திங்கள், 4 ஜனவரி, 2021

சர்க்கரை நோய் - Diabetes

சர்க்கரை நோய் ஒரு பார்வை 

தமிழர்கள், `தலைவாழை இலைபோட்டு விருந்து பரிமாறியவர்கள்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள். இனிப்பில் தொடங்கி இனிப்பில் நிறைவடைவது நம் பண்டிகை விருந்து. ஆனால் இன்று தெருவுக்குத் தெரு இனிப்பில்லாத (Sugar free) ரொட்டிகள், குக்கீஸ்கள் மற்றும் சாக்லேட்டுகளை விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்கள் பெருகிவிட்டன. 

ஓடிஆடி விளையாடும் குழந்தைகள் தொடங்கி, வயது வித்தியாசமில்லாமல் ஏதேனும் ஒரு மைதானத்தில் எல்லோரும் மூச்சிரைக்க நடந்து கொண்டிருக்கிறார்கள். போகிறபோக்கில் வேப்பங்கொழுந்தையும் ஆவாரம்பூவையும் கிள்ளி வாயில் போடுகிறார்கள். மைதானத்தின் முகப்பு வாயிலில் கேழ்வரகுக் கஞ்சியும் ஆவாரம்பூ தேநீரும் விற்கப்படுகின்றன. ஒட்டுமொத்த மனிதர்களும் ஏதேனும் ஒரு நோய்க்கு மிரண்டு, அச்சத்தோடும் பதற்றத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளின் உணவுப் பைகளுக்கு மாற்றாக, இன்சுலின் மருந்துகள் இடம்பெற்ற துயரத்தை யோசிக்க வேண்டும்.

`டயாபடீஸ்’ (Diabetes) எனப்படும் சர்க்கரைநோய் என்பது நோய் அல்ல. இன்சுலின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு (Hormonal dysfunction) என்கிறார்கள் மருத்துவர்கள். சர்க்கரைநோய் குறைபாட்டால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களில் அதிகமானவர்களுக்கு இன்சுலின் குறைபாடு இருக்கிறது. 

சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இதன் தாக்கத்துக்கு ஆளானவர்கள் குழந்தைகள் (1 - 2 வயது), 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் குறிப்பாக 10 முதல் 18 வயதுடைய வளர் இளம் பருவத்தினர். இளம் தலைமுறையினரைக் குறிவைக்கும் சர்க்கரை நோயைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டியது அவசியம்.

இயல்பாகவே வியத்தகு ஆற்றல் உடையது மனித உடல். உயிர்ச் செல்கள் அவ்வளவு எளிதாகத் தங்களை மாய்த்துக் கொள்வதில்லை. நோய்க்கிருமிகளுடன் சண்டைபோட்டு தற்காத்துக் கொள்கின்றன. ஹார்மோன்களும் நீர்ச்சத்துகளும் வேதியியல் கூறுகளும் தன்னியல்பாக தங்களைத் தாங்களே சமன் செய்துகொள்வது (Milieu interieur) ஆச்சர்யமான செய்தி. அடிப்படையான அதன் இயக்கநிலையைப் புரிந்துகொண்டால்தான் மனித உடலின் போராட்டம் புரியும். கணையத்தில் ஆல்பா (Alpha) மற்றும் பீட்டா (Beta) செல்கள் இருக்கின்றன. ஆல்பா செல்கள் குளூகோகான் (Glucagon), பீட்டா செல்கள் இன்சுலின் (Insulin) ஹார்மோனைச் சுரக்கின்றன. சாப்பிடும் உணவிலுள்ள குளுக்கோஸ் சத்துகள், திசுக்களால் உட்கிரகிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான  அளவு ரத்தத்தில் கலக்கின்றன. இதற்கு மூல காரணமாக இருப்பது இன்சுலின்.

மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணும்போது ரத்தத்தில் குளூக்கோஸின் அளவு அதிகரிக்கும். அந்த நிலையில் இன்சுலின் தேவையான அளவு உற்பத்தியாகி, அதைச் சரிசெய்யும். இதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடாமலிருப்பது, விரதம் மற்றும் உணவுக்கட்டுப்பாடு நேரங்களில் ஆல்பா செல்கள் குளுகோகானை உற்பத்தி செய்து குளுக்கோஸ் அளவைச் சமன்செய்யும். இவை கைமீறிப்போன தருணங்களில்தான் நோய் தன் வீரியத்தைக் காட்டத் தொடங்கும்.

சர்க்கரைநோயில் பல வகைகள் இருக்கின்றன. டைப் - 1 (TYPE - 1), டைப் -2 (TYPE - 2), கர்ப்பகால சர்க்கரைநோய் (GDM - Gestational Diabetes Mellitus). இன்சுலின் சுரக்காமல் இருப்பதை `டைப்-1 சர்க்கரைநோய்’, இன்சுலின் சுரந்தும் பயனற்ற நிலையில் இருப்பதை `டைப்-2 சர்க்கரைநோய்’ எனவும் சொல்கிறார்கள்.

டைப்-1, டைப்-2 சர்க்கரை நோய் என்றால் என்ன?

நம் உடலுக்குப் போதுமான அளவு வலிமை தருவது குளுகோஸ் எனப்படும் சர்க்கரைதான். ரத்தத்தில் இதன் அளவு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும். சுமார் 40 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன. அவற்றில் அதிக பாதிப்பு கொண்டிருப்பது டைப்-1 மற்றும் டைப்-2 வகையே. 

பெரும்பாலும் டைப்-2 சர்க்கரை நோய், 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்குத்தான் ஏற்படும். இவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இவர்கள், சர்க்கரை நோய் இருக்கிறதா என்று உறுதிசெய்தவுடன், உடல் எடையைக் குறைப்பது அவசியம். கட்டுப்பாடான டயட் பின்பற்றுவது நல்லது. நிச்சயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சீராக மாத்திரை அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு, பெரும்பாலும் இன்சுலின் தேவைப்படாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர், இந்த டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் தான்.

ஆனால், டைப்-1 சர்க்கரை நோய் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தான் பாதிக்கும். பிறந்த குழந்தைக்குக்கூட இந்த டைப்-1 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரியவர்களுக்கும் டைப்-1 ஏற்படலாம். இவர்கள், நிச்சயமாக வாழும் காலம் வரை இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து முறை வரை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது சிறந்தது.

டைப்-1 நோயை எப்படித் தடுப்பது?

இதைத் தடுக்கவும் முடியாது, குணப்படுத்தவும் முடியாது. ஆனால், இன்சுலின் எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட காலம் நலமோடு வாழ முடியும். இன்சுலினைத் தவிர, வேறு எந்த மருந்தாலும் இந்த டைப்-1 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மாற்று மருந்தைத் தேடி போக வேண்டாம். அது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சிகிச்சைக்கு முன், உண்மையில் டைப்-1 நோய்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். இன்சுலின் ஊசிக்குப் பதிலாக இன்சுலின் பம்ப் உபயோகிக்கலாம்.

டைப்-1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம்?

எந்த வகை சர்க்கரை நோய்க்கும், உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கண்டிப்பாக இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். கடலை, பயறு, சுண்டல், சோயா, காளான், மீன், கோழி போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவதும் அவசியம். டைப்-1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். பெற்றோர்கள் பாசிட்டிவ்வாக இருந்தால், நிச்சயம் குழந்தைகளின் உடல்நிலையும் பாசிட்டிவ்வாக மாறும்.

கணைய மாற்று சிகிச்சைமூலம் டைப்-1 சர்க்கரை நோயை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆனால், கணையம் கிடைப்பதிலிருக்கும் சிக்கல்கள் ஏராளம். உயிரோடு இருப்பவர்களிடமிருந்து கணையத்தை எடுக்கவே முடியாது. ஒருவரின் உயிர்நாடி நின்றதும், உடல் உறுப்பில் முதலில் பாதிப்படைவது கணையம்தான். இறந்தவர்களிடமிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் கணையத்தை எடுத்து மாற்றி அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து நேரிடும். இது சாத்தியம். ஆனால், சாத்தியத்தின் அளவு மிகவும் குறைவு. இதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கர்ப்ப கால சர்க்கரைநோய் நிரந்தரமானதா?

கர்ப்ப கால சர்க்கரை நோய், கர்ப்பமடையும் அனைவருக்கும் ஏற்படாது. கருவுற்று இரண்டாவது ட்ரைமெஸ்டெரில் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பயப்படவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் இதற்கான சில சிகிச்சை முறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 50 முதல் 70 சதவிகிதம் வரை மீண்டும் சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இது, டைப்-2 நோயாக மாறிவிடும். எனவே, தொடர்ச்சியாக சோதனை செய்துகொள்வது அவசியம்.

ஏற்கெனவே, டைப்-1 நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு, கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவு நிச்சயம் அதிகமாகும். இவர்கள், கர்ப்பத்திற்கு முன் சர்க்கரையின் அளவைச் சீராக்கிக் கொள்வது சிறந்தது. இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சீரான சிகிச்சை மூலம், தாயிடமிருந்து குழந்தைக்கு சர்க்கரை நோய் பரவாமலிருக்கும். இது, நோய் இல்லை. உடலில் ஏற்படும் சிறிய குறைபாடு மட்டுமே. குழந்தைகளை அரவணைப்போடு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள், பல சாதனைகள் படைப்பதைக் கண்முன்னே பார்க்கலாம்.

தாழ் (குறை) சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma ) பற்றி தெரிந்து கொள்ளலாம்

சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை எடுத்து வருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது ரத்தத்தில் சர்க்கரை குறைவது, இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள 

டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒரு முறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுகோகன் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.

ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் 

• உணவுக் கட்டுப்பாடு, 

• மாத்திரை, 

• இன்சுலின் ஊசி 

ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.

எது தாழ்(குறை) சர்க்கரை

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லி வைத்தது போல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. 

• ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். 

• சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். 

• இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.

எப்படி வருகிறது

சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். 

வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும்.

ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். 

இதன் விளைவாக மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். 

மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுகோகன் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக் கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.

ஆரம்ப அறிகுறிகள்

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

• உடல் அதிகமாக வியர்ப்பது.

• உடல் குளிர்ச்சியாக இருப்பது.

• உடல் தளர்ச்சி.

• படபடப்பு.

• உடல் நடுக்கம்.

• அதிகப் பசி.

• தலைவலி.

• தலைசுற்றல்.

• பார்வை குறைவது.

• இதயத் துடிப்பு அதிகரிப்பது.

அடுத்த கட்ட அறிகுறிகள்……

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்

• பேச்சு குழறுதல்.

• மனக் குழப்பம்.

• அரை மயக்கம் (Semiconsciousness).

இறுதி கட்ட அறிகுறிகள்

• வலிப்பு வருவது.

• முழு மயக்கம் (Unconsciousness).

• கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.

முழு மயக்கம் ஏற்பட்டால்

முழு மயக்கத்தில் உள்ளவருக்கு   முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.

டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்

வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.

தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது

• தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.

• இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.

• தாமதமாகச் சாப்பிடுவது.

• விரதம் இருப்பது.

• நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக் கொள்வது.

• அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.

• கடுமையாக உடற்பயிற்சி செய்வது.

• வெறும் வயிற்றில் மது அருந்துவது.

யாருக்கு வருகிறது

கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

• இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.

• டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.

• சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.

• முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)

• மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.

• கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.

இவர்கள் என்ன செய்ய வேண்டும்

கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

• ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

• தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

• இன்சுலின் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

• 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

• குளுகோகன் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.

• தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டு விட வேண்டும்.

• வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.

• குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

• தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

• படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

என்ன முதலுதவி

தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி……???

• குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் (குறை) சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.

• குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.

• மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

• கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.

• இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

• முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும். 

பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.

தடுப்பது எப்படி

• நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.

• இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.

• டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.

• இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.

• இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.

• அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.

குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்

டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத் தான் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும்,

• அதிகம் பசிக்கும், 

• வியர்க்கும், 

• படபடப்பு வரும், 

• நாக்கு உலரும், 

• உடல் நடுங்கும், 

• பார்வை குறையும். 

• குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும் 

• குழப்பமான மனநிலையில் இருக்கும். 

இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும், மயக்கம் வரும் சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது. 

டைப் 2 சர்க்கரை நோய்

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். இது குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினரையும் பாதிக்கிறது. மாறி வரும் தவறான உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சர்க்கரையை நம் உடலில் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் சில உணவுப் பொருள்களே சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றன. 

சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் எளிய உணவு முறை

துளசி: 

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

ஆளி விதை (Flax seeds):

ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைப் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

இலவங்கப்பட்டை: 

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடியை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரையின் அளவு குறைவதோடு, உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதய நோய்க்கான அபாயம் குறையும்.

க்ரீன் டீ:

க்ரீன் டீயும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த பாலிஃபீனால்கள் (Polyphenol) தான் காரணம். எனவே காலையில் எழுந்ததும் அல்லது உணவு உண்பதற்கு முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

முருங்கைக்கீரை: 

முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து சாறாக்கி, காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும்.

பாகற்காய்: 

சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாரத்துக்கு ஒருமுறை பாகற்காயைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இன்னும் வேகமான பலன் கிடைக்க, மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

வேப்பிலை: 

வேப்பிலைக் கொழுந்து எடுத்து அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு, கட்டுப்பாட்டுடன் இருக்கும். 

தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் மாத்திரை எதுவுமின்றி குணமாகும்.

நாவல் பழம்:

தினமும் காலையில் 5 முதல் 6 நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எல்லாக் காலங்களிலும் நாவல் பழம் கிடைக்காது என்பதால், அதன் விதைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய்: 

நெல்லிக்காய், கறிவேப்பிலை ஜூஸ் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து நறுக்கி 3 ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வடிகட்டி அரை எலுமிச்சம்பழத்தின் சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து காலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் ருசித்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும். இதேபோல் ஒரு நெல்லிக்காய் அதைவிட இரண்டு மடங்கு அளவில் பெரிய பாகற்காய் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

திரிபலா சூரணம்:

தொடக்கநிலை சர்க்கரை நோயாளிகள் மற்றும் பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

குறிப்பு : நெல்லிக்காய் வற்றல், கடுக்காய்த் தோல், தான்றிக்காய்த் தோல் ஆகியவற்றின் கலவையே திரிபலா சூரணம்.

திரிபலா சூரணத்தை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காலை / இரவு ஒரு வேளை சாப்பிடவும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை மற்றும் இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.

ஆவாரம்பூ:

ஆவாரம்பூ 200 கிராம், சுக்கு சிறு துண்டு, ஏலக்காய் 3, உலர்ந்த வல்லாரை இலை 200 கிராம், சோம்பு இரண்டு டீஸ்பூன் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மி.லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பாதியாக வற்றியதும் தேவையான அளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

எள் 

5 கிராம் அளவு கருப்பு எள்ளை எடுத்து நன்கு காய வைத்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு ஆவாரம் பூவை எடுத்து நன்கு உலர்த்தி காய வைத்து பொடி செய்யவும். இரண்டு பொடியையும் கலந்து சாப்பிட்டு வெந்நீர் பருகி வந்தால் நீரிழிவு குறையும்.

வெந்தயம் 

வெந்தயத்தைப் பயன் படுத்தி ஆரம்ப நிலை சர்க்கரை இருக்கும்போது சர்க்கரை கட்டுக்குள் வரும் அதற்கு வெந்தயத்தைப் பயன்படுத்தும் முறை இங்கே கொடுக்கப் படுகிறது 

வெந்தயப் பால் செய்யும் முறை

உடல் எடைக்கு பாதியளவு கிராம் அளவுக்கு வெந்தயத்தை எடுத்து ( எழுபது கிலோ எடை இருப்பவர் முப்பத்தி ஐந்து கிராம் வெந்தயம் பயன்படுத்த வேண்டும்)

ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை மட்டும் துணியில் முடிந்து மூன்று நாட்கள் முளை கட்ட வேண்டும்.

நான்காவது நாள் காலையில் எடுத்து மிக்ஸியில் போட்டு இருநூறு மில்லி கொதிக்கும் நீரை விட்டு அரைத்து துணியில் பிழிந்து கிடைக்கும் பால் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இது கஷ்டமென்றால்

  • மூன்று நாட்கள் முளை கட்டிய வெந்தயத்தை அப்படியே மென்று தின்று விழுங்கலாம் 
  • இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர படிபடியாக சர்க்கரை நோய் குறையும்.
  • சிலர் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலை சாப்பிடுவார்கள் அது தவறு வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துதான் இரவு ஊறவைத்து காலை சாப்பிட வேண்டும்.

கீரைகள் 

தினசரி உணவில் குறைந்தது நூறு கிராம் கீரையாவது மதியம் உணவில் சேர்க்க வேண்டும் எந்தக் கீரை என்றாலும் பயன்படுத்தலாம் முருங்கைக் கீரை வெந்தயக் கீரை வல்லாரைக் கீரை அகத்திக் கீரை மணதக்காளிக் கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை என்று எந்தக் கீரை என்றாலும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் 

அருகம்புல் 

  • ஒரு கைப்பிடி அருகம்புல் 
  • ஒரு பத்தை தேங்காய் 
  • ஒரு தேக்கரண்டி சீரகம்

ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் அல்லது காலை பதினொரு மணி அளவில் குடிக்க வேண்டும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இவ்வாறு குடித்து வர 

உடல் எடை குறையும் இன்சுலின் போட்டுக் கொண்டு இருப்பவர்களின் தேவையற்ற எடை அதிகரிப்பு கட்டுக்குள் வரும், உடல் சுறுசுறுப்பு அடையும், உடல் சோர்வு குறையும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையும் 

குறிப்பு 

காலை வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுபவர்கள் காலை பதினொரு மணி அளவில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.

இரண்டு மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டாம் அப்படி பாதுகாப்பான மருத்துவ முறையை பின்பற்றுவதாக இருந்தால் நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். உதாரணமாக துளசி  சாப்பிடுவது, கீரீன் டி குடிப்பது.

புதினா

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயே வராது எனவே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் புதினாக் கீரையை சேர்த்து வர வேண்டும் 

முருங்கைக்கீரை

வாரம் நான்கு நாட்களாவது முருங்கைக் கீரை சூப்பாகவோ உணவாகவோ அல்லது நிழலில் காயவைத்து அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

மஞ்சள் பூசணி

சர்க்கரை அதிகமான அளவு 400 -- 500 என்று இருக்கும்போது கூட மஞ்சள் பூசணிக்காயை உணவில் தினமும் சேர்த்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

மருந்துகளை மட்டுமே நம்பி இல்லாமல் இந்த உணவு முறைகளைப் பின்பற்றி வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். படிப்படியாக எந்த மருந்து மாத்திரைகளும் இன்றி நோய் கட்டுக்குள் வைத்து நலமுடன் வாழலாம்.

சர்க்கரை நோயாளிகள் ஏன் 3 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் HbA1c பரிசோதனை செய்யணும் தெரியுமா?

ஒரு நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஹெச்.பி.ஏ.1.சி.( HbA1c) அல்லது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அல்லது கிளைகோஹெமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை நடத்தப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சரிசெய்ய ஒரு மருத்துவருக்கும் இச்சோதனை உதவுகிறது. இந்த சோதனை ஆரோக்கியமான நபருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் உதவிடும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

ஹெச்.பி.ஏ.1.சி. என்றால் என்ன? 

ஹெச்.பி.ஏ.1.சி. என்பது கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சுருக்கமாகும். ஹெச்.பி. = ஹீமோகுளோபின் ஏ1சி = ஹீமோகுளோபின் வகை ஹெச்.பி.ஏ.1.சி. = ஹீமோகுளோபினின் கிளைகேட்டட் வடிவம் குளுக்கோஸ் துகள்கள் ஹீமோகுளோபினுடன் பிணைக்கும் போது, கிளைகேட்டட் ஹீமோகுளோபின் உருவாகிறது. இந்த பிணைப்பு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவிற்கு விகிதாசாரமாகும். இந்த சோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அல்லது குளுக்கோஸின் செறிவை அளவிட உதவுகிறது. இரத்தத்தில் அதிகரிக்கும் இரத்த சிவப்பு அணுக்கள் இரத்தத்தை இனிமையாகின்றன. சுருக்கமாக, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் அளவு அதிகமாக இருக்கும்போது, அந்த நபர் நீரிழிவு நோயாளி என்று அர்த்தம். குறைந்த அளவு இருப்பின், அவர் ஆரோக்கியமான, நீரிழிவு அல்லாத நபராக கருதப்படுகிறார்.

ஹெச்.பி.ஏ.1.சி. எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுப்பது இந்த இரத்த அணுக்கள் தான். ஹீமோகுளோபினின் வாழ்நாள் 3-4 மாதங்கள் வரை தான் நீடிக்கும். அதன் பின்னர் அவை முற்றிலுமாக புதுப்பிக்கப்படும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனையானது, கடந்த 3-4 மாதங்களில் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை தான் அளவிடுகிறது. நீரிழிவு நோய் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம், நீங்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோயாளிக்கு எச்.பி.ஏ.1.சி. ஏன் கண்காணிக்கப்பட வேண்டும்?

ஏற்கனவே கூறியது போல, ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரையை, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் செறிவை ஹெச்.பி.ஏ.1.சி. மூலம் அளவிடலாம். எனவே, இது நீரிழிவு நிலையை கண்காணிக்க உதவும், ஒரு குறிப்பு அளவுருவாகவே இந்த ஹெச்.பி.ஏ.1.சி. கருதப்படுகிறது. சராசரி அளவை கண்டறிய குளுக்கோஸ் அளவுகளில் உள்ள அனைத்து ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்வதற்கு இந்த ஹெச்.பி.ஏ.1.சி. உதவுகிறது. 

இந்த சோதனையின் நோக்கங்களாவன.. 

* கிளைசெமிக் கட்டுப்பாட்டைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளவும் 

* நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், இன்சுலின், உடற்பயிற்சிகள் போன்ற சிகிச்சையில் நிலை மற்றும் உதவி மாற்றங்களை கண்காணிக்கவும் 

* நீரிழிவு சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை பகுப்பாய்வு செய்யவும். 

ஆகையால், ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை, இரத்த சர்க்கரை அளவுகளுக்கு இணங்க ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையை செய்து, அதிகரித்த அளவிற்கு காரணமாக இருக்கக்கூடிய சிக்கல்களைத் தடுத்திடவும். தேவைப்பட்டால், அளவைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு மருத்துவரையும் கூட அணுகிடலாம். ஆனால். நீரிழிவு நோயாளிகள் தவறாமல் ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனை மேற்கொள்ள மட்டும் தவறாதீர்கள்.

ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது? 

ஒவ்வொரு 3 அல்லது 4 மாதங்களுக்கும் இல்லையென்றால், நீரிழிவு நோயாளிகள் இந்த பரிசோதனையை வருடத்தில் இரண்டு முறையாவது செய்ய வேண்டியது அவசியம். இந்த சோதனையின் சிறந்த பகுதி என்னவென்றால், இது எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம் மற்றும் சாப்பிடுவதற்கு முன்பு சோதனை செய்ய தேவையில்லை. ஹெச்.பி.ஏ.1.சி. முடிவுகள் சதவீதத்தில் காட்டப்படுகின்றன. இந்த மதிப்பு மொத்தத்தில் கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சதவீதமாகும். 4 முதல் 5.6% இயல்பானது, 6.5% மற்றும் அதற்கு மேற்பட்டவை உடலில் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அதிக சதவீதத்தைக் காட்டுகின்றன. 

இந்த சோதனையை நடத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அறிவுரைகள்.. 

  • நோயாளியின் வயது 
  • அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயின் வகை 
  • அவர்கள் பின்பற்றும் சிகிச்சை (மருந்து, இன்சுலின் போன்றவை)
  • அவற்றின் நிலை தொடர்பான சிக்கல்கள்

நீரிழிவு நிலையைக் கட்டுப்படுத்த கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. எப்போதும், ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள தவறவே கூடாது. மிக முக்கியமானது என்னவென்றால், சரியான இடைவெளியில் இரத்த சர்க்கரை மற்றும் ஹெச்.பி.ஏ.1.சி. சோதித்துப் பார்ப்பது, நீரிழிவின் நிலைமையை நிர்வகிக்க உதவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக