவாதம் தாக்கக்கூடிய வாய்ப்புகள் சாதாரண பெண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன. இந்த பாதிப்பானது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆண்களுக்கு மார்புக்கு நடுவில் பாரம் மற்றும் அழுத்தத்தை உணர முடியும். அதே போல் பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் திணறல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம், தலைவலி ஆகியவற்றை உணருவார்கள்.

நெஞ்சு வலி மாரடைப்பு இரண்டும் ஒன்றா

நெஞ்சு வலி என்பது வேறு, மாரடைப்பு என்பது வேறு. மாரடைப்பு இருதயத்துடன் தொடர்பாக இருக்கும். நெஞ்சுவலி வருவதற்க்கு இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம். அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம். நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம். பரிசோதனைகள் நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை   மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது, கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும்.
நெஞ்சில் வலி வந்தால், அது வாய்வு வலியாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
இருதயத் தமனிக் குழாய் உள் அளவில் சுருங்கும் போது, இருதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய இரத்தத்தின் அளவு குறைகிறது நாம் ஓய்வாக இருக்கும் பொது இருதய திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்து விடும், ஆனால் உழைப்பு அதிகப்படும் போது இருதயத் திசுகளின் தேவையும் அதிகரிக்கிறது குறுகிவிட்ட இருதய தமனியல் இந்த தேவையை ஈடு செய்ய இயலாது அந்த நேரத்தில் இருதய திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருதய தசைகள் எழுப்புகின்ற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.
சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பாக இருக்கும் என்று எண்ணி தேவையில்லாமல் பயப்பட வேண்டியது இல்லை. 
பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இருதய நோய்கள் காரணமாக இருக்காது, வேறு காரணங்கள் தான் இருக்கும். 
நெஞ்சு வலியில் முக்கியமான இரண்டு, ஒன்று ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இருதய வலி, மற்றொன்று மாரடைப்பு, இரண்டாவதை அலட்சியப்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

நெஞ்சு வலி அறிகுறிகள் 

மாடிப் படிகளில் ஏறும் போதும், வேகமாக நடக்கும் போதும், கடினமான வேலையில் எடுபடும் போது நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும், ஓய்வு எடுத்துக்கொண்டால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு அறிகுறிகள்

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும், இந்த வலி, தாடை, கழுத்து, அக்குளில் வலி, இடது புஜம், இடதுபக்க மணிக்கட்டில் வலி இந்த வலியானது கை விரல்களுக்கு பரவும், உடல் முழுவதும் வலிக்கும், உடல் அதிகமாக வியர்க்கும், ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது கூடிக்கொண்டே போகும், நெஞ்சில் வலியுடன் மூச்சுத் திணறல் ஏற்படும், குமட்டல் மற்றும் மயக்கம் வருவது போல் உணர்வர் இதுதான் மாரடைப்பு. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் வலி இருந்தால் தீவிர நிலையாகும்,  இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.

நெஞ்சு வலி காரணங்கள்

நுரையீரல் நோய்கள்

நிமோனியா காய்ச்சலால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு, மார்பில் அடிப்பட்டதால் ஏற்படும் நுரையீரல் சரிவு, கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும், அதிக இருமல் காரணமாக நெஞ்சு வலி வரும், நுரையீரல் பாதிப்பு காரணமாக காய்ச்சல், சளி ஏற்படும் மூச்சு விட்டால் கூட வலி ஏற்படும். பசி குறையும், இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுத்தர வயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம், சளியில் இரத்தம் கலந்து வரும், பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும்.  நுரையீரல் இரத்த உறைவுக் கட்டி  காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் இரத்த குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

விலா பகுதியில் ஏற்படும் பாதிப்பு 

மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வலி வரலாம், வலியுள்ள பகுதியை தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும், உடல் அசைவின் போதும், மூச்சுவிடும் போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது தசைப் பிசகு, மார்பு விலா எலும்பு முறிவு போன்றவை இந்த நெஞ்சு வலியை ஏற்படுத்தும்.

உணவுப்பாதை புண்கள்

தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும் போது நெஞ்சில் வலிக்கும்.

பிற நோய்கள்

இரத்த குழாய் வீக்கம், இருதய வெளியுறை அழற்சி நோய், அக்கி, அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். நெஞ்சு வலிக்கு காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.

பிறவி இருதய குறைபாடு

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சில குழந்தைகளுக்கு இருதய வால்வில் ஓட்டை அல்லது கசிவு ஏற்பட்டு பின்னர் இருதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிறவி இருதயக் குறைபாடுகளில் சில எந்தவித அடையாளங்களும் இன்றி காணப்படும். வளர்ந்த வயதான குழந்தைகள் சீக்கிரம் சோர்வடைந்து விடுவர் அல்லது மற்ற வேலைகளை செய்யும் போது சுவாசக் குறைவு ஏற்படும்.
உடற்பயிற்சியின் போது ஏற்ப்படும் சோர்வு, சுவாசக்குறைவு, நுரையீரலில் நீர் மற்றும் இரத்தம் சேர்தல்பாதம்கணுக்கால்கால்களில் நீர் சேர்தல் ஆகியவை இருதய இயக்கக் குறைவின் அடையாளங்களாகும். சில குறைபாடுகள் பெரியவர்களாகும் வரை கண்டறிய முடிவதில்லை.

இருதயம் செயலிழத்தல் (Heart Failure) ஹார்ட் ஃபெலியர் மற்றும் மாரடைப்பு

ஹார்ட் அட்டாக் (Heart Attack) - ஹார்ட் ஃபெய்லியர் என பிரித்துச் சொல்கிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டும் ஒன்றல்ல.

இருதயம் செயலிழத்தல் 

இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலையையே இருதயம் செயலிழத்தல் (Heart failure) என்கிறோம். இருதயத்தின் செயல்திறன் குறைவதால் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது. பொதுவாக முதுமையில்தான் ஹார்ட் ஃபெய்லியர் வர வாய்ப்புள்ளது. அது தவிர ருமாட்டிக் காய்ச்சலால் இருதய வால்வு பாதிக்கப்படுவது. உயர் ரத்த அழுத்தம், கரோனரி இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது உள்பட வேறு சில காரணங்களாலும் இருதயத்தின் பம்பிங் திறன் குறைந்துவிடுகிறது.
இருதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும் என்றுதானே பார்த்தோம். அடைப்பு இருந்தால் சிலருக்கு இருதயம் செயலிழக்கும். இரத்தம் இருதய தசைகளுக்கு வராமல் போவதால், தசை நார்கள் செயலிழந்து ஹார்ட் ஃபெய்லியர் ஏற்படுகிறது. கார்டியோ மையோபதி என்று கூறப்படும் இருதயத் தசைகளில் ஏற்படும் தொய்வு நோய் காரணமாகவும் ஹார்ட் ஃபெய்லியர் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இருதயத்தின் மிகச் சிறு இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு இருதய அறைகள் விரிவடைந்து கார்டியோ மையோபதி ஏற்படுகிறது.

அறிகுறிகள்: ஹார்ட் ஃபெய்லியர் ஏற்பட்டால் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அதிகமாக மூச்சு வாங்கும். மாடிப்படிகளில் ஏறும்போது அதிகமாக மூச்சு வாங்கினால் உஷாராகிவிட வேண்டியதுதான். நுரையீரலில் ரத்தம் தேங்கும் போது தான் மூச்சுத் திணறல் வருகிறது. நுரையீரலில் ரத்தம் தேங்கும்போது அங்கே இரத்த அழுத்தம் அதிகமாகிறது.
இரத்த அழுத்தத்தின் காரணமாக சிறு இரத்தக் குழாய்கள் வெடிக்கின்றன. இதனால் இருமும்போது சளியுடன் ரத்தமும் வருகிறது. மேலும் நுரையீரலில் இரத்த அழுத்தம் அதிகமாகும்போது அங்கு ஆக்ஸிஜன் - கார்பன் டை ஆக்சைடு மாற்றம் தடைபடுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இருதய வால்வுக் கோளாறு அறிகுறிகள் என்ன?

இருதய வால்வுக் கோளாறு இருந்தால் மூச்சு இரைப்பு அதிகமாக இருக்கும். கை, கால்களில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சோர்வு அதிகமாக இருக்கும். ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்து விடும்: இருதய வால்வு ஓட்டை இருந்தால் அல்லது கசிவு இருந்தால் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். பெரிய கருவிகள், சோதனைகள் தேவையில்லை.

இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கேட்டாலே கோளாறைக் கண்டுபிடித்துவிட முடியும். இருதயத்தில் வித்தியாசமான ஓசை கேட்டால் கோளாறு இருப்பதாக அர்த்தம். உடனடியாக இருதய சிறப்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

இருதயம் பற்றி நான் படித்த மற்றும் அறிந்த பல்வேறு விஷயங்களை இந்த பதிவில் பதிவு செய்திருக்கிறேன், தவறு இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.  எனது அடுத்த பதிவில் [இருதயம் பாகம் 2]ல் இருதய நோய்க்கான அறிகுறி, காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை பதிவு செய்கிறேன்.  

1 கருத்து: